Sunday 27 November 2016

திருப்பட்டூர் அற்புதங்கள்.....!!

திருப்பட்டூர் அற்புதங்கள்.....!!

1. சிவ பக்தியுடன் வாழ்ந்து வந்த வியாக்ரபாதர், சிவனாரை நோக்கி இந்த தலத்தில் தவம் செய்தார்.

2. இத்தலத்தில் உள்ள தீர்த்தக்குளத்து நீரை, எவர் கையில் எடுத்தாலும் அவர்களுக்கு கங்கையில் நீராடிய பலனும் கிடைக்கும்.

3. இத்தலத்தில் 3001 அந்தனர்கள் வேதங்களை அனுதினமும் பாராயணம் செய்ததால் அதில் உண்டான அதிர்வலைகள் அங்கிங்கெனாதபடி எங்குமாக பரவிக் கிடப்பதால் திருப்பிடவூர் எனப்பெயர்பெற்றது. திருப்பிடவூர் என்பதே காலப்போக்கில் திருப்பட்டூராக மாறியது.

4. இது காசிக்கு நிகரான தலம் மட்டுமல்ல. திருக்கைலாயத்திற்கு நிகரான தலமும் ஆகும். இத்தலத்தில் ஸ்ரீமந் நாராயணரை வணங்கி தொழுததால் ஆதிசேஷன் அடுத்த கணம் பதஞ்சலி முனிவராக மாறினார்.

5. கர்வத்தை ஒழிப்பவர்கள் மனதில் இறைவன் உறைவதும், அவனே இறைவனாக மாறிப்போவதும் இத்தலத்தில் நிகழும்.

6. திருக்கயிலாய ஞான உலா எனும் நூல் இத்தலத்தில் அரங்கேறியது.

7. சிவ பெருமான், தன் அடியவர்கள் பலரையும் இந்த தலத்திற்கு அழைத்து வந்து திருவிளையாடலை நிகழ்த்தி இருக்கிறார்.

8. சேர மன்னன் நாயானாரும், சுந்தரரும் நெகிழ்ந்து வணங்கிப் பேறு பெற்ற அற்புதமான இடம் இதுவாகும். மாசாத்தனார் ஓலை நறுக்குகளுடன் காட்சி தரும் விக்கிரகத் திருமேனியை கோவிலின் மூலமூர்த்தமாக இன்றைக்கும் இங்கு தரிசிக்கலாம்.

9. சிவபெருமான் பிரம்மனின் ஒரு தலையை கிள்ளி எறிந்த தலம் திருவையாறு அருகில் உள்ள திருக்கண்டியூர் தலத்திலாகும். அந்த பிரம்மன் பரிகாரம் தேடி கொண்டது திருப்பட்டூராகும்.

10. பிரம்மன் உருவாக்கிய பிரம்ம தீர்த்தக் குளம், சிவலிங்கச் சந்நிதிகளும் இங்கு அமைந்துள்ளன. இங்கு வழிபட்டால் 12 சிவாலயங்களுக்கு சென்று வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.

11. பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் மாதாவாக பிரம்ம சம்பத்கவுரி கனிவு ததும்ப கருணை பொங்கக் காட்சி தருகிறாள். இவளுக்கு செவ்வாய், வெள்ளி கிழமைகளில் புடவை சார்த்தி வேண்டிக் கொண்டால் தடைப்பட்ட திருமணம் இனிதே நடைபெறும்.

12. பிரதோஷ நாளில் இங்கு ஒரே நேரத்தில் நந்திக்குச் செய்யப்படுகிற பூஜையையும், நரசிம்ம மூர்த்தியையும் தரிசிக்கலாம்.

13. ஏழேழு ஜென்ம பாவங்களை நீக்கி பஞ்சபூதங்களாக உறைந்து இத்தலத்து ஈசன் நம்மை காக்கிறார்.
14. பிரம்மாவை வணங்கும் போதே குரு தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.

15. குரு பகவானுக்கு அதி தேவதை யான பிரம்மா தனி சந்நிதியுடன் திகழும் தலம் இதுவாகும்.
16. இத்தலத்திற்கு திருப்படையூர் என்ற பெயரும் வழக்கத்தில் இருந்தது.

17. சுப்ரமணிய சுவாமிக்கு வஸ்திரம் சார்த்தி, சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்தால் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்.

18. தலை எழுத்தையே மாற்றி அருளும் திருப்பட்டூரில் குடி கொண்டிருக்கும் சுப்ரமணியரை வணங்கினால் மோட்சம் நிச்சயம் கிடைக்கும்.

19. தேய்பிறை அஷ்டமி யில், ராகு கால வேளையில் காலபைரவரைத் தரிசித்து அவரின் வலது காதில் நம் பிரச்சினைகளைச் சொல்லி வணங்கு வதற்காகத்தான் இத்தலத்தில் கால பைரவரின் வலது காது வித்தியாசமாக உள்ளது.

20. இத்தலத்தில் கால பைரவருக்கு நேர் எதிரில் இருக்கும் கஜலட்சுமியை வணங்கினால் ஐஸ்வர்யம் கிடைக்கும்.

21. 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை திருச்சி, முசிறி மற்றும் துறையூர் என சுற்று வட்டார ஊர்களைச் சேர்ந்தவர்களுக்குக்கூட திருப்பட்டூர் என்கிற ஊரே தெரியாமல் இருந்தது. ஆனால் இன்றைக்கு இத்தலம் தமிழகத்தையும் கடந்த பெங்களூரு, ஆந்திரா முதலான மாநிலங்களையும் தாண்டி பிரபலமாகியுள்ளது.

22. இத்தலத்திற்கு வந்து காசி விஸ்வநாதரையும், பிரம்மபுரீஸ்வரரையும் கண்ணாரத் தரிசித்து
வணங்குபவர்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். புதிய சக்தியுடன் சிவத்தொண்டு புரிவர்.

23. திருப்பட்டூர் திருத்தலம் ஒரு காலத்தில் மிகச் செழிப்பாக இருந்தது. எப்போதும் வேத கோஷங்கள் காற்றில் நிரம்பி புண்ணிய பூமியாக திகழ்ந்தது.

24. பூணூல் கல்யாணம் எனும் சடங்கை இத்தலத்தில் செய்வது விசேஷம் ஆகும்.

25. திருபட்டூர் சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் இங்கு வந்து அம்பாளின் திருவடியில் விதை நெல்லை வைத்து வணங்கி விட்டு, பிறகு அதை ஊர்வலமாக எடுத்துச்சென்று தங்களின் வயல்களில் விதைத்தால், தானியங்கள் செழிப்பாக வளர்ந்து லாபம் கொழிக்கும் என்கிறார்கள்.

26. இத்தலத்துக்கு வந்து பிரம்மாவின் திருச்சந்நிதியில் ஜாதகத்தை வைத்து மனதாரப் பிரார்த்திக்கும் பக்தர்கள், பிரார்த்தனை நிறைவேறியதும் வஸ்திரம் சார்த்தி நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.

27. 11 வியாழக்கிழமை தவறாமல் இங்கு வந்து தியானம் செய்தால் மன அமைதி கிடைக்கும் என்கிறார் இங்கு வரும் பக்தர் ஒருவர்.

28. வெள்ளைத் தாமரை சார்த்தி பிரம்மாவை வழிபட்டால் உடனடி பலன் கிடைக்கும் அதே போல் நீங்கள் பிறந்த நட்சத்திர நாளில் இத்தலத்தில் வழிபட்டால் புண்ணியம் நிச்சயம் சேரும்.

29. ஆடி சுவாதி நட்சத்திர நாளில், திருப்பட்டூர் வந்து மூன்று கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்யுங்கள். அப்படி தரிசித்த பலனை, அடுத்தடுத்த நாளிலேயே உணர்வீர்கள்.

30. ஒரேயரு முறை திருப்பட்டூர் தலத்தில் காலடி எடுத்து வையுங்கள். மனதின் அத்தனை துக்கங்களும் பறந்து, மனம், புத்தி, செயல், சிந்தனை யாவற்றிலும் ஓர் ஒழுங்கை, நேர்த்தியை, தெளிவை உணர்வீர்கள்.

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer