Saturday 10 October 2015

2. ஊர் தேடு படலம் (பகுதி-2)

2. ஊர் தேடு படலம் (பகுதி-2)


இலங்கையுள் அனுமன் புகுதல்

வீரனும், விரும்பி நோக்கி, 'மெய்ம்மையே; விளைவும் அஃது' என்று,
ஆரியன் கமல பாதம் அகத்து உற வணங்கி, ஆண்டு, அப்
பூரியர் இலங்கை மூதூர்ப் பொன் மதில் தாவிப் புக்கான் -
சீரிய பாலின் வேலைச் சிறு பிரை தெறித்தது அன்னான். 94

இலங்கையின் ஒளிச் சிறப்பை வியத்தல்

வான் தொடர், மணியின் செய்த, மை அறு, மாட கோடி
ஆன்ற பேர் இருளைச் சீத்துப் பகல் செய்த அழகை நோக்கி,
'ஊன்றிய உதயத்து உச்சி ஒற்றை வான் உருளைத் தேரோன்
தோன்றினன் கொல்லோ?' என்னா, அறிவனும் துணுக்கம் கொண்டான். 95

'மொய்ம் மணி மாட மூதூர் முழுது இருள் அகற்றாநின்ற
மெய்ம்மையை உணர்ந்து, நாணா, "மிகை" என விலங்கிப் போனான்;
இம் மதில் இலங்கை நாப்பண் எய்துமேல், தன் முன் எய்தும்
மின்மினி அல்லனோ, அவ் வெயில் கதிர் வேந்தன்? அம்மா!' 96

'பொசிவுறு பசும் பொன் குன்றில், பொன் மதில் நடுவண் பூத்து,
வசை அற விளங்கும் சோதி மணியினால் அமைந்த மாடத்து
அசைவு இல் இவ் இலங்கை மூதூர், ஆர் இருள் இன்மையாலோ,
நிசிசரர் ஆயினார், இந் நெடு நகர் நிருதர் எல்லாம்? 97

நகரினுள் அனுமன் மறைந்து சென்ற வகை

என்றனன் இயம்பி, 'வீதி ஏகுதல் இழுக்கம்' என்னா,
தன் தகை அனைய மேனி சுருக்கி, மாளிகையில் சார,
சென்றனன் - என்ப மன்னோ - தேவருக்கு அமுதம் ஈந்த
குன்று என, அயோத்தி வேந்தன் புகழ் என, குலவு தோளான். 98

ஆத் துறு சாலைதோறும், ஆனையின் கூடம்தோறும்,
மாத் துறு மாடம்தோறும், வாசியின் பந்திதோறும்,
காத்து உறு சோலைதோறும், கருங் கடல் கடந்த தாளான்,
பூந்தொறும் வாவிச் செல்லும் பொறி வரி வண்டின், போனான். 99

பெரிய நாள் ஒளி கொள் நானாவித மணிப் பித்திப் பத்தி
சொரியும் மா நிழல் அங்கங்கே சுற்றலால், காலின் தோன்றல்,
கரியன்ஆய், வெளியன் ஆகி, செய்யன் ஆய், காட்டும்-காண்டற்கு
அரியன்ஆய், எளியன் ஆய், தன் அகத்து உறை அழகனேபோல். 100

அனுமன் பற்பல நிலையிலுள்ள அரக்கர்களைக் காணுதல்

ஈட்டுவார், தவம் அலால் மற்று ஈட்டினால், இயைவது இன்மை
காட்டினார் விதியார்; அஃது காண்கிற்பார் காண்மின் அம்மா!-
பூட்டு வார் முலை பொறாத பொய் இடை நைய, பூ நீர்
ஆட்டுவார் அமரர் மாதர்; ஆடுவார் அரக்கர் மாதர். 101

கானக மயில்கள் என்ன, களி மட அன்னம் என்ன,
ஆனைக் கமலப் போது பொலிதர, அரக்கர் மாதர்,
தேன் உகு சரளச் சோலை, தெய்வ நீர் ஆற்றின் தெண் நீர்,
வானவர் மகளிர் ஆட்ட, மஞ்சனம் ஆடுவாரை- 102

'இலக்கண மரபிற்கு ஏற்ற எழு வகை நரம்பின் நல் யாழ்,
அலத்தகத் தளிர்க்கை நோவ, அளந்து எடுத்து அமைந்த பாடல்
கலக்குற முழங்கிற்று' என்று சேடியர் கன்னிமார்கள்,
மலர்க்கையால், மாடத்து உம்பர் மழையின் வாய் பொத்துவாரை- 103

சந்தப் பூம் பந்தர் வேய்ந்த தமனிய அரங்கில், தம்தம்
சிந்தித்தது உதவும் தெய்வ மணி விளக்கு ஒளிரும் சேக்கை,
வந்து ஒத்தும் நிருத மாக்கள் விளம்பின நெறி வழாமை
கந்தர்ப்ப மகளிர் ஆடும் நாடகம் காண்கின்றாரை- 104

திருத்திய பளிக்கு வேதி, தெள்ளிய வேல்கள் என்ன,
கருத்து இயல்பு உரைக்கும் உண் கண் கருங் கயல், செம்மை காட்ட,
வருந்திய கொழுநர் தம்பால் வரம்பு இன்றி வளர்ந்த காம
அருத்திய பயிர்க்கு நீர்போல், அரு நறவு அருந்துவாரை- 105

கோது அறு குவளை நாட்டம் கொழுநர் கண் வண்ணம் கொள்ள,
தூதுளங் கனியை வென்று துவர்த்த வாய் வெண்மை தோன்ற,
மாதரும் மைந்தர் தாமும், ஒருவர்பால் ஒருவர் வைத்த
காதல்அம் கள் உண்டார்போல், முறை முறை களிக்கின்றாரை- 106

வில் படர் பவளப் பாதத்து அலத்தகம் எழுதி, மேனி
பொற்பு அளவு இல்லா வாசப் புனை நறுங் கலவை பூசி,
அற்புத வடிக் கண் வாளிக்கு அஞ்சனம் எழுதி, அம் பொற்
கற்பகம் கொடுக்க வாங்கி, கலன் தெரிந்து அணிகின்றாரை- 107

புலி அடு மதுகை மைந்தர் புதுப் பிழை உயிரைப் புக்கு
நலிவிட, அமுத வாயால் நச்சு உயிர்த்து, அயில் கண் நல்லார்,
மெலிவுடை மருங்குல் மின்னின் அலமர, சிலம்பு விம்மி
ஒலிபட, உதைக்கும்தோறும், மயிர்ப் புளகு உறுகின்றாரை- 108

உள்ளுடை மயக்கால் உண் கண் சிவந்து, வாய் வெண்மை ஊறி,
துள் இடைப் புருவம் கோட்டித் துடிப்ப, வேர் பொடிப்ப, தூய
வெள்ளிடை மருங்குலார், தம் மதிமுகம் வேறு ஒன்று ஆகிக்
கள்ளிடைத் தோன்ற நோக்கி, கணவரைக் கனல்கின்றாரை- 109

ஆலையில், மலையின் சாரல் முழையினில், அமுத வாரிச்
சோலையில், துவசர் இல்லில், சோனகர் மனையில், தூய
வேலையில், கொள ஒணாத, வேற்கணார் குமுதச் செவ் வாய்
வால் எயிற்று ஊறு, தீம் தேன் மாந்தினர் மயங்குவாரை- 110

நலன் உறு கணவர் தம்மை நவை உறப் பிரிந்து, விம்மும்
முலை உறு கலவை தீய, முள் இலா முளரிச் செங் கேழ்
மலர்மிசை மலர் பூத்தென்ன, மலர்க்கையால் வதனம் தாங்கி,
அலமரும் உயிரினோடும் நெடிது உயிர்த்து அயர்கின்றாரை- 111

ஏதிஅம் கொழுநர் தம்பால் எய்திய காதலாலே,
தாது இயங்கு அமளிச் சேக்கை, உயிர் இலா உடலின் சாய்வார்,
மா துயர்க் காதல் தூண்ட, வழியின்மேல் வைத்த கண்ணார்,
தூதியர் முறுவல் நோக்கி, உயிர் வந்து துடிக்கின்றாரை- 112

சங்கொடு, சிலம்பும், நூலும், பாத சாலகமும் தாழ,
பொங்கு பல் முரசம் ஆர்ப்ப, இல் உறை தெய்வம் போற்றி,
கொங்கு அலர் கூந்தல், செவ் வாய், அரம்பையர் பாணி கொட்டி
மங்கல கீதம் பாட, மலர்ப் பலி வகுக்கின்றாரை- 113

இழை தொடர் வில்லும் வாளும் இருளொடு மலைய, யாணர்க்
குழை தொடர் நயனம் கூர் வேல் குமரர் நெஞ்சு உருவக் கோட்டி,
முழை தொடர் சங்கு, பேரி, முகில் என முழங்க, மூரி
மழை தொடர் மஞ்ஞை என்ன, விழாவொடு வருகின்றாரை- 114

பள்ளியில், மைந்தரோடும் ஊடிய பண்பு நீங்கி,
ஒள்ளிய கலவிப் பூசல் உடற்றுதற்கு உருத்த நெஞ்சர்,
மெள்ளவே இமையை நீக்கி, அஞ்சன இழுது வேய்ந்த
கள்ள வாள் நெடுங் கண் என்னும் வாள் உறை கழிக்கின்றாரை- 115

ஓவியம் அனைய மாதர் ஊடினர், உணர்வோடு உள்ளம்
ஏவிய கரணம் மற்றும் கொழுநரோடு ஒழிய, யாணர்த்
தூவி அம் பேடை என்ன, மின் இடை துவள, ஏகி,
ஆவியும் தாமுமே புக்கு, அருங் கதவு அடைக்கின்றாரை- 116

கின்னர மிதுனம் பாட, கிளர் மழை கிழித்துத் தோன்றும்
மில் என, தரளம் வேய்ந்த வெண் நிற விமானம் ஊர்ந்து,
பன்னக மகளிர் சுற்றிப் பலாண்டு இசை பரவ, பண்ணைப்
பொன் நகர் வீதிதோறும், புது மனை புகுகின்றாரை- 117

கோவையும் குழையும் மின்ன, கொண்டலின் முரசம் ஆர்ப்ப,
தேவர் நின்று ஆசி கூற, முனிவர் சோபனங்கள் செப்ப,
பாவையர் குழாங்கள் சூழ, பாட்டொடு வான நாட்டுப்
பூவையர் பலாண்டு கூற, புது மணம் புணர்கின்றாரை- 118

அனுமன் கும்பகருணனைக் காணுதல்

இயக்கியர், அரக்கிமார்கள், நாகியர், எஞ்சு இல் விஞ்சை
முயல் கறை இலாத திங்கள் முகத்தியர், முதலினோரை-
மயக்கு அற நாடி ஏகும் மாருதி, மலையின் வைகும்,
கயக்கம் இல் துயிற்சிக் கும்பகருணனைக் கண்ணின் கண்டான். 119

ஓசனை ஏழ் அகன்று உயர்ந்தது; உம்பரின்
வாசவன் மணி முடி கவித்த மண்டபம்
ஏசுற விளங்கியது; இருளை எண் வகை
ஆசையின் நிலைகெட, அலைக்கல் ஆன்றது. 120



அன்னதன் நடுவண், ஓர் அமளி மீமிசை,
பன்னக அரசு என, பரவைதான் என,
துன் இருள் ஒருவழித் தொக்கது ஆம் என,
உன்ன அருந் தீவினை உருக் கொண்டென்னவே, 121

முன்னிய கனை கடல் முழுகி, மூவகைத்
தன் இயல் கதியொடு தழுவி, தாது உகு
மன் நெடுங் கற்பக வனத்து வைகிய
இன் இளந் தென்றல் வந்து இழுகி ஏகவே. 122

வானவர் மகளிர் கால் வருட, மா மதி
ஆனனம் கண்ட, மண்டபத்துள் ஆய் கதிர்க்
கால் நகு, காந்தம் மீக் கான்ற காமர் நீர்த்
தூ நிற நறுந் துளி முகத்தில் தூற்றமே. 123

மூசிய உயிர்ப்பு எனும் முடுகு வாதமும்,
வாசலின் புறத்திடை நிறுவி, வன்மையால்,
நாசியின் அளவையின் நடத்த, கண்டவன்
கூசினன்; குதித்தனன், விதிர்த்த கையினான். 124

பூழியின் தொகை விசும்பு அணவப் போய்ப் புகும்
கேழ் இல் வெங் கொடியவன் உயிர்ப்பு-கேடு இலா
வாழிய உலகு எலாம் துடைக்கும் மாருதம்
ஊழியின் வரவு பார்த்து உழல்வது ஒத்ததே. 125

பகை என, மதியினைப் பகுத்து, பாடு உற
அகை இல் பேழ் வாய் மடுத்து அருந்துவான் என,
புகையொடு முழங்கு பேர் உயிர்ப்புப் பொங்கிய
நகை இலா முழு முகத்து எயிறு நாறவே, 126

தடை புகு மந்திரம் தகைந்த நாகம்போல்,
இடை புகல் அரியது ஓரி உறக்கம் எய்தினான் -
கடை யுக முடிவு எனும் காலம் பார்த்து, அயல்
புடை பெயரா நெடுங் கடலும் போலவே. 127

இராவணனோ எனச் சினந்து பின் அவன் அல்லன் என அறிந்து அனுமன் சினம் தணிதல்

ஆவது ஆகிய தன்மைய அரக்கனை, 'அரக்கர்
கோ எனா நின்ற குணம்இலி இவன்' எனக் கொண்டான்;
கா வல் நாட்டங்கள் பொறி உக, கனல் எனக் கனன்றான்;
'ஏவனோ இவன்? மூவரின் ஒருவன் ஆம் ஈட்டான்!' 128

குறுகி நோக்கி, மற்று, 'அவன் தலை ஒருபதும், குறித்த
இறுகு திண் புயம் இருபதும், இவற்கு இலை' என்னா,
மறுகி ஏறிய முனிவு எனும் வடவை வெங் கனலி,
அறிவு எனும் பெரும் பரவைஅம் புனலினால், அவித்தான். 129

பிற இடங்களில் தேடல்

அவித்து நின்று, 'எவன் ஆயினும் ஆக' என்று, அங்கை
கவித்து, 'நீங்கிடச் சில பகல்' என்பது கருதா,
செவிக்குத் தேன் என இராகவன் புகழினைத் திருத்தும்
கவிக்கு நாயகன், அனையவன் உறையுளைக் கடந்தான். 130

மாட கூடங்கள், மாளிகை ஒளிகை, மகளிர்
ஆடு அரங்குகள், அம்பலம், தேவர் ஆலயங்கள்,
பாடல் வேதிகை, பட்டிமண்டபம், முதல் பலவும்
நாடி ஏகினன் - இராகவன் புகழ் எனும் நலத்தான். 131

மணி கொள் வாயிலில், சாளரத் தலங்களில், மலரில்,
கணிகொள் நாளத்தில், கால் என, புகை என, கலக்கும்;
நுணுகும், வீங்கும்;-மற்று அவன் நிலை யாவரே நுவல்வார்?-
அணுவில் மேருவில் ஆழியான் எனச் செலும், அனுமன். 132

அனுமன் வீடணன் மாளிகை புகுதலும், அவன் நல்லன் எனத் தேர்ந்து செல்லுதல்

ஏந்தல், இவ் வகை, எவ் வழிமருங்கினும் எய்தி,
காந்தள் மெல் விரல் மடந்தையர் யாரையும் காண்பான்,
வேந்தர், வேதியர், மேல் உளோர், கீழ் உளோர், விரும்பப்
போந்த புண்ணியன் கண் அகன் கோயிலுள் புக்கான். 133

'பளிக்கு வேதிகைப் பவளத்தின் கூடத்து, பசுந்தேன்
துளிக்கும் கற்பகப் பந்தரில், கருநிறத்தோர்பால்
வெளித்து வைகுதல் அரிது' என, அவர் உரு மேவி,
ஒளித்து வாழ்கின்ற தருமம் அன்னான்தனை உற்றான். 134

உற்று நின்று, அவன் உணர்வைத் தன் உணர்வினால் உணர்ந்தான்;
'குற்றம் இல்லது ஓர் குணத்தினன் இவன்' எனக் கொண்டான்;
செற்றம் நீங்கிய மனத்தினன், ஒரு சிறைச் சென்றான்;
பொற்றை மாடங்கள் கோடி ஓர் நொடியிடைப் புக்கான். 135

இந்திரசித்தின் வீரப் பொலிவை வியந்து மேலே போதல்

முந்து அரம்பையர் முதலினர், முழுமதி முகத்துச்
சிந்துரம் பயில் வாய்ச்சியர், பலரையும் தெரிந்து,
மந்திரம் பல கடந்து, தன் மனத்தின் முன் செல்வான்,
இந்திரன் சிறை இருந்த வாயிலின் கடை எதிர்ந்தான். 136

ஏதி ஏந்திய தடக் கையர், பிறை எயிறு இலங்க
மூதுரைப் பெருங் கதைகளும் பிதிர்களும் மொழிவார்,
ஓதில், ஆயிரம் ஆயிரம் உறு வலி அரக்கர்,
காது வெஞ் சினக் களியினர், காவலைக் கடந்தான். 137

முக்கண் நோக்கினன் முதல் மகன் அறுவகை முகமும்,
திக்கு நோக்கிய புயங்களும், சில கரந்தனையான்
ஒக்க, நோக்கியர் குழாத்திடை உறங்குகின்றானைப்
புக்கு நோக்கினன் - புகை புகா வாயிலும் புகுவான். 138

'வளையும் வாள் எயிற்று அரக்கனோ? கணிச்சியான் மகனோ?-
அளையில் வாள் அரி அனையவன் - யாவனோ? அறியேன்;
இளைய வீரனும், ஏந்தலும், இருவரும், பலநாள்
உளைய உள்ள போர் இவனொடும் உளது' என உணர்ந்தான். 139

'இவனை இன் துணை உடைய போர் இராவணன், என்னே,
புவனம் மூன்றையும் வென்றது ஓர் பொருள் எனப் புகறல்?
சிவனை, நான்முகத்து ஒருவனை, திரு நெடுமால் ஆம்
அவனை, அல்லவர் நிகர்ப்பவர் என்பதும், அறிவோ? 140

என்று, கைம் மறித்து, 'இடை நின்று காலத்தை இகப்பது
அன்று; போவது' என்று, ஆயிரம் ஆயிரத்து அடங்காத்
துன்று மாளிகை ஒளிகள் துரிசு அறத் துருவிச்
சென்று தேடினன், இந்திரசித்தினைத் தீர்ந்தான். 141

அக்கன் மாளிகை கடந்து போய், மேல், அதிகாயன்
தொக்க கோயிலும் தம்பியர் இல்லமும் துருவி,
தக்க மந்திரத் தலைவர் மா மனைகளும் தாவிப்
புக்கு நீங்கினன், இராகவன் சரம் என, புகழோன். 142

இடைநகர் அகழியைக் கண்ட அனுமனின் வியப்பு

இன்னர் ஆம் இரும் பெரும் படைத் தலைவர்கள் இருக்கைப்
பொன்னின் மாளிகை ஆயிர கோடியும் புக்கான்,
கன்னி மா நகர்ப்புறத்து அகன் கரந்துறை காண்பான்,
சொன்ன மூன்றினுள் நடுவணது அகழியைத் தொடர்ந்தான். 143

தனிக் கடக் களிறு என ஒரு துணை இலான் தாய
'பனிக் கடல் பெருங் கடவுள் தன் பரிபவம் துடைப்பான்,
இனி, கடப்ப அரிது ஏழ் கடல் கிடந்தது' என்று, இசைத்தான் -
கனிக்கு அடல் கதிர் தொடர்ந்தவன், அகழியைக் கண்டான். 144

'"பாழி நல் நெடுங் கிடங்கு எனப் பகர்வரேல்" பல பேர்,
ஊழிக்காலம் நின்று, உலகு எலாம் கல்லினும் உலவாது;
ஆழி வெஞ் சினத்து அரக்கனை அஞ்சி, ஆழ் கடல்கள்
ஏழும், இந் நகர் சுலாயகொலாம்' என, இசைத்தான். 145

ஆயது ஆகிய அகன் புனல் அகழியை அடைந்தான்,
'தாய வேலையின் இரு மடி விசைகொடு தாவிப்
போய காலத்தும் போக்கு அரிது' என்பது புகன்றான் -
நாயகன் புகழ் நடந்த பேர் உலகு எலாம் நடந்தான். 146




இடைநகர் அகழியின் ஏற்றம்

மேக்கு நால் வகை மேகமும் கீழ் விழத்
தூக்கினாலன்ன தோயத்ததுஆய், துயர்
ஆக்கினான் படை அன்ன அகழியை,
வாக்கினால் உரைவைக்கலும் ஆகுமோ? 147

ஆனை மும் மதமும், பரி ஆழியும்,
மான மங்கையர் குங்கும வாரியும்,
நானம் ஆர்ந்த நறைக் குழல் ஆவியும்,
தேனும், ஆரமும், தேய்வையும், நாறுமால், 148

உன்னம், நாரை, மகன்றில், புதா, உளில்,
அன்னம், கோழி, வண்டானங்கள், ஆழிப்புள்,
கின்னரம், குரண்டம், கிலுக்கம், சிரல்,
சென்னம், காகம், குணாலம், சிலம்புமே. 149

நலத்த மாதர் நறை அகில், நாவியும்,
அலத்தகக் குழம்பும், செறிந்து, ஆடிய
இலக்கணக் களிறோடு, இள மெல் நடைக்
குலப் பிடிக்கும், ஓர் ஊடல் கொடுக்குமால். 150

நறவு நாறிய நாள் நறுந் தாமரை
துறைகள்தோறும் முகிழ்த்தன தோற்னுமால் -
சிறையின் எய்திய செல்வி முகத்தினோடு
உறவு தாம் உடையார் ஒடுங்கார்களோ? 151

பளிங்கு செற்றிக் குயிற்றிய பாய் ஒளி
விளிம்பும், வெள்ளமும், மெய் தெரியாது, மேல் -
தெளிந்த சிந்தையரும், சிறியார்களோடு
அளிந்தபோது, அறிதற்கு எளிது ஆவரோ? 152

நீலமே முதல் நல் மணி நித்திலம்,
மேல கீழ, பல் வேறு ஒளி வீசலால்,
'பாலின் வேலை முதல் பல வேலையும்
கால் கலந்தனவோ?' என, காட்டுமே. 153

அகழியைக் கடந்து நகரினுள் அனுமன் தேடுதல்

அன்ன வேலை அகழியை, ஆர்கலி
என்னவே கடந்து, இஞ்சியும், பிற்பட,
துன்ன அருங் கடி மா நகர் துன்னினான்;
பின்னர் எய்திய தன்மையும், பேசுவாம்: 154

கரிய நாழிகை பாதியில், காலனும்
வெருவி ஓடும் அரக்கர்தம் வெம் பதி,
ஒருவனே, ஒரு பன்னிரு யோசனைத்
தெருவு மும்மை நூறாயிரம் தேடினான். 155

இலங்கையில் நடு நிசி

வேரியும் அடங்கின; நெடுங் கடல் விளம்பும்,
பாரியும் அடங்கின; அடங்கியது பாடல்;
காரியம் அடங்கினர்கள், கம்மியர்கள்; மும்மைத்
தூரியம் அடங்கின; தொடங்கியது உறக்கம். 156

இறங்கின, நிறம் கொள் பரி; ஏமம் உற எங்கும்
கறங்கின, மறம் கொள் எயில் காவலர் துடிக் கண்;
பிறங்கு இணர் நறுங் குழலர் அன்பர் பிரியாதோர்,
உறங்கினர், பிணங்கி எதிர் ஊடினர்கள் அல்லார். 157

வடம் தரு தடங் கொள் புய மைந்தர், கலவிப் போர்
கடந்தனர்; இடைந்தனர், களித்த மயில் போலும்
மடந்தையர் தடந் தன முகட்டிடை மயங்கிக்
கிடந்தனர்; நடந்தது, புணர்ச்சி தரு கேதம். 158

வாம நறையின் துறை மயங்கினர் மறந்தார்;
காம நறையின் திறம் நுகர்ந்தனர் களித்தார்;
பூ மன் நறை வண்டு அறை இலங்கு அமளி புக்கார்,
தூம நறையின் துறை பயின்றிலர், துயின்றார். 159

பண் இமை அடைத்த, பல கள்-பொருநர் பாடல்;
விண் இமை அடைத்தென, விளைந்தது இருள்; வீணை
தண் இமை அடைத்தன; தழங்கு இசை வழங்கும்
கண் இமை அடைத்தன; அடைத்தன கபாடம். 160

விரிந்தன நரந்தம் முதல் வெண் மலர் வளாகத்து
உரிஞ்சி வரு தென்றல், உணர்வு உண்டு அயல் உலாவ,
சொரிந்தன கருங் கண், வரு துள்ளி தரு வெள்ளம்;
எரிந்தன, பிரிந்தவர்தம் எஞ்சு தனி நெஞ்சம். 161

இளக்கர் இழுது எஞ்ச, விழும் எண் அரு விளக்கைத்
துளக்கியது தென்றல், பகை சோர உயர்வோரின்;
அளக்கரொடு அளக்க அரிய ஆசை உற வீசா,
விளக்கு இனம் விளக்குமணி மெய் உறு விளக்கம். 162

நித்தம் நியமத் தொழிலர் ஆய், நிறையும் ஞானத்து
உத்தமர் உறங்கினர்கள்; யோகியர் துயின்றார்;
மத்த மத வெங் களிறு உறங்கின; மயங்கும்
பித்தரும் உறங்கினர்; இனிப் பிறரிது என ஆம்? 163

அகநகரினுள் சென்று அனுமன் தேடுதல்

ஆய பொழுது, அம் மதில் அகத்து, அரசர் வைகும்
தூய தெரு ஒன்றொடு ஒரு கோடி துருவிப் போய்,
தீயவன் இருக்கை அயல், செய்த அகழ் இஞ்சி
மேயது கடந்தனன் - வினைப் பகையை வென்றான். 164

போர் இயற்கை இராவணன் பொன் மனை
சீர் இயற்கை நிரம்பிய திங்களா,
தாரகைக் குழுவின் தழுவித் தொடர்,
நாரியர்க்கு உறைவு ஆம், இடம் நண்ணினான். 165

முயல் கருங் கறை நீங்கிய மொய்ம் மதி
அயர்க்கும் வாள் முகத்து ஆர் அமுது அன்னவர்,
இயக்கர் மங்கையர், யாவரும் ஈண்டினார்,
நயக்கும் மாளிகை வீதியை நண்ணினான். 166

தழைந்த மொய் ஒளி பெய்ம் மணித் தாழ் தொறும்,
இழைந்த நூலினும், இன் இளங்காலினும்,
நுழைந்து நொய்தினின் மெய் உற நோக்கினான்-
விழைந்த வெவ் வினை வேர் அற வீசினான். 167

இராவணனுக்கு உரிய இயக்க மாதர்களின் நிலைமை

அத்திரம் புரை யானை அரக்கன்மேல்
வைத்த சிந்தையர், வாங்கும் உயிர்ப்பிலர்,
பத்திரம் புரை நாட்டம் பதைப்பு அற,
சித்திரங்கள் என, இருந்தார் சிலர். 168

அள்ளல் வெஞ் சர மாரனை அஞ்சியோ?
மெள்ள இன் கனவின் பயன் வேண்டியோ?
கள்ளம் என்கொல்? அறிந்திலம் - கண் முகிழ்த்து,
உள்ளம் இன்றி, உறங்குகின்றார் சிலர். 169

பழுது இல் மன்மதன் எய் கணை பல் முறை
உழுத கொங்கையர், ஊசல் உயிர்ப்பினர்,
'அழுது செய்வது என்? ஆணை அரக்கனை
எழுதலாம்கொல்?' என்று, எண்ணுகின்றார் சிலர். 170




'ஆவது ஒன்று அருளாய்; எனது ஆவியைக்
கூவுகின்றிலை; கூறலை சென்று' எனா,
பாவை பேசுவதுபோல், கண் பனிப்பு உற,
பூவையோடும் புலம்புகின்றார் சிலர். 171

ஈரத் தென்றல் இழுக மெலிந்து, தம்
பாரக் கொங்கையைப் பார்த்தனர்; பாதகன்
வீரத் தோள்களின் வீக்கம் நினைந்து, உயிர்
சோரச் சோரத் துளங்குகின்றார் சிலர். 172

நக்க செம் மணி நாறிய நீள் நிழல்
பக்கம் வீசுறு பள்ளியில், பல் பகல்
ஒக்க ஆசை உலக்க உலந்தவர்,
செக்கர் வான் தரு திங்கள் ஒத்தார் சிலர். 173

வாளின் ஆற்றிய கற்பக வல்லியர்
தோளின் நாற்றிய தூங்கு அமளித் துயில்
நாளினால், செவியில் புகும் நாம யாழ்த்
தேளினால், திகைப்பு எய்துகின்றார் சிலர். 174

கவ்வு தீக் கணை, மேருவைக் கால் வளைத்து,
எவ்வினான் மலை ஏந்திய ஏந்து தோள்
வவ்வு சாந்து, தம் மா முலை வவ்விய
செவ்வி கண்டு, குலாவுகின்றார் சிலர். 175

கூடி நான்கு உயர் வேலையும் கோக்க நின்று
ஆவினான் புகழ், அம் கை நரம்பினால்
நாடி, நால் பெரும் பண்ணும் நயப்பு உறப்
பாடினான் புகழ் பாடுகின்றார் சிலர். 176

இராவணனின் உரிமை மகளிராம் அரக்கியரின் நிலைமை

இனைய தன்மை இயக்கியர் ஈண்டிய
மனை ஓர் ஆயிரம் ஆயிரம் வாயில் போய்,
அனையவன் குலத்து ஆயிழையார் இடம்
நினைவின் எய்தினன் - நீதியின் எய்தினான். 177

எரி சுடர் மணியின் செங் கேழ் இள வெயில் இடைவிடாது
விரி இருள் பருகி, நாளும் விளக்கு இன்றி விளங்கும் மாடத்து,
அரிவையர் குழுவும் நீங்க, ஆசையும் தாமுமே ஆய்,
ஒரு சிறை இருந்து, போன உள்ளத்தோடு ஊடுவாரும். 178

நகை எரிக் கற்றை நெற்றி நாவி தோய்ந்தனைய ஓதி,
புகை எனத் தும்பி சுற்ற, புது மலர்ப் பொங்கு சேக்கை
பகை என ஏகி, யாணர்ப் பளிங்குடைச் சீதப் பள்ளி,
மிகை ஒடுங்காத காம விம்மலின், வெதும்புவாரும். 179

சவி படு தகை சால் வானம் தான் ஒரு மேனி ஆக,
குவியும் மீன் ஆரம் ஆக, மின் கொடி மருங்குல் ஆக,
கவிர் ஒளிச் செக்கர் கற்றை ஓதியா, மழை உண் கண்ணா,
அவிர் மதி நெற்றி, ஆக, அந்தி வான் ஒக்கின்றாரும். 180

பானல் உண் கண்ணும் வண்ணப் படி முறை மாற, பண்ணைச்
சோனை போன்று அளிகள் பம்பும் சுரி குழல் கற்றை சோர,
மேல் நிவந்து எழுந்த மாட வெண் நிலா முன்றில் நண்ணி,
வான மீன் கையின் வாரி, மணிக் கழங்கு ஆடுவாரும். 181

உழை உழைப் பரந்த வான யாற்றுநின்று, உம்பர் நாட்டுக்
குழை முகத்து ஆயம், தந்த புனல் குளிர்ப்பு இல என்று ஊடி,
இழை தொடுத்து இலங்கும் மாடத்து, இடை தடுமாற ஏறி,
மழை பொதுத்து, ஒழுகு நீரால், மஞ்சனம் ஆடுவாரும். 182

'பன்னக அரசர் செங் கேழ்ப் பணா மணி வலிதின் பற்றி,
இன் உயிர்க் கணவன் ஈந்தான்; ஆம்' என, இருத்தி, விஞ்சை
மன்னவர் முடியும், பூணும், மாலையும், பணையம் ஆக,
பொன் அணி பலகைச் சூது, துயில்கிலர் பொருகின்றாரும். 183

தென் நகு குடம், உள்-பாடல், சித்தியர் இசைப்ப, தீம் சொல்
பன்னக மகளிர் வள் வார்த் தண்ணுமைப் பாணி பேண,
பொன்னகர்த் தரளப் பந்தர், கற்பகப் பொதும்பர், பொன்-தோள்
இன் நகை அரம்பைமாரை ஆடல் கண்டு இருக்கின்றாரும் 184

ஆணியின் கிடந்த காதல் அகம் சுட, அருவி உண் கண்
சேண் உயர் உறக்கம் தீர்ந்த சிந்தையர், செய்வது ஓரார்,
வீணையும், குழலும், தம்தம் மிடறும், வேற்றுமையின் தீர்ந்த,
பாணிகள் அளந்த பாடல் அமிழ்து உகப் பாடுவாரும். 185

தண்டலை வாழை அன்ன குறங்கிடை, அல்குல் தட்டில்,
கொண்ட பூந் துகிலும், கோவைக் கலைகளும், சோர, கூர்ங் கள்
உண்டு அலமந்த கண்ணார், ஊசலிட்டு உலாவுகின்ற
குண்டலம் திரு வில் வீச, குரவையில் குழறுவாரும். 186

நச்சு எனக் கொடிய நாகக் கள்ளொடு குருதி நக்கி,
பிச்சரின் பிதற்றி, அல்குல் பூந் துகில் கலாபம் பீறி,
குச்சரித் திறத்தின் ஓசை களம் கொள, குழுக் கொண்டு ஈண்டி,
சச்சரிப் பாணி கொட்டி, நிறை தடுமாறுவாரும். 187

தயிர் நிறத்து உறு கள் உள்ளம் தள்ளுற, அறிவு தள்ளி,
பயிர் உற, 'தெய்வம் என் மேல் படிந்தது; பார்மின்!' என்னா,
உயிர் உயிர்த்து, இரண்டு கையும் உச்சிமேல் உயர் நீட்டி,
மயிர் சிலிர்த்து, உடலம் கூசி, வாய் விரித்து ஒடுங்குவாரும். 188

இத் திறத்து அரக்கிமார்கள் ஈர்-இரு கோடி ஈட்டம்
பத்தியர் உறையும், பத்திப் படர் நெடுந் தெருவும் பார்த்தான்;
சித்தியர் உறையும் மாடத் தெருவும் பின்னாகச் சென்றான்;
உத் திசை விஞ்சை மாதர் உறையுளை முறையின் உற்றான். 189

விஞ்சை மகளிரின் நிலை

வளர்ந்த காதலர், மகரிகை நெடு முடிஅரக்கனை வரக் காணார்,
தளர்ந்த சிந்தை தம் இடையினும் நுடங்கிட, உயிரொடு தடுமாறி,
களம் தவா நெடுங் கருவியில், கைகளில், செயிரியர், கலைக் கண்ணால்
அளந்த பாடல் வெவ் அரவு தம் செவி புக, அலமரலுறுகின்றார். 190

'புரியும் நல் நெறி முனிவரும், புலவரும், புகல் இலாப் பொறைகூர,
எரியும் வெஞ் சினத்து இகல் அடு கொடுந் திறல் இராவணற்கு, எஞ் ஞான்றும்
பரியும் நெஞ்சினர் இவர்' என வயிர்த்து ஒரு பகை கொடு, பனித் திங்கள்
சொரியும் வெங் கதிர் துணை முலைக் குவை சுட, கொடிகளின் துடிக்கின்றார்.         191

சிறுகு காலங்கள் ஊழிகள் ஆம் வகை, திரிந்து சிந்தனை சிந்த,
முறுகு காதலின் வேதனை உழப்பவர், முயங்கிய முலை முன்றில்
இறுகு சாந்தமும், எழுதிய குறிகளும், இன் உயிர்ப் பொறை ஈர,
மறுகு வாட் கண்கள் சிவப்புற நோக்கினர்; வயிர்த்தனர்; உயிர்க்கின்றார்.       192

அனுமன் மண்டோ தரியைக் கண்டு, 'சீதையோ' என ஐயுற்று, தெளிதல்

ஆய விஞ்சையர் மடந்தையர் உறைவிடம் ஆறு-இரண்டு அமை கோடித்
தூய மாளிகை நெடுந் தெருத் துருவிப் போய், தொலைவு இல் மூன்று உலகிற்கும்
நாயகன் பெருங் கோயிலை நண்ணுவான், கண்டனன், நளிர் திங்கள்
மாய நந்திய வாள் முகத்து ஒரு தனி மயன் மகள் உறை மாடம். 193

கண்டு, கண்ணொடும் கருத்தொடும் கடாவினன், 'காரணம் கடை நின்றது;
உண்டு வேறு ஒரு சிறப்பு; எங்கள் நாயகற்கு உயிரினும் இனியாளைக்
கொண்டு போந்தவன் வைத்தது ஓர் உறையுள்கொல்? குல மணி மனைக்கு எல்லாம்
விண்டுவின் தட மார்பினின் மணி ஒத்தது இது!' என, வியப்புற்றான். 194




அரம்பை, மேனகை, திலோத்தமை, உருப்பசி, ஆதியர், மலர்க் காமன்
சரம் பெய் தூணிபோல் தளிர் அடி தாம் தொட, சாமரை பணிமாற,
கரும்பையும் சுவை கைப்பித்த சொல்லியர், காமரம் கனி யாழின்
நரம்பின் இன் இசை செவி புக, நாசியில் கற்பக விரை நாற,- 195

'விழைவு நீங்கிய மேன்மையர் ஆயினும், கீழ்மையர் வெகுள்வுற்றால்,
பிழைகொல் நன்மைகொல் பெறுவது?'என்று ஐயுறு பீழையால்,பெருந்தென்றல்,
உழையர் கூவ, புக்கு, 'ஏகு' என, பெயர்வது ஓர் ஊசலின் உளதாகும்-
'பழையம் யாம்' என, பண்பு அல செய்வரோ பருணிதர், பயன் ஓர்வார்? 196

இன்ன தன்மையின், எரி மணி விளக்கங்கள் எழில் கெடப் பொலிகின்ற
தன்னது இன் ஒளி தழைப்புறத் துயில்வுறு தையலை, தகைவு இல்லான்,
'அன்னள் ஆகிய சானகி இவள்' என அயிர்த்து, அகத்து எழு வெந் தீ,
துன்னும் ஆர் உயிர் உடலொடு சுடுவது ஓர் துயர் உழந்து, இவை சொன்னான்:          197

'எற்பு வான் தொடர் யாக்கையால் பெறும் பயன் இழந்தனள்! இது நிற்க;
அற்பு வான் தளை இற் பிறப்புஅதனொடும் இகந்து தன் அருந் தெய்வக்
கற்பு நீங்கிய கனங் குழை இவள் எனின், காகுத்தன் புகழோடும்
பொற்பும் யானும்,இவ் இலங்கையும் அரக்கரும்,பொன்றுதும் இன்று'என்றான்.      198

'மானுயர்த் திரு வடிவினள் அவள்; இவள் மாறு கொண்டனள்; கூறின்,
தான் இயக்கியோ? தானவர் தையலோ? ஐயுறும் தகை ஆனாள்!
கான் உயர்த்த தார் இராமன்மேல் நோக்கிய காதல் காரிகையார்க்கு
மீன் உயர்த்தவன் மருங்குதான் மீளுமோ? நினைந்தது மிகை' என்றான். 199

'இலக்கணங்களும் சில உள என்னினும், எல்லை சென்று உறுகில்லா
அலக்கண் எய்துவது அணியது உண்டு' என்று, எடுத்து அறைகுவது, இவள் யாக்கை;
மலர்க் கருங் குழல் சோர்ந்து, வாய் வெரீஇ, சில மாற்றங்கள் பறைகின்றாள்;
உலக்கும் இங்கு இவள் கணவனும்; அழிவும், இவ்வியன் நகர்க்கு உளது!' என்றான். 200

இராவணன் மனையுள் அனுமன் புகுதலும், தீக்குறி காணலும்

என்று உணர்ந்துநின்று ஏமுறும் நிலையினில், 'நிற்க இத் திறன்' என்னா,
பின்று சிந்தையன் பெயர்ந்தனன்; அம் மனை பிற்பட, பெரு மேருக்
குன்று குன்றிய தகை உற ஓங்கிய கொற்ற மாளிகைதன்னில்
சென்று புக்கனன், இராவணன் எடுப்பு அருங் கிரி எனத் திரள் தோளான். 201

நிலம் துடித்தன; நெடு வரை துடித்தன; நிருதர்தம் குல மாதர்
பொலந் துடிக்கு அமை மருங்குல்போல், கண்களும், புருவமும், பொன்-தோளும்,
வலம் துடித்தன; மாதிரம் துடித்தன; தடித்து இன்றி, நெடு வானம்
கலந்து இடித்தன; வெடித்தன, பூரண மங்கல கலசங்கள். 202

புக்கு நின்று, தன் புலன் கொள நோக்கினன்; பொரு அருந் திரு உள்ளம்
நெக்கு நின்றனன்; 'நீங்கும், அந்தோ இந்த நெடு நகர்த் திரு!' என்னா,
'எக் குலங்களின் யாவரே ஆயினும், இரு வினை எல்லோர்க்கும்
ஒக்கும்; ஊழ் முறை அல்லது, வலியது ஒன்று இல்' என, உணர்வுற்றான். 203

துயிலும் இராவணனைக் கண்ட அனுமன் சினந்து அவனைக் கொல்ல நினைத்தல்

நூல்-பெருங்கடல் நுணங்கிய கேள்வியன், நோக்கினன்; மறம் கூரும்
வேல்-பெருங்கடல் புடை பரந்து ஈண்டிய வெள்ளிடை வியன் கோயில்,
பால்-பெருங்கடல் பல் மணிப் பல் தலைப் பாப்புடைப் படர் வேலை
மால்-பெருங்கடல் வதிந்ததே அனையது ஓர் வனப்பினன், துயில்வானை- 204

குழவி ஞாயிறு குன்று இவர்ந்தனையன குரு மணி நெடு மோலி
இழைகளோடு நின்று இள வெயில் எறித்திட, இரவு எனும் பெயர் வீய,
முழை கொள் மேருவின் முகட்டிடைக் கனகனை முருக்கிய முரண் சீயம்,
தழை கொள் தோளொடு தலை பல பரப்பி,முன்,துயில்வது ஓர் தகையானை-205

ஆய பொன்-தலத்து ஆய் வளை அரம்பையர் ஆயிரர் அணி நின்று
தூய வெண் கவரித் திரள் இயக்கிட, சுழி படு பசுங் காற்றின்,
மீய கற்பகத் தேன்துளி விராயன வீழ்தொறும், நெடு மேனி
தீய, நல் தொடிச் சீதையை நினைதொறும் உயிர்த்து, உயிர் தேய்வானை- 206

குழந்தை வெண் மதிக் குடுமியின் நெடு வரை குலுக்கிய குலத் தோளைக்
கழிந்து புக்கு, இடை கரந்தன, அனங்கன் வெங்கடுங் கணை பல பாய,
உழந்த வெஞ் சமத்து உயர் திசை யானையின் ஒளி மருப்பு உற்று இற்ற
பழந் தழும்பினுக்கு இடை இடையே, சில பசும் புண்கள் அசும்பு ஊற, 207

சாந்து அளாவிய கலவைமேல் தவழ்வுறு தண் தமிழ்ப் பசுந் தென்றல்,
ஏந்து காம வெங் கனல் உயிர்த்து, இரு மடி துருத்தியின் உயிர்ப்பு ஏற,
காந்தள் மெல் விரல் சனகிமேல் மனம் முதல் கரணங்கள் கடிது ஓட,
பாந்தள் நீங்கிய முழை என, குழைவுறு நெஞ்சு பாழ்பட்டானை- 208

கொண்ட பேர் ஊக்கம் மூள, திசைதொறும் குறித்து மேல்நாள்
மண்டிய செருவில், மானத் தோள்களால் வாரி வாரி
உண்டது தெவிட்டி, பேழ் வாய்க் கடைகள்தோறு ஒழுகிப் பாயும்
அண்டர் தம் புகழின் தோன்றும், வெள் எயிற்று அமைதியானை- 209

வெள்ளி வெண் சேக்கை வெந்து, பொறி எழ, வெதும்பும் மேனி
புள்ளி வெண் மொக்குள் என்னப் பொடித்து வேர் கொதித்துப் பொங்க,
கள் அவிழ் மாலைத் தும்பி வண்டொடும் கரிந்து சாம்ப,
ஒள்ளிய மாலை தீய, உயிர்க்கின்ற உயிர்ப்பினானை- 210

தே இயல் நேமியானின், சிந்தை மெய்த் திருவின் ஏக,
பூ இயல் அமளி மேலாப் பொய் உறக்கு உறங்குவானை,
காவி அம் கண்ணிதன்பால் கண்ணிய காதல் நீரின்,
ஆவியை உயிர்ப்பு என்று ஓதும் அம்மி இட்டு அரைக்கின்றானை- 211

மிகும் தகை நினைப்பு முற்ற உரு வெளிப்பட்ட வேலை,
நகும் தகை முகத்தன், காதல் நடுக்குறு மனத்தன், 'வார் தேன்
உகும் தகை மொழியாள் முன்னம் ஒருவகை உறையுளுள்ளே
புகுந்தனள் அன்றோ?' என்று, மயிர் புறம் பொடிக்கின்றானை- 212

மென் தொழில் கலாப மஞ்ஞை வேட்கை மீக்கூறுமேனும்,
குன்று ஒழித்து ஒரு மாக் குன்றின் அரிதின் சேர் கொள்கை போல,
வன் தொழில் கொற்றப் பொன்-தோள் மணந்து, அரு மயிலே அன்னார்,
ஒன்று ஒழித்து ஒன்றின் ஏக, அரிய தோள் ஒழுக்கினானை- 213

தழுவா நின்ற கருங் கடல்மீது உதயகிரியில் சுடர் தயங்க
எழுவான் என்ன, மின் இமைக்கும் ஆரம் புரளும் இயல்பிற்று ஆய்,
முழு வானவர்ஆய் உலகம் ஒரு மூன்றும் காக்கும் முதல் தேவர்
மழு வாள், நேமி, குலிசத்தின் வாய்மை துடைத்த மார்பானை- 214

தோடு உழுத தார் வண்டும், திசை யானை மதம் துதைந்த வண்டும், சுற்றி,
மாடு உழுத நறுங் கலவை வயக் களிற்றின் சிந்துரத்தை மாறுகொள்ள,
கோடு உழுத மார்பானை, கொலை உழுத வடி வேலின் கொற்றம் அஞ்சி,
தாள் தொழுத பகை வேந்தர் முடி உழுத தழும்பு இருந்த சரணத்தானை- 215

கண்டனன்; காண்டலோடும், கருத்தின் முன் காலச் செந் தீ
விண்டன கண்கள்; கீண்டு வெடித்தன, கீழும் மேலும்;-
கொண்டது ஓர் உருவம் மாயோன் குறளினும் குறுக நின்றான்-
திண் தலை பத்தும், தோள்கள் இருபதும், தெரிய நோக்கி. 216

'தோள் ஆற்றல் என் ஆகும்? மேல் நிற்கும் சொல் என் ஆம்?
வாள் ஆற்று கண்ணாளை வஞ்சித்தான் மணி முடி என்
தாள் ஆற்றலால் இடித்து, தலை பத்தும் தகர்த்து, இன்று என்
ஆள் ஆற்றல் காட்டேனேல், அடியேனாய், முடியேனே! 217

'நடித்து வாழ் தகைமையதோ அடிமைதான்? நன்னுதலைப்
பிடித்து, வாழ் அரக்கனார், யான் கண்டும் பிழைப்பாரோ?
ஒடித்து வான் தோள் அனைத்தும், தலை பத்தும் உதைத்து உருட்டி,
முடித்து, இவ் ஊர் முடித்தால், மேல் முடிவது எலாம் முடிந்து ஒழிக!' 218




ஆய்ந்து பார்த்து, அனுமன் கோபம் தணிதல்

என்று, ஊக்கி, எயிறு கடித்து, இரு கரனும் பிசைந்து, எழுந்து,
நின்று, ஊக்கி உணர்ந்து உரைப்பான், 'நேமியோன் பணி அன்றால்;
ஒன்று ஊக்கி, ஒன்றுஇழைத்தல், உணர்வு உடைமைக்கு உரித்து அன்றால்;
பின் தூக்கின், இது சாலப் பிழை பயக்கும்' எனப் பெயர்ந்தான். 219

ஆலம் பார்த்து உண்டவன்போல் ஆற்றல் அமைந்துளர்எனினும்,
சீலம் பார்க்க உரியோர்கள் எண்ணாது செய்பவோ?-
மூலம் பார்க்குறின், உலகை முற்றுவிக்கும் முறை தெரினும்,
காலம் பார்த்து, இறை வேலை கடவாத கடல் ஒத்தான். 220

'இற்றைப் போர்ப் பெருஞ் சீற்றம் என்னோடும் முடிந்திடுக;
"கற்றைப் பூங் குழலாளைச் சிறை வைத்த கண்டகனை
முற்றப் போர் முடித்தது, ஒரு குரங்கு" என்றால், முனை வீரன்
கொற்றப் போர்ச் சிலைத் தொழிற்குக் குறை உண்டாம்' என, குறைந்தான். 221

அந் நிலையான், பெயர்த்த் உரைப்பான்; 'ஆய் வளைக் கை அணிஇழையார்
இந் நிலையானுடன் துயில்வார் உளர்அல்லர்; இவன் நிலையும்
புல் நிலைய காமத்தால் புலர்கின்ற நிலை; பூவை
நல் நிலையின் உளள் என்னும் நலன் எனக்கு நல்குமால்!' 222

சீதையைக் காணாமையால் இலங்கையை அழித்து, தானும் மாள அனுமன் எண்ணுதல்

என்று எண்ணி, 'ஈண்டு இனி ஓர் பயன் இல்லை' என நினையா,
குன்று அன்ன தோளவன்தன் கோமனை பிற்பட, பெயர்ந்தான்;
நின்று எண்ணி உன்னுவான், 'அந்தோ! இந் நெடு நகரில்
பொன் துன்னும் மணிப் பூணாள் இலள்' என்ன, பொருமுவான். 223

'கொன்றானோ கற்பு அழியாக் குல மகளை? கொடுந் தொழிலால்
தின்றானோ? எப் புறத்தே செறிந்தானோ, சிறை? சிறியேன்
ஒன்றானும் உணரகிலேன்; மீண்டு, இனிப் போய் என் உரைக்கேன்?
பொன்றாத பொழுது, எனக்கு, இக் கொடுந் துயரம் போகாதால். 224

'"கண்டு வரும்" என்று இருக்கும் காகுத்தன்; கவிகுலக் கோன்,
"கொண்டு வரும்" என்று இருக்கும்; யான் இழைத்த கோள் இது வால்;
புண்டரிக நயனத்தான்பால், இனி, யான் போவேனோ?
விண்டவரோடு உடன் வீயாது, யான் வாளா விளிவேனோ? 225

'"கண்ணிய நாள் கழிந்துளவால்; கண்டிலமால் கனங்குழையை;
விண் அடைதும்" என்றாரை ஆண்டு இருத்தி, விரைந்த யான்
எண்ணியது முடிக்ககிலேன்; இனி முடியாது இருப்பேனோ?
புண்ணியம் என்று ஒரு பொருள் என்னுழைநின்றும் போயதால். 226

'ஏழு நூறு ஓசனை சூழ்ந்து எயில் கிடந்தது இவ் இலங்கை
வாழும் மா மன் உயிர், யான் காணாத மற்று இல்லை;
ஊழியான் பெருந் தேவி ஒருத்தியுமே யான் காணேன்;
ஆழி தாய், இடர்-ஆழியிடையே வீழ்ந்து, அழிவேனோ? 227

'வல் அரக்கன்தனைப் பற்றி, வாயாறு குருதி உக,
கல் அரக்கும் கரதலத்தால், "காட்டு" என்று காண்கேனோ?
எல் அரக்கும் அயில் நுதி வேல் இராவணனும், இவ் ஊரும்,
மெல் அரக்கின் உருகி உக, வெந் தழலால் வேய்கேனோ? 228

'வானவரே முதலோரை வினவுவெனேல், வல் அரக்கன்-
தான் ஒருவன் உளன் ஆக, உரைசெய்யும் தருக்கு இலரால்,
ஏனையர்கள் எங்கு உரைப்பார்? எவ்வண்ணம் தெரிகேனோ?
ஊன் அழிய நீங்காத உயிர் சுமந்த உணர்வு இல்லேன்? 229

'எருவைக்கு முதல் ஆய சம்பாதி, "இலங்கையில், அத்
திருவைக் கண்டனென்" என்றான்; அவன் உரையும் சிதைந்ததால்;
கரு வைக்கும் நெடு நகரைக் கடலிடையே கரையாதே,
உருவைக் கொண்டு, இன்னமும் நான், உளென் ஆகி உழல்கேனோ? 230

'"வடித்து ஆய் பூங் குழலாளை, வான் அறிய, மண் அறிய,
பிடித்தான் இவ் அடல் அரக்கன்" எனும் மாற்றம், பிழையாதால்;
எடுத்து ஆழி இலங்கையினை இருங் கடல் இட்டு, இன்று, இவனை
முடித்தாலே, யான் முடிதல் முறை மன்ற!' என்று உணர்வான். 231

தேடி அலைந்த அனுமன் ஒரு சோலையைக் காணல்

எள் உறையும் ஒழியாமல் யாண்டையுளும் உளனாய், தன்
உள் உறையும் ஒருவனைப்போல், எம் மருங்கும் உலாவுவான்;
புள் உறையும் மானத்தை உற நோக்கி அயல் போவான்,
கள் உறையும் மலர்ச் சோலை அயல் ஒன்று கண்ணுற்றான். 232

மிகைப் பாடல்கள்

'அண்டம் முற்றவும் விழுங்கு இருள் அகற்றி நின்று, அகல் வான்
கண்ட, அத் தனிக் கடி நகர் நெடு மனை; கதிர்கட்கு
உண்டு, (வ்) ஆற்றல் என்று உரைப்பு அரிது! ஒப்பிடின், தம் முன்
விண்ட வாய்ச் சிறு மின்மின் என்னவும் விளங்கா. 15-1

வானும் நிலனும் பெறுமாறு, இனி, மற்றும் உண்டோ -
கானும், பொழிலும், இவை செங் கனகத்தினாலும்,
ஏனைம் மணியாலும் இயற்றியவேனும், யாவும்
தேனும், மலரும், கனியும், தரச் செய்த செய்கை? 17-1

'ஊறு மிகவே உறினும், யானும் அமர் தேரேன்,
தேறல் இல் அரக்கர் புரி தீமைஅது தீர்வுற்று,
ஏறும் வகை எங்குள? இராமனிடை அல்லால்,
மாறும் மதி வேறு பிறிது இல்' என மதித்தான். 71-1

'கண்ட வனப்பான், மேனி கரக்கும் கருமத்தான்,
கொண்டல் செறிப்பான், வானரம் என்றும் கொளல் அன்றே;
அண்டம் அனைத்தும் பூரணன் ஆகும் அவன் ஆகும்;
சண்டை கொடுத்தும் கொள்வன்' எனத் தான் சலம் உற்றாள். 84-1

ஆயவன் அருளால், மீட்டும் அந்தரி அறைந்தாள், 'முன்நாள்
மாய மா நகரம் தன்னை வகுத்து, அயன் என்னும் மேலாம்
தூயவன் என்னை நோக்கி, "சுந்தரி! காப்பாய்" என்று, ஆங்கு,
ஏயினன், இதற்கு நாமம் இலங்கை என்று எவரும் போற்ற, 91-1

இத் திறம் அனந்த கோடி இராக்கதக் குழுவின் உள்ளார்
தத்தம செய்கை எல்லாம் தனித் தனி நோக்கி, தாங்காது,
'எத் திறம் இவர்தம் சீரை எண்ணுவது?' எனவே, அண்ணல்
உத்தமன் தேவிதன்னை ஒழிவு அற நாடிப் போனான். 118-1

கிடந்தனன், வடவரை கிடந்தபோல்; இரு
தடம் புயம் திசைகளை அளக்கத் தாங்கிய
உடம்பு உறு முயற்சியின் உறங்கினான், கடை
இடம் பெறு தீவினை யாவும் ஏத்தவே. 121-1

குடம் தரும் செவிகளும், குன்றம் நாணுறத்
தடந் தரு கரங்களும், தாளும், தாங்குறாக்
கிடந்தது ஓர் இருள் எனக் கிடந்துளான்தனை
அடைந்தனன், அஞ்சுறாது-அனுமன் ஆண்மையான். 127-1


No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer