Friday 14 March 2014

தசாவதாரம் எட்டு பலராமன் அவதாரம்




பலராமன் அவதாரம்

பெருமாளின் அவதாரங்களில் இது 8வது அவதாரமாகும்: கோகுலத்தில் விஷ்ணுவின் அம்சமாக வசுதேவருக்குப் பிறந்த பிள்ளை பலராமன். பெருமாள் வெண்ணிறத்தில் தோன்றிய அவதாரம் இது. ராமாவதாரத்தில் தம்பியாக இருந்த லட்சுமணனை தனக்கு அண்ணனாக விஷ்ணு ஏற்றதாகக் கூறுவர்.

அசுரர்களே அரசுபரிபாலனம் செய்தனர் என்றாலும் அவர்களை விட்டு ஆணவம் குறையவில்லை. அதனால் அவர்களுடைய பாரம் பூமிதேவியை வருந்திற்று. அவள் தன் குறையைப் பிரம்ம தேவனிடம் முறையிட்டாள். பிரம்மா பாற்கடலுக்குப் போய் புருஷக்தம் என்ற மந்திரத்தால் தேவர்களுடன் கூடிப் பரந்தாமனைத் துதித்தார். அப்போது ஓர் அசரீரி வாக்கு அவர்களுக்கு கேட்டது. பிரம்மதேவனே! தேவர்களே! பூமியின் துயரத்தை நான் அறிகிறேன். தேவர்கள் யதுகுலத்தில் பிறக்கட்டும். தேவமாதரும் கோபியராக அங்கு ஜனனம் செய்யட்டும். நீங்கள் யது குலத்தில் பிறந்து என் வரவுக்காகக் காத்திருங்கள்! என்று கட்டளை பிறந்தது. அதன் பின் தன் லோகத்திற்கு அவர்கள் போயினர். சூரசேனன் என்ற அசுரன் மதுரையை ஆண்டு வந்தான். மத்ரா என்றும் மதுரையைக் கூறுவார்கள். சூரசேனனுக்கு ஒரு தம்பி. அவன் பெயர் உக்கிரசேனன். அவன் மகன் கம்ஸன். ராஜகுமாரியாகிய தேவகிக்கும், வசுதேவர் என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணம் ஆனதும் தம்பதியர் திருமண மண்டபத்தில் இருந்து ஊர்வலமாக வீடு திரும்ப ரதத்தில் ஏறினார்கள். அந்த ரதத்தை ஓட்டுவதற்கு தேவகியின் சிற்றப்பா மகனும் அண்ணனுமாகிய கம்ஸன் குதிரைகளின் கடிவாளத்தைக் கையில் பிடித்தான். ஊர்வலம் சீரும் சிறப்புமாக மங்கள வாத்தியங்கள் முழங்க வந்து கொண்டு இருந்தது. அப்போது கம்ஸனுக்கு ஓர் அசரீரி கேட்டது. மதியற்றவனே! கம்ஸா, கேள்! உன் தங்கை தேவகிக்கு நீ ரதசாரதியாக இப்போது இருக்கிறாய். அந்த ராஜகுமாரியின் எட்டாவது குழந்தை உன் உயிரை வாங்கப் போகிறது என்று அசரீரி சொல்லியது. அப்போதே கம்ஸன் தேவகியைக் கொன்று விட்டால் தன் மரணப் பிரச்சனையே இல்லாமல் போய்விடும் என்று வாளை உருவி அவளைக் கொல்லப் போனான். அப்போது தேவகியை மணந்த வசுதேவன் கம்சனிடம் நல்ல வார்த்தை சொல்லி, நீ என் மனைவியாகிய புதுமணப் பெண்ணை, மணக்கோலம் கலையாது இருக்கும் கன்னியைக் கொல்லும் பாவம் மிகவும் கொடியது. மேலும் அசரீரி இவளுக்குப் பிறக்கும் குழந்தைகளால் தானே உனக்கு மரணம் வரும் எனச் சொல்லியது? நான் இவளுக்குப் பிறக்கும் குழந்தைகளை உன்னிடம் கொடுத்து விடுகிறேன். நீ அவற்றை உன் இஷ்டப்படி வதம் செய்வதானால் செய்து கொள! என்று தன் மனைவிக்கு வந்த ஆபத்தை நீக்கி கொண்டார். சிசுக்கள் பிறந்தவுடன் இதைப்பற்றி முடிவு செய்து கொள்வோம் என்று வசுதேவர் தீர்மானித்து அப்படிச் சொன்னார். அதனால் சினம் தணிந்த கம்ஸன் தேவகியை விட்டுவிட்டான்.

ஒருநாள் நாரதர் கம்சனை சந்தித்து, ஆயர்பாடியில் தேவர்கள் அவதரித்திருக்கிறார்கள். அவர்களுடைய தலைவன் நந்தனும், யாதவரும் உனக்குப் பகைவர் என்று சொல்லி புவியின் பாரம்தீர பிரம்மாவால் செய்த ஏற்பாட்டையும் எடுத்துச் சொன்னார். உடனே கம்ஸன் தந்திரமாக வசுதேவரையும், தேவகியையும் சிறையிட்டான். அவர்களுடன் தன் தந்தை உக்கிரசேனனையும் சிறையில் அடைத்து ராஜ்ஜியத்தையும் தான் ஏற்றுக் கொண்டாள். தன் அசுர நண்பர்களுடன் சேர்ந்து யதுகுலத்தாரை அழிப்பதிலேயே குறியாக இருந்தான். அதனால் யதுக்கள் பயந்து வேற பல நாடுகளில் போய் தங்கினார்கள். தேவகிக்குப் பிறந்த ஆறு குழந்தைகளையும் கொன்றான். ஏழாவது சிசுவை தேவகி கருத்தரித்தாள். அந்தக் கருவில் ஆதிசேஷனே உருவானான். அச்சமயம் மகாவிஷ்ணு தனது யோக மாயை மூலம் ஓர் ஏற்பாடு செய்தார். அவர் தேவியை வரவழைத்து, தேவி! வசுதேவருக்கு ரோகிணி என்ற வேறு ஒரு மனைவி உண்டு. அவளை அவர் ஆயர்பாடியில் ரகசியமாக ஒளித்து வைத்திருக்கிறார். மதுராபுரியில் சிறையில் வாடும் தேவகியின் வயிற்றில் ஆதிசேஷன் கருக்கொண்டிருக்கிறான். நீ அந்தக் குழந்தையை ரோகிணியின் கர்ப்பத்திற்கு மாற்றி விடு. அத்துடன் நீ நந்தகோபன் மனைவி யசோதையிடம் பெண்ணாகப் பிறக்க வேண்டும். நான் தேவகியின் வயிற்றில் திருஅவதாரம் செய்யப் போகிறேன். இதனால் சகல மனோ பீஷ்டங்களையும் அளிப்பதற்குக் காரணமானவளாக ஈஸ்வரியாக காளி, வைஷ்ணவி என்றும் பின்னர் மக்கள் உன்னை வழிபடுவார்கள் என்றார். பரந்தாமன் கட்டளைப்படி மாயாதேவி தேவகியின் கர்ப்பத்திலிருந்து குழந்தையை ரோகிணி கர்ப்பத்திற்கு மாற்றினாள். தேவகியின் கர்ப்பம் அவள் சிறையில் வாடும் வேதனையிலும் கம்ஸன் தரும் தொல்லைகளாலும் சிதைந்து போயிற்று என அனைவரும் கம்சனை ஏசினார்கள்.

இச்சமயம் ரோகிணியின் மைந்தனாக ஆதிசேஷன் பிறந்தான். அவனுக்கு யதுகுல குருவாகிய கர்கர் மிகவும் ரகசியமாகப் பசுமடத்தில் சடங்குகளை செய்து ராமன் என்று பெயரிட்டார். ராமன் என்றால் சமிக்கச் செய்வான். தவிர இவன் நல்ல பலசாலியாக இருப்பான் என்பதால் இவனை பலராமன் எனப் பெயரிட்டு அழைப்போம் என்றார் கர்கர். நரகாசுர வதத்தைக் கிருஷ்ணன் செய்த நாளைத்தான் நாம் தீபாவளியாகக் கொண்டாடுகிறோம் என்று ஒரு சிலர் சொல்வதுண்டு. அந்த நரகாசுரனுக்கு துவிவிதன் என்ற ஒரு வானரத்தலைவன் இருந்தான். அவனுக்கு மயிந்தன் என்ற சகோதரன் உண்டு. கிருஷ்ணன் நரகாசுரனைக் கொன்றதைக் கண்டு வானரத் தலைவன் கடும் கோபம் கொண்டான். அவன் தான் எப்படியும் கிருஷ்ணனைக் கொன்று விடுவதாகச் சொல்லி பல அட்டகாசங்களைச் செய்தான். அந்த வைராக்கியத்தில் நேரே கோவர்த்தனகிரியை அடைந்தான். அங்கே தவம் செய்து கொண்டு இருந்த மகரிஷிகளை அவன் அடித்தும் உதைத்தும் இம்சை செய்தான். அந்த நேரத்தில் ரைவத மலையில் பலராமன் கோபியர்களுடன் ஆனந்தமாக இருந்தான். அதைப் பார்த்த வானரத் தலைவன், பலராமன் மீது பாய்ந்தான். அவன் அணிந்திருந்த பட்டு பீதாம்பரத்தைப் பற்றி இழுத்துக் கிழித்தான். சுக்கல் சுக்கலாகக் கிழித்து தூர எறிந்தான். மரத்தை வேரோடு பிடுங்கி பலராமனுடன் இருந்த கோபியரை அடித்து விரட்டினான். இதைப் பார்த்ததும் பலராமனுக்குக் கோபம் வந்தது. உடனே வானரனைக் கட்டிப் பிடித்தான். அச்சமயம் அவன் பலராமனை முஷ்டிகளால் குத்தித் தள்ளித் துன்புறுத்தினான். ஆனால் பலராமனோ அவனைப் பிடித்து கைமுஷ்டியால் அவன் தலையில் ஒரு குட்டு குட்டினான். அந்த க்ஷணத்திலேயே அவன் மூக்கிலும் வாயிலும் ரத்தம் ஒழுக அந்த இடத்திலேயே இறந்தான். இதே போல கோவர்த்தன கிரியில் பலராமன் கண்ணனுடன் மாடு மேய்த்து வந்தான். அப்போது ஸ்ரீதாமன் என்ற சிறுவன் வேகமாக பலராமன், கண்ணனிடம் ஓடி வந்தான்.

பலராமா! கண்ணா! இந்த மலைச்சாரலைக் கடந்து நாம் மலைக்காட்டிற்குள் போனால் அங்கே அநேக பனைமரங்களைக் காணலாம். அந்த பனைமரத்தின் அடியில் பழங்கள் உதிர்ந்து கிடப்பதைப் பார்க்க முடியும். ஆனால் அங்கே நாம் போக முடியாது. காரணம் தேனுகன் என்ற அரக்கன் அந்த வனத்தைக் காத்து வருகிறான். அவன் கழுதை வேடம் போட்டுத் திரிகிறான். அவனைச் சேர்ந்தவர்களும் அது மாதிரியே அவனுடன் காட்டைச் சுற்றி வருகிறார்கள். அவனுக்கு மனித மாமிசம் என்றால் மிகப் பிரியம். அவன் பக்கத்தில் போனவர்களை அடித்துக் கொன்று தின்றுவிடுவான். எனினும் அவன் வசிக்கும் பனைக்கூட்டத்தின் மத்தியில் சிந்தி சிதறிக் கிடக்கும் பழங்களின் வாசனை தான் இது. கண்ணா! அந்த பழங்களை எப்படியாவது எடுத்து வந்து எங்களுக்கு கொடுப்பாயா? என்று ஸ்ரீதாமன் கேட்டான். இதைக் கேட்ட பலராமனும் கண்ணனும் சிரித்தார்கள். வாருங்கள்! நாம் எல்லோரும் பனங்காட்டிற்குச் செல்லலாம் என்று கண்ணன் சொல்லவே கோகுலச் சிறுவர்களும், பலராமனும் அவனுடன் சேர்ந்து அங்கே போனார்கள். இவர்கள் பேசியதைக் கேட்ட தேனுகன் வேகமாக ஓடிவந்து பலராமனைத் தாக்க ஆரம்பித்தான். கழுதையாகிய அவன் தன் பின்னங்கால்களால் பலராமனை உதைத்தான். பலராமனோ கழுதையின் காலைப் பிடித்து இழுத்து அப்படியே உயரே தூக்கி சுழற்றினான். இப்படி பலமுறை சுற்றிச் சுழல விட்டு அவன் சடலத்தை பனைமரத்தின் மீது வீசினான். அந்த மரம் அல்லாது அடுத்து இருந்த மரங்களும் அவனோடு பூமியில் சரிந்தன. இவ்வாறு பலராமனும், கிருஷ்ணனும் அரக்கர் கூட்டத்தை அழித்து ஒழித்தனர்.

ஒரு சமயம் பலராமனும் கண்ணனும் தட்டாமாலை சுற்றி விளையாடினார்கள். எல்லாரையும் ஆடச் செய்து கண்ணன் பாடுவான். எல்லாரும் வில்வப்பழம் பறித்துப் பந்தாடுவார்கள். இவ்வாறு அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது பிரலம்பன் என்ற ஓர் அரக்கன், கோகுலச் சிறுவனைப் போல் உருமாறி அவர்களுடன் விளையாட வந்தான். இவனுடைய சூழ்ச்சியைக் கண்ணன் தெரிந்தும் தெரியாதது போல நடந்து கொண்டான். கண்ணன் தன் சகாக்களை அழைத்துச் சொன்னான். நண்பர்களே! நாம் இப்போது இரண்டு கட்சிகளாகப் பிரிவோம். ஒரு கட்சிக்குப் பலராமன் தலைவன், மற்றொரு கட்சிக்கு நான் தலைவன். ஒரு பந்தயம் கட்டி விளையாடுவோம். யார் ஜெயிக்கிறார்களோ அவனைத் தோல்வி அடைந்தவன் தூக்கி சுமக்க வேண்டும் என்றான். எல்லாரும் ஆமோதித்து ஓர் ஆலமரத்தில் ஓடிப் பிடித்த விளையாடினர். ஓடி விளையாடிய ஓட்டப் பந்தயத்தில் பிரலம்பன் பலராமனிடம் தோற்றான். ஆகவே அவன் பலராமனைத் தூக்கி சுமந்து கொண்டு ஓடினான். அப்படி ஓடியவன், ஓர் எல்லைக்குள் வந்து அவனை இறக்கிவிட வேண்டியவன், பலராமனைக் கீழே இறக்காமல் ஓடிக்கொண்டே இருந்தான். ஆனால் ஓடஓட பலராமன் பாரம் அரக்கனாகிய பிரலம்பனுக்கு அதிகரித்துக் கொண்டே போனது. அரக்கன் சுமை தாங்க மாட்டாமல் பலராமனைத் தொப் என்று கீழே போட்டான். தன் சுயரூபம் எடுத்து ஆகாயம் வரை உயர்ந்து நின்றான். உடனே பலராமன் எகிறிக் குதித்து விண்ணுயரம் நின்ற அரக்கன் தலையில் நச் என்று ஓங்கி ஒரு குத்து விட்டான். அந்த இடத்திலேயே பிரலம்பன் மலையெனச் சாய்ந்தான். ஒரு நாள் இரவில் கண்ணனும், பலராமனும் ஆயர்பாடி பெண்களுடன் பிருந்தாவனத்தில் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அந்நேரம் குபேரனுடைய சேவகன் சங்கசூடன் வந்தான். அவன் கோபிகளை வடதிசை நோக்கித் துரத்தினான். பலராமனை மங்கையரைக் காத்து நிற்கும்படி கண்ணன் சொல்லிவிட்டு, கண்ணன் சங்கசூடனைத் துரத்திச் சென்றான். அவனை வதம் செய்து அவன் கிரீடத்தில் அணிந்திருந்த ரத்தினத்தை எடுத்து கண்ணன் பலராமனுக்கு கொடுத்தான்.

மகாபாரதத்தில் பலராமன்: பலராமருடைய மனைவியின் பெயர் ரேவதி. ரைவத நாட்டை ஆண்டு வந்த அரசன் ரைவதன் என்பவருடைய மகள் இவள். பிரம்மதேவர் விருப்பப்படி பலராமருக்கு ரேவதியை மணம் செய்து வைத்தான். அவள் வயிற்றில் பிறந்தவள் வத்ஸலா. வத்ஸலாவை, துரியோதனன் தன் மகன் லெட்சணனுக்கு திருமணம் செய்து விட்டால், பலராமனும், அவரது தம்பி கிருஷ்ணரும் தங்கள் பக்கம் சேர்ந்து விடுவார்கள் என்றும், இதனால் பாண்டவர்களை போரில் எளிதில் வென்று ராஜ்யத்தை அவர்களிடம் கொடுக்காமல் தாமே வைத்துக்கொள்ளலாம் என்றும் துரியோதனன் நினைத்தான். இந்த திருமணம் பேசி முடிப்பதற்காக தன் மாமா
சகுனியை துவாரகைக்கு அனுப்பி வைத்தான் துரியோதனன். சகுனி துவராரகைக்கு வரும் வழியில் துர்சகுனங்கள் தோன்றின. அவைகளைப் பொருட்படுத்தாமல் அவன் பலராமனை சந்தித்தான். சாதுர்யமாக அவன் விஷயத்தை எடுத்துச் சொன்னான். பலராமனும் இது பற்றித் தன் மனைவி ரேவதியைக் கலந்து பதில் சொல்வதாகச் சொன்னான். அவள் அதற்கு சம்மதம் தெரிவித்தாள். ரேவதி சம்மதம் தந்ததும் பலராமன் தன் தம்பி கிருஷ்ணனைக் கலந்தான். அத்துடன், வத்ஸலாவை லெட்சணன் திருமணம் செய்து கொள்வதில் தனக்கும் தன் மனைவி ரேவதிக்கும் மிக திருப்தி என்றும் பலராமன் கிருஷ்ணனிடம் சொன்னான். அப்போது கிருஷ்ணன், அண்ணா! தர்மத்தைப் பரிபாலிக்க சிம்மாசனமும் செங்கோலும் கொண்ட நாமே தர்மத்தைப் பரிபாலிக்காமல் கைவிட்டால் தர்மம் எப்படித் தழைத்து ஓங்கும்? நான் ஒரு நிகழ்ச்சியை உன் ஞாபகத்திற்குக் கொண்டு வர வேண்டியவனாக இருக்கிறேன். முன்பு ஒருநாள் நம் தங்கை சுபத்திராதேவி தன் புதல்வன் அபிமன்யூவை அழைத்துக் கொண்டு வந்திருந்தாள். நாம் எல்லோரும் அன்று அந்தி சாய்கிற நேரத்தில் பூங்காவனத்தைச் சுற்றி வந்தோம். அப்போது அபிமன்யூவும் வத்ஸலாவும் சதிபதிகளாக விளையாடிக் கொண்டு இருந்தார்கள். இதைக் கண்ட சுபத்திரை அவர்கள் விளையாட்டின் விந்தையை உன்னிடம் சுட்டிக் காட்டினாள். அப்போது நீ என்ன சொன்னாய்? உனக்கு ஞாபகம் இருக்கிறதா அண்ணா? என்று வாசுதேவன் கேட்டான். ஏதோ ஒன்றிரண்டு ஞாபத்திற்கு வருகிறது. இருந்தாலும் நான் என்ன சொன்னேன் என்பதை இப்போது நீதான் நினைவுபடுத்துவதில் என்ன தவறு? சும்மா சொல் என்றான் பலராமன். கிருஷ்ணன் தொடர்ந்து சொன்னான், அண்ணா! அருமைத் தங்காய் சுபத்திரை! இந்த இரண்டு பேரும் தம்பதிகளே இதில் என்ன சந்தேகம். மேலும் வத்ஸலையை அபிமன்யூவுக்குக் கொடுப்பதில் நாம் ஏதாவது குலம் கோத்திரம் விசாரிக்க வேண்டுமா என்ன? என்றைக்கு இருந்தாலும் வத்ஸலையை உன் மகன் அபிமன்யூவுக்குப் பாணிக்கிரகணம் செய்து கொடுப்பது சத்தியமே! என்று வாக்குக் கொடுத்தீர்கள். அந்த நேரம் நம்மிடையே நாரத முனிவரும் எழுந்தருளி இருந்தார். அப்போது அவர், பலராம சக்கரவர்த்தியே! நீர் இப்போது வாக்குக் கொடுத்து நிறைவேற்றுவது தான் சத்தியம் செய்வதற்கு அழகு என்றார். நீ உடனே, நான் ஒரு நாளும் வாக்கு மாறமாட்டேன் என்று கூறிவிட்டு இப்போது உன் சத்திய வாக்கைக் காற்றில் பறக்க விடலாமா? என கிருஷ்ணன் வினவினான்.

அதைக் கேட்ட பலராமன், கேசவா நான் சொல்லும் வேளையில் பாண்டவர்கள் இந்திரப் பிரஸ்தத்தில் பூபதிகளாக இருந்ததால் அவ்வண்ணம் சொன்னேன். இப்போதோ அவர்கள் தங்கள் ராஜ்யம், சொத்து, சுகம் இழந்து வனவாஸத்தில் அல்லவா இருக்கிறார்கள்? நமது சகோதரி மகன் அபிமன்யூவோ நம் சிற்றப்பா விதுரர் போஜனையில் வளர்ந்து வருகிறான். இந்த நிலையில் நம் மகள் வத்ஸலையை அவனுக்குக் கொடுக்க யார் சம்பதிப்பார்கள்? என்றான். உடனே கிருஷ்ணன் சொன்னான்: அண்ணா! இனி உங்கள் இஷ்டம். அண்ணியும் இதற்கு சம்பதிக்கிறாள் என்னும் போது நான் மேலும் வீண் விவாதம் செய்வதில் பயன் இல்லை. எல்லாம் பகவத் சங்கற்பம் போல் நடக்கும் என்பதை மறந்துவிடாதே! என்று பதில் சொல்லிவிட்டு வாசுதேவன் அந்தப்புரத்திற்குப் போய்விட்டான். சகுனியும் பலராமனும் கிருஷ்ணன் அரண்மனையை விட்டு வெளியே வந்தனர். சகுனியை மீண்டும் தன் அரண்மனைக்கு அழைத்துச் சென்று பலராமன் அவர் கையில் தன் சம்மதத்துடன் வத்ஸலா லெட்சணன் திருமணத்திற்கு லக்கினப் பத்திரிக்கையைக் கொடுத்து அனுப்பினான். அதைக் கைப்பற்றியதும் சகுனிக்கு ஏற்பட்ட சந்தோஷத்திற்கு அளவே இல்லை. அஸ்தினாபுரத்திற்குத் திரும்பி, நடந்த விவரங்களை துரியோதனிடம் சொன்னான் சகுனி. முகூர்த்த லக்னப் பத்திரிக்கையும் பார்த்து துரியோதனன் அதிக சந்தோஷம் கொண்டாடினான். உடனே தன் மனைவி பானுமதி, மகன் லெட்சணன், மாமா சகுனி மற்றும் உறவினர்களுடன் திருமணம் பேசி முடிப்பதற்காக பலராமன் இருப்பிடத்திற்கு சென்றான். செல்லும் வழியில் கிருஷ்ணரின் தங்கை சுபத்ரைக்கு இந்த விஷயத்தை ஒரு மடலில் எழுதி அனுப்பிவிட்டான். இதை கேள்விப்பட்ட சுபத்ரையும், அவளது மகன் அபிமன்யுவும் ஒரு தேரில் பலராமனை தேடி சென்றனர். செல்லும் வழியில் கடோத்கஜன் அபிமன்யுவை கொன்றான். இருந்தாலும் பராசக்தியின் கருணையால் கிடைத்த அமுத கலசத்தினால் அபிமன்யு உயிர் பெற்றான். பின்னர் கடோத்கஜன் பீமனின் மகன் என்பது தெரியவந்ததும், இருவரும் கிருஷ்ணனின் மாளிகைக்கு சென்றனர். அவர்களுடன் கடோத்கஜனின் இஷ்ட தேவதையான ஜாங்கிலியும் சென்றது.

வாசுதேவன் அவர்களை வரவேற்று மகிழ்ந்து ஆசி கூறினார். ஹே கடோத்கஜா! ஜாங்கிலி! நீங்கள் இரண்டு பேரும் என் அரிய பக்தர்கள். ஆகவே உங்கள் விருப்பப்படி அபிமன்யூ-வத்ஸலா திருமணம் நடைபெற்றுவிடும். எனினும் அதை நீங்கள் தான் முன்னின்று செய்ய வேண்டும். அதற்கு முன்பு ஒரு சில காரியங்களைச் செய்ய வேண்டும் என்றார். அவர்கள் தங்கள் கட்டளையை சிரம்மேல் தாங்கி செய்கிறோம்! என்று சொன்னார்கள். என் அண்ணா பலராமர் அந்தப்புரத்தில் ரேவதி தேவியின் அருகில் அருமைக் குழந்தை வத்ஸலா படுத்துக் கிடக்கிறாள். அவளை அங்கிருந்து எடுத்துக் கொண்டு சுபத்திரையிடம் சேர்த்து விடுங்கள். அண்ணா அரண்மனையில் அமைத்திருக்கும் திருமணப் பந்தலை உங்களைச் சேர்ந்த அரக்கர்களைக் கொண்டு அலாக்காகத் தூக்கி ரைவத மலைச்சாரலுக்கு கொண்டு வந்து நிறுத்தி விடுங்கள். அப்புறம் என் சங்கல்பத்திற்கு விரோதமாக வந்திருக்கும் துரியோதனாதியருக்கு உங்கள் இஷ்டம் போல் , அவர்கள் பாடம் கற்கும்படி, மானபங்கம் செய்து விடுங்கள். பின் தேவலோகத்திலிருந்து திருமண காரியங்களுக்குப் புரோகிதம், வேள்வி, மேள தாளங்கள் உள்பட அங்கு வரும்படி செய்கிறேன். அந்தத் தேவர் குழாம் வந்ததும் எனக்குத் தெரியப்படுத்துங்கள். நானும் ருக்மணி தேவியும் அங்கு வந்து யாகத்தை முடித்துக் கொடுக்கிறோம் என்றார். வாசுதேவர் கூறியபடி காரியங்களை நிறைவேற்றி விட முனைந்தனர். துரியோதனன் அவன் பட்ட மகிஷி பானுமதி தங்கி இருக்கும் மாளிகைக்குச் சென்றார்கள். அங்கு உள்ள பானுமதியின் தாதியரைக் கண்டு, அவர்களைப் போல மாற்றருக் கொண்டு நேரே பலராமர் ரேவதி அந்தப்புரத்திற்குள் நுழைந்தனர். அங்கு அவளைத் தட்டி எழுப்பினார்கள். அம்மா எஜமானி! நாங்கள் கௌரவ பட்டத்தரசி பானுமதி தேவியின் தாதிகள். அம்மா இதோ ஒரு சில நகைகளைக் கொடுத்து அனுப்பி இருக்கிறார்கள். இதை பெண்ணுக்குப் போட்டுப் பார்க்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். ஆகவே வத்ஸலாவிற்கு இந்த நகைகளை அணிவித்து அவளை பானுமதி தங்கி இருக்கும் மாளிகைக்கு அழைத்துச் செல்கிறோம் என்று கூறினார்கள். ரேவதி அதற்கு அனுமதி கொடுத்தாள். உடனே வத்ஸலை அந்தப்புரம் சென்று வந்த விஷயத்தை எடுத்துச் சொல்லி, அவளை அங்கிருந்து ரைவத மலை அடிவாரத்திற்குக் கொண்டு போய்ச் சேர்த்தார்கள்.

தேவலோகம் சென்று யட்சர், தேவதேவியர், தெய்வ ரிஷிகளைத் திருமணம் நடக்க இருக்கும் இடத்திற்கு வரச் செய்து கல்யாண சாபக் கிரியத் திரவியத்திற்கும் தேவ துந்துபி முழக்கவும் ஏற்பாடு செய்துவிட்டு கிருஷ்ண பகவானிடம் தெரிவித்தார்கள். அவர் ருக்மணி தேவி சமேதராய் திருமணப் பந்தலுக்கு எழுந்தருளினார். அங்கே தன் தங்கை சுபத்திரா, மருமகன் அபிமன்யூ மற்றும் புதுப்பெண் வத்ஸலாவையும் கண்டு குசலம் விசாரித்தான் பகவான். பின்பு ஒரு சில நொடிகளில் வத்ஸலாவுக்கும் அபிமன்யூவுக்கும் விவாக சுபமுகூர்த்தம் நிறைவேறியது. உடனே பகவான் அங்கு தங்காமல் எதையும் தான் அறியாதர் போலத் தம் இருப்பிடம் சேர்ந்தார். பலராமன் தன் மகன் வத்ஸலையைக் காணாமல் தவித்து, கிருஷ்ணரின் அரண்மனைக்கு வந்து சேர்ந்தான். அதற்குப்பின் வத்ஸலா விவாகமான சேதியை நாரதர் மூலம் பகவான் பலராமருக்குத் தெரிவித்தார். அதனால் பலராமர் அகமகிழ்ந்து அபிமன்யூ வத்ஸலாவைத் தன் அரண்மனைக்குத் திருமண ஊர்வலமாக நாததுந்துபிகள் முழங்க வெகு விமரிசையாக அழைத்து வந்தான். இவ்வாறு பலராமன் மகள் வத்ஸலா திருமணம் இனிதே நிறைவேறியது. இந்த வத்ஸலா திருமணக் கதையை கேட்போர், படிப்போர் அனைவருக்கும் கிருஷ்ண பரமாத்மாவின் பூரண அனுக்கிரகமும் சர்வமங்களமும் கிடைக்கும்.

சாம்பன்-லட்சுமளை திருமணம்: துரியோதனனுக்கு லட்சுமளை என்ற ஒரு பெண் இருந்தாள். அவள் திருமணத்தை முன்னிட்டு அவன் சுயம்வரம் ஏற்படுத்தினான். சுயம்வரத்துக்கு வந்த சாம்பன் லட்சுமளையைத் தூக்கிச் சென்றான். இந்த சாம்பன் கிருஷ்ணனுக்கும் ஜாம்பவதிக்கும் பிறந்த புத்திரன். துரியோதனாதியரும் அவனைச் சேர்ந்தவர்களும் படையுடன் அவனைத் துரத்தி வந்தார்கள். பின் அவனுடன் யுத்தம் செய்தனர். சாம்பன் அனைவரையும் நன்கு தாக்கினான். எனினும் பீஷ்மரும் துரோணரும் கௌரவ சேனையில் இருந்ததால் அவனைச் சிறைப்படுத்தினார்கள். இதைக் கேள்விப்பட்டதும் பலராமன் உத்தரவோடு அஸ்தினாபுரம் வந்து துரியோதனனைச் சந்தித்தான். துரியோதனா! என்ன காரியம் செய்தாய்? தனி ஒருவனாக நின்று போராடிய சாம்பனை வீரர்களுடன் நீ சுற்றிவளைத்துச் சிறைபடுத்திவிட்டாயே? இது என்ன நியாயம்? உனக்கு நாங்கள் உறவினர் என்பது மறந்து போயிற்றா? நமக்குள் விரோதம் வேண்டாம் என்று நான் எத்தனையோ தடவை எடுத்து சொல்லியும் நீ பகைமை பாராட்டுகிறாய். ஆக நீ சாம்பனை விடுவித்து அவனுக்கு லட்சுமளையை விவாகம் செய்து கொடு! என்று பலராமன் சொன்னான். அவன் சொன்னைதைக் கொஞ்சமும் காதில் வாங்கிக் கொள்ளாமல் துரியோதனன் பலராமனையும் அவன் குலத்தையும் இழிவாகப் பேசினான். அதனால் பலராமனுக்குக் கோபம் வந்துவிட்டது. உங்களோடு சண்டை போட வேண்டும் என்ற அவசியமே இல்லை. இதோ பார் க்ஷண நேரத்தில் உங்களைக் கூண்டோடு துவம்சம் செய்கிறேன் பார்! என்று சொல்லித் தான். அடுத்த நொடிப் பொழுதில் அஸ்தினாபுரமே வேரோடு பெயர்ந்து கிளம்புவதுபோல் ஆட்டம் கண்டது. கங்கையில் நகரம் மூழ்கிப் போகும் என்ற பயம் தோன்றியது. உடனே துரியோதனன் பலராமன் காலில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி வேண்டினான். அத்துடன் லட்சுமளையை சாம்பனுக்கு மணம் முடித்துக் கொடுக்கவும் சம்மதித்தான். அவ்வாறு துரியோதனன் மன்னிப்புக் கேட்டு வழிக்கு வந்ததும் தன் கலப்பையை மீண்டும் தரையில் மோதி ஆட்டம் கண்டு நின்ற அஸ்தினாபுரத்தை முன் இருந்த நிலைக்கு பலராமன் நிலைப்படுத்தினான்.

பலராமன் தீர்த்த யாத்திரை: துவாரகையில் கிருஷ்ணனும் பலராமனும் இருந்த சமயம் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே இருந்த விரோதம் முற்றியது. இரு சாராரும் யுத்த சன்னத்தராக இருக்கிறார்கள் என்ற சேதி பலராமனுக்கு எட்டியது. இரு சாராரும் உறவினர்களே. ஆக அவர்கள் தம்மைப் போருக்கு உதவ கேட்கும் போது தாம் யாருக்கு உதவுவது என்ற தர்மசங்கடமாக சூழ்நிலையை எண்ணிப் பலராமன் தீர்த்த யாத்திரைக்கு கிளம்பினான். ஒவ்வொரு தலமும் தரிசித்து தீர்த்த யாத்திரையாக ஆங்காங்கே உள்ள பிராமணோத்தமர்களுக்கு பலராமன் தான தருமங்கள் செய்து கொண்டே வந்தான். நைமி சாரண்யத்திற்கு வந்தான். அங்கே எல்லா மகரிஷிகளும் சந்திரயாகம் செய்து கொண்டு இருந்தார்கள். அனைவரும் பலராமனைக் கண்டதும் அகமும் முகமும் மலர எழுந்து நின்று அவனை வரவேற்று நமஸ்காரம் செய்தனர். சூதர் மட்டும் எழுந்திருக்கவே இல்லை. இதைக் கண்டதும் பலராமனுக்குக் கோபம் வந்து விட்டது. பதினெட்டுப் புராணங்களையும் மற்றவர்களுக்குத் தாம் தானே உபதேசம் செய்தோம் என்ற கர்வத்தால் இப்படி எழுந்திராது இருந்தார் என்பதைப் பலராமன் உணர்ந்தான். கையில் ஒரு தர்ப்பையை எடுத்தான். மந்திரித்து அஸ்திரமாகப் பிரயோகம் செய்தான். அது சூதருடைய தலையைத் துண்டாக்கிச் சென்றது. அதைப் பார்த்த மற்ற மகரிஷிகள் பலராமனைப் பெரிதும் வேண்டினார்கள். ஹே பிரபோ! சூதர் செய்த குற்றம் பெரிதே. இருந்தாலும் எங்களைக் கிருதார்த்தர்களாக்கப் பதினெட்டு புராணங்களையும் எங்களுக்கு ஓதுவித்தவர் சூதர் அல்லவா? அவரை நாங்கள் கௌரவித்து வந்தோம்.

இனியும் அவ்வாறு நாங்கள் நடந்து கொள்ள, தாங்கள் அவர் பிழை பொறுத்து அவரை உயிர் பெற்று எழச் செய்ய வேண்டும் என மன்றாடினார்கள். அதனால் சூதருக்கு இரங்கி அவரை உயிர்த்தெழச் செய்தான் பலராமன். அதன் பிறகு சூதர் தூங்கி எழுந்தது போல எழுந்து நின்று பலராமனை வணங்கினார். அங்கு அந்த முனிவர்களுக்கு பல்லவன் என்ற அரசன் மிகவும் தொல்லை கொடுத்து வந்தான். இந்தப் பல்லவன் அகஸ்தியரால் முன்பு சம்கரிக்கப்பட்ட இல்லவன் வாதாபி என்ற இரு அசுரர்களில் இல்லவனுடைய மகன் ஆவான். முனிவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க இவனையும் பலராமன் அழித்தான். நாடெங்கிலும் சென்று தீர்த்த யாத்திரை முடித்து குருஷேத்திர யுத்தம் முடிவடையும் நேரம் அங்கே பலராமன் வந்தான். பீமனுக்கும் துரியோதனனுக்கும் இடையே கடும்போர் நடந்து கொண்டிருந்தது. பீமனும் துரியோதனனை கதையைக் கொண்டு பலமாகத் தாக்கினான். அப்படியே துரியோதனனும் மிகவும் ஆக்ரோஷமாகச் சண்டை செய்து கொண்டு இருந்தான். பலராமன் இரண்டு பேரையும் பார்த்து சண்டையை நிறுத்தி சமாதானமாகப் போகவும் என வலியுறுத்தினான். யாரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. இந்த நிலையில் துரியோதனன் தொடையில் பீமன் கதையால் ஒங்கி அறைந்தான். உடனே பலராமன் அலறினான். பீமா! கதை கொண்டு பகைவனை அவனது தொடையில் தாக்குவது எந்த யுத்த தருமத்தைச் சேர்ந்தது? இந்த அநியாயத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது என்று சொல்லி பீமனைத் தாக்க பலராமன் கலப்பையைக் கையில் எடுத்தான். இதோ பீமா! என்னைத் தாக்கு என்று கத்தினான் பலராமன். உடனே கண்ணன், அண்ணா! என்ன காரியம் செய்யத் துணிந்தீர்கள்? தயவு செய்து கலப்பையைக் கீழே போடுங்கள். நீங்கள் தீர்த்த யாத்திரை போகும் முன்பு இங்கு நடந்த நிகழ்ச்சிகளை நீங்கள் தெரிந்திருக்க முடியாது. துரியோதனன் ஆரம்பம் முதல் இன்று வரை தர்மத்திற்கு விரோதமாகவே நடந்து கொண்டு இருக்கிறான். திரௌபதையை அரசவைக்கு நடுவே இழுத்து வரச்செய்து அவள் சேலையை அவிழ்த்து அவமானப்படுத்தினான். அது எந்த தர்ம நியாயத்தோடு சேர்ந்தது? நீங்கள் மட்டும் அந்த சபையில் அன்று இருந்திருந்தால் அப்போதே அவனை துவம்சம் செய்திருப்பீர்கள். அன்றைய தினம் தொடையிலே கைபோட்டுத் துரியோதனன் பேசியதால் அவனை அதே தொடையில் அடித்து அது முறிய அவனை பீமன் மாளச் செய்வான் என்று திரௌபதை சாபம் கொடுத்தாள். அந்த சாபத்திற்கு ஏற்ப இந்த மரணத்தைத் துரியன் ஏற்றான்! ஆகவே நீங்கள் இதில் தலையிட வேண்டாம்! என்றான் கண்ணன். பலராமனும் கோபத்தைத் துறந்து நிலைமை புரிந்து சாந்தம் ஆனான். பின்னர் துவாரகைக்குத் திரும்பி சென்றான்.


No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer