Sunday 27 November 2016

திரு_அண்ணாமலை_திருக்கார்த்திகை_திருவிழா

#திரு_அண்ணாமலை_திருக்கார்த்திகை_திருவிழா

அண்ணாமலை எம் அண்ணா போற்றி!..
கண்ணார் அமுதக் கடலே போற்றி!

-
"உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம் முழவதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே."

-
கார்த்திகை நாளின் மாலைப் பொழுதில் தம் இல்லத்திலும் திருக்கோயில்களிலும் அகல் விளக்குகளை அழகுற ஏற்றி வைத்து ஆராதனை செய்வதைப் பெரும் பேறெனக் கொள்வர்.

அணிதிகழ் அகல் விளக்கொளியில் அகமும் புறமும் மகிழ்வுறும் அற்புதத் திருநாள்

இந்த நன்னாள், எதிர்வரும் 05-12-2014. வெள்ளிக்கிழமை கூடி வருகின்றது.

திருக்கார்த்திகைத் திருநாள் பூவுலகில் அக்னி மலையாகத் திகழும் அண்ணாமலைக்கே உரித்தானது.

திருக்கார்த்திகை நாளினை பத்தாம் திருவிழாவாகக் கொண்டு அருணாசலம் எனப்படும் அண்ணாமலையில் இன்று கோலாகலமாகக் கொடியேற்றம் நிகழ்கின்றது.

எண்ணற்ற பெருமைகளுடன் திகழும் திருத்தலம் - திரு அண்ணாமலை.

ஈசன் மலை வடிவாகத் திகழ்கின்றனன் என்பர் பெரியோர்.

அப்பர் ஸ்வாமிகளும் ஞானசம்பந்தப்பெருமானும் பாடிப் பரவிய திருத்தலம்.

மாணிக்கவாசகப் பெருமான் போற்றித் துதித்த திருத்தலம்.

எத்தனை எத்தனையோ சித்தர்களும் மகான்களும் வாழ்ந்த திருத்தலம்.

இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் திருத்தலம்.

வாழ்வில் தடம் மாறிச் சென்றதால் தடுமாறித் தவித்த அருணகிரி தமிழ்க் குமரனின் திருவருளால் மீண்டும் தலை நிமிர்ந்து துலங்கி நின்ற திருத்தலம்.

அருணகிரிநாதர் அமுதத் தமிழில் திருப்புகழ் மொழிந்த திருத்தலம்.

இன்னும் அறியப்படாத எண்ணற்ற ரகசியங்களுடன்  - 2668 அடி உயரத்துடன் திகழும் அண்ணாமலையைச் சுற்றிலும் பல்வேறு தீர்த்தங்களும் சந்நிதிகளும் விளங்குகின்றன.

அவற்றுள் அஷ்ட லிங்க சந்நிதிகளும் அடி அண்ணாமலை திருக்கோயிலும் வெகு சிறப்பானவை.

அண்ணாமலையின் கிரிவலப் பாதை 14 கி.மீ. சுற்றளவினை உடையது.

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று கிரிவலம் வருவதை லட்சக் கணக்கான பக்தர் பழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

திருஅண்ணாமலையை வலம் வருவது பெரும் புண்ணியம் எனப்படுகின்றது.

இத்திருத்தலத்தில் - திருக்கார்த்திகைத் திருவிழாவின் தொடக்கமாக -

23.11.2014 அன்று அண்ணாமலையின் காவல் நாயகி ஆகிய ஸ்ரீதுர்காம்பிகைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிகழ்ந்தன. அன்றிரவு - ஸ்ரீ துர்காம்பிகை காமதேனு வாகனத்தில் திருவீதி எழுந்தருளினாள்.

24.11.2014 அன்று திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பிடாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் உற்சவ வழிபாடுகள் நிகழ்ந்தன. அன்றிரவு ஸ்ரீபிடாரி அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி எழுந்தருளினாள்.

அதன் பின் 25.11.2014 அன்று விநாயகப்பெருமானுக்கு உற்சவ வழிபாடு நடத்தப் பெற்று ஸ்வாமி மூஷிக வாகனத்தில் திருவீதி எழுந்தருளினார்.

இன்று (26.11.2014) கார்த்திகைத் திருவிழாவின் முதல் நாளாக காலை 6.05 மணிக்கு மேல் 7.25 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் திருக் கொடியேற்றம்.

அண்ணாமலையாரின் திருக்கோயிலின் 72 அடி உயர கொடிமரத்தில் ரிஷபக் கொடியேற்றப்பட்டது.

#முதல்_திருநாள் - 26.11.14 - புதன் கிழமை
காலை - பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளல் - வெள்ளி விமானங்கள்.
இரவு - பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளல்.
ஸ்வாமி - வெள்ளி அதிகார நந்தி வாகனம். அம்பாள் - ஹம்ஸ வாகனம்.

#இரண்டாம்_திருநாள் - 27.11.14 - வியாழக்கிழமை
காலை - விநாயகர் - சந்திர சேகரர் புறப்பாடு - சூர்ய பிரபை.
இரவு - பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளல். வெள்ளி இந்திர விமானங்கள்.

#மூன்றாம்_திருநாள் - 28.11.14 - வெள்ளிக்கிழமை
காலை - விநாயகர் - சந்திர சேகரர் புறப்பாடு - பூத வாகனம்.
இரவு - பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளல். வெள்ளி அன்ன வாகனம்.

#நான்காம்_திருநாள் - 29.11.14 - சனிக்கிழமை
காலை - விநாயகர் - சந்திர சேகரர் புறப்பாடு - நாக வாகனம்.
இரவு - பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளல். வெள்ளி காமதேனு, கற்பக விருட்சம்.

#ஐந்தாம்_திருநாள் - 30.11.14 - ஞாயிற்றுக்கிழமை
காலை - விநாயகர் - சந்திர சேகரர் புறப்பாடு - கண்ணாடி ரிஷப வாகனம்.
இரவு - பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளல். வெள்ளி ரிஷப வாகனம்.

#ஆறாம்_திருநாள் - 01.12.14 - திங்கட்கிழமை
காலை - விநாயகர் - சந்திர சேகரர் புறப்பாடு - வெள்ளி யானை வாகனம்.
அறுபத்து மூவர் எழுந்தருளல்.
இரவு - பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளல். வெள்ளி ரதம், வெள்ளி விமானம்.

#ஏழாம்_திருநாள் - 02.12.14 - செவ்வாய்க்கிழமை
காலை ஆறு மணிக்கு மேல் ஏழு மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல்.
பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளல். மகா ரதம். திருத்தேரோட்டம்.

#எட்டாம்_திருநாள் - 03.12.14 - புதன் கிழமை
காலை - விநாயகர் - சந்திர சேகரர் புறப்பாடு - வெள்ளி விமானம்.
மாலை நான்கு மணிக்கு பிக்ஷாடனர் எழுந்தருளல்.
இரவு - பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளல். குதிரை வாகனம்.

#ஒன்பதாம்_திருநாள் - 04.12.14 - வியாழக்கிழமை
காலை - விநாயகர் - சந்திர சேகரர் புறப்பாடு - கண்ணாடி விமானம்.
இரவு - பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளல்.
கையிலாய திருக்கோலம். காமதேனு வாகனம்.

#பத்தாம்_திருநாள் - 05.12.14 - வெள்ளிக்கிழமை
அதிகாலை நான்கு மணிக்கு பரணி தீபம்.
மாலை அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி திருநடனம்.
மாலை ஆறு மணிக்கு திருக்கார்த்திகை - ஜோதி தரிசனம்.
இரவு - தங்க ரிஷப வாகனம்.

06.12.14 - சனிக்கிழமை
அதிகாலை சந்திரசேகரர் கிரிவலம் எழுந்தருளல்
இரவு - தெப்ப உற்சவம்.

07.12.14 - ஞாயிற்றுக்கிழமை
இரவு - அம்பாள் தெப்ப உற்சவம்.

08.12.14 - திங்கட்கிழமை
இரவு - சுப்ரமணியர் தெப்ப உற்சவம்.

09.12.14 - செவ்வாய்க்கிழமை
இரவு - விநாயகர் - வெள்ளி மூஷிகம். சண்டிகேஸ்வரர் -  வெள்ளி ரிஷபம்.

தீபத் திருவிழாவினை முன்னிட்டு - நகர் முழுதும் விழாக் கோலம் கொண்டுள்ளது. அண்ணாமலையார் திருக்கோயில் வளாகம் ஒளிமயமாக விளங்குகின்றது.

ஒன்பது திருக்கோபுரங்களும் தங்கக் கொடிமரமும் சந்நிதிகளும் தல விருட்சமான மகிழ மரமும் பல வண்ண மின் விளக்குகளால் ஒளிர்கின்றன.

தேடி நின்ற நான்முகனும் திருமாலும் அறியும் வண்ணம்  - லிங்கோத்பவராக அடிமுடி அறிய இயலாதபடி ஜோதி வடிவாக ஈசன் வெளிப்பட்ட திருத்தலம்.

நினைக்க முக்தி தரும் திருத்தலம்.
பஞ்ச பூதத் திருத்தலங்களுள் அக்னி ஸ்வரூபம்.

தமிழகத்தின் அனைத்து சிவாலயங்களிலும் சிற்றம்பலத்தில்  ஸ்ரீநடராஜர் விளங்குவது போல

திருக்கோஷ்டத்தில் லிங்கோத்பவராக அண்ணாமலையார் விளங்குகின்றார்.

தேவாரத் திருப்பதிகங்கள் பெற்ற நடுநாட்டுத் திருத்தலங்கள் இருபத்து இரண்டனுள் தலையாயது  - திருஅண்ணாமலை

-
"தேடிச் சென்று திருந்தடி ஏத்துமின்
நாடி வந்தவர் நம்மையும் ஆட்கொள்வர்
ஆடிப் பாடி அண்ணாமலை கை தொழ
ஓடிப் போகும் நமது உள்ள வினைகளே!.."

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer