Tuesday 24 February 2015

திருக்கை வழக்கம்



திருக்கை வழக்கம்

     திருக்கை வழக்கம் என்பது வேளாண் பெருமக்களின் கொடைக் குணத்தைச் சிறப்பித்துக் கூறும் நூலாகும். இந்நூல் 59 கண்ணிகளைக் கொண்டு, வெண்டளையான் வந்த கலிவெண்பாவாகும். இராமாயணம் இயற்றிய கம்பர் எழுதிய ஒன்பது நூல்களுள் திருக்கை வழக்கமும் ஒன்றாகும். கம்பர் சோழர்களின் திருவழுந்தூர் கிராமத்தில் உச்சவர் மரபில் ஆதித்தர் என்பவருக்குப் மகனாகப் பிறந்தார். இவரது மரபுச் சமயம் வைணவம். இவரை ஆதரித்தவர் சடையப்பவள்ளல். இவருடைய காலம் கி.பி.12 ஆம் நூற்றாண்டு என்றும் கி.பி.9 ஆம் நூற்றாண்டு என்றும் கூறுவர். இவரது வேறு நூல்கள் சடகோபர் அந்தாதி, சரசுவதி அந்தாதி, ஏரெழுபது முதலியவை.


கங்கை குலம் தழைக்கும் கை

கங்கை குலந்தழைக்கக் காட்டும் பெருங்கீர்த்தி
மங்கை பிரியாமல் வாழும் கை. 1


சந்தனமாக அரைத்த கை

திஙகள் அணி
எம்பிரான் எம்பெருமான் இந்திராதி பர்க்(கு) அரிய
தம்பிரா னுக்(கு) உரைத்த சந்தனக் கை. 2


விதைநெல்லைச் சோறாக்கி வழங்கிய கை

அம்பொன்
வளைவாரி வையகமும் வானகமும் போற்ற
முளைவாரி வந்த முழுக் கை. 3


கல்லால் அடித்த கை

கிளை வாழக்
கச்சித் தலத்(து) அரனைக் கல்லால் எறியமறந்(து)
எச்சில் தயிர்ச்சோ(று) எறிந்திடுங் கை. 4


கழுத்தை அரிந்த கை

பச்சை மிகு
தேமா வடுக் கமரில் சிந்திற்(று) என்றே கழுத்தை
ஆம் ஆம் எனவே அரிந்திடுங் கை 5


மழுவை ஏந்திய கை

வாம மறை
ஓது புகழ் நாயனுடன் ஊரன் புற(கு) என்றே
மோது தடிகொண்டு முடுக்குங் கை 6


சிவபூசை செய்த கை

தீ(து)அகல
அஞ்(சு)எழுத்தே ஒன்றாகி, அப்பர்எனத் தோன்றி, அரன்
செஞ்சரணத்தே பூசை செய்யும் கை 7


வயிறு கிழித்த கை

வஞ்சியர்பால்
தூ(து) அரனைத் தான்விடுத்த சுந்தரனைக் காணாமல்
பேதமறத் தன் வயிறு பீறும் கை 8


பல்லக்கைத் தாங்கிய கை

பூதத்தின்
மிக்க புலவனுக்கா ஏகி மனை மட்டாகத்
தக்க சிவிகை கணை தாங்கும் கை. 9


நாகரத்தினத்தை வாங்கிய கை

மைக் கடு வாய்
மூக்கில் புகைபுரிந்த மூ(து)அரவின் வாயிடத்து
நீக்கிய கை நாக்(கு) அதனில் நீட்டும் கை. 10


தொண்டு புரியும் தங்கக் கை

ஆக்கமுடன்
ஏதம் அற்ற கீர்த்தியைக் கொண்டு ஏட்டகத்திலே அடிமைச்
சாதனம் இட்டே கொடுத்த தங்கக் கை. 11


கர்ப்பிணியின் முதுகில் பரிமாறிய கை

மேதினியில்
சூலி முதுகில் சுடச்சுட அப்போது சமை
பாலடிசில் தன்னைப் படைக்கும் கை. 12


பாணனுக்கு இறுதிச் சடங்கு

சாலவே
நாணம் தராமல் நடுங்காமல் கூசாமல்
பாணன் பிணத்தைப் பரிக்கும் கை. 13


வயிற்றைக் கிழித்து உணவை வெளிப்படுத்தியது

காணவே
தண் தமிழோன் தன்மனத்தில் சந்தேகம் தீரக்கூழ்
உண்ட வயிற்றைப் பீறி ஊற்றும் கை. 14


அபயம் கொடுக்கும் கை

கண்ட அளவில்
நீலி தனக்(கு) அஞ்சி நின்ற வணிகேசனுக்காக்
கோலி அபயம் கொடுக்கும் கை. 15


நெருப்பில் மூழ்கிப் புகழை மணந்த கை

ஆலம் எனும்
வன்னியிடை மூழ்கி வானோர் பழிகழுவிக்
கன்னி தனையே மணந்த காட்சிக் கை. 16


கொழுவினால் தன் கழுத்தையே குத்திக் கொண்ட கை

துன்னும் ஒரு
பேருலகை எல்லாம் பிழைப்பிக்கும் ஓர்கொழுவின்
கூரில் ஒருவன் கழுத்தைக் குத்தும் கை. 17


ஒரே கலத்தில் உண்ட கை

பார் அறிய
வீறு பெறும் பறையன் வீயாமல் ஓர் கலத்தில்
சோறு பிசைந்(து) உண்ட சுடர் மணிக்கை 18


விலை உயர்ந்த பட்டைக் கிழித்த கை

ஆறாத்
தொடையில் எழுசிலந்தி தோற்றுவிக்கப் பட்டின்
புடைவை கிழித்த பெருங் கை. 19


ஏரோட்டம் நின்றால் தேரோட்டம் நிற்கும்

கடல் சூழ்ந்த
பார்பூட்டு மன்னர் பரிகர பூட்டக் கதிரோன்
தேர் பூட்ட ஏர் பூட்டும் செம்பொற் கை. 20


தாற்றுக் கோல் பிடிக்கும் கை

வீர மதன்
ஐங்கோல் தொடுக்க அணை கோல் எடுக்க, உழும்
பைங்கோல் பிடிக்கும் பதுமக் கை. 21


செங்கோலைத் தாங்கும் மேழிக் கை

இங்கிதமாம்
சீர் படைத்த பூபாலர் செங்கோல் பிடிப்பதற்கு
பேர்படைத்த மேழி பிடிக்கும் கை. 22


உலகைத் தழைக்கச் செய்யும் கை

கார் படைத்த
மிஞ்சுமதி கீர்த்தியைப் போல் மேதினி எல்லாம் தழைக்கச்
செஞ்சாலி நாற்றைத் தெளிக்கும் கை. 23


கள்ளம் இல்லாத கற்பகக் கை

எஞ்சாமல்
வெள்ளக் களை களைந்து வீறும் பயிர் தழைக்கக்
கள்ளக் களை களைந்த கற்பகக் கை. 24


நெற் போரால்தான் வெற்றிப் போர்

வள் உறையும்
விற்போர் மதகரிப்போர் வெம்பரிப்போர் வெற்றிப்போர்
நெற்போர் முதல் போர்நெரித்திடும் கை. 25


மூன்று கொடிகள்

கற்பகம் போல்
மேழிக் கொடி, சிங்க வெற்றிக் கொடி, குயிலின்
வாழிக் கொடியே மருவும் கை. 26


பொன் வழங்கும் பொற்கை

நீள் உலகில்
ஆதுலர்க்குச் செம்பொன் அளிக்கும் கை, ஆகமங்கள்
வேத புராணங்கள் விரிக்கும் கை. 27


நீதி நெறி தழைக்கும் கை

நீதி நெறி
மானம் குலம் கல்வி வண்ணம் அறிவுடைமை
தானம் தருமம் தலைக்கும் கை. 28


திக்கற்றவர்களை ஈடேற்றும் கை

ஆன தமிழ்
கல்லார்கள் என்னாமல் கற்றோர்கள் என்னாமல்
எல்லாரையும் காத்து ஈடேற்றும் கை. 29


மேகம் போன்ற கற்பகக் கை

வல்லமை சேர்
மைம் மா முகில் உலகை வாழ்விக்கும் மேன்மைபோல்
கைம்மாறு இலா(து) அளித்த கற்பகக் கை. 30


குளத்து நீர் போன்ற கை

சும்மை ஆர்
ஊருணி நீர் போல் உலகத்தவர்க்(கு) எல்லாம்
பேரறிவால் ஈயும் ப்ரதாபக் கை. 31


நட்புக் கை

பாரில்
உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே
கொடுக்க இசைந்த குளிர்க்கை 32


மூவரைத் தாங்கும் கை

இடுக்கணினால்
மாமறையோர் மன்னர் வணிகர் முதலாகத்
தாம் அலையாமல் கொடுத்துத் தாங்கும் கை 33


கம்பருக்கு நான் அடிமை

தே மருவு
நாவில் புகழ்க் கம்பநாடற்(கு) அடிமை என்றே
மாவைக் கரைத்து முன்னே வைக்கும் கை 34


சடையப்பரைக் கடித்த நாகம்

பாவலர்தாம்
ஏர் எழுபது ஓதி அரங்கேற்றுங் களரியிலே
காரி விடநாகம் கடிக்கும் கை. 35


பஞ்சத்திலும் வழங்கிய பங்கயக் கை

பார் அறியச்
சங்கை இட்டுத் தள்ளாமல் தன் சோற்றை வந்தவர்க்குப்
பங்கை இட்(டு) இரட்சித்த பங்கயக் கை. 36


அந்தணர்களுக்கு வழங்கிய பொற்கை

பொங்கமொடு
செம்பொன் விளை களத்தூர்ச் செந்நெல் விளைந்ததனை
நம்பி மறையோர்க்(கு) அளித்த நாணயக் கை. 37


விளை நிலத்திற்கு வேலியிட்ட கை

அம்பொன்
விளை பயிரைப் பார்த்து விரைகால் புலத்தை
வளைய மதில் இட்டு வரும் கை. 38


களத்தில் வழங்கிய கற்பகக் கை

களம் அதனில்
ஏற்க வந்த ஆதுலர்க்(கு) இல்லை என்னாமல் செம்பொன்
கார்க் கையினால் முக் கை இட்ட கற்பகக் கை. 39


சிவன் கோயில் கட்டிய கை

தீர்க்கமதாத்
திருப் பருத்திக் குன்றில் சிவன் ஆலயங்கள்
விருப்புடனே கட்டுவித்த மெய்க் கை. 40


பல துறை நூல்களுக்கு ஆதாரமான கை

திருப் புகழை
எண்ணை எழுத்தை இசையை இலக்கணத்தை
வண்மை பெற உண்டாக்கும் வா(கு) உளகை. 41


ஞான சிகரமான் நம்மாழ்வார் வேளாளர்

பண் அமைந்த
வேதம் ஒரு நான்கினையும் மிக்க தமிழ் நாலடியால்
ஓதி உரைத்தே கருணை ஓங்கும் கை. 42


புலவனுடைய எச்சிலை உண்ட கை

பூதலத்தில்
பாவலன் எச்சில் படு மாங்கனியை எடுத்(து)
ஆவலுடன் நன்றா(க) அருந்தும் கை. 43


மன்னனுக்குச் சரியான விடையை எழுதிக் கொடுத்த கை

காவலன்
மண்ணில் கடலில் மலையில் பெரிய(து) என
எண்ணி எழுதிக் கொடுத்த ஏற்றக் கை. 44


தமிழுக்குத் தலை தந்தோர்

திண்ணமதாய்
வையகம் எங்கும் தேடி வந்த தமிழோன் புகழச்
செய்ய முடியைக் கொடுத்த செம்பொற் கை. 45


வேளாண்மை மிக்க கருணாகர வன்னியன்

துய்ய புகழ்
அட்ட திக்கும் எண்கீர்த்தி ஆயிரத்(து) எட்(டு) ஆனைதனை
வெட்டிப் பரணி கொண்ட வீரக் கை. 46


முனையடுவார் நாயனார்

திட்டமுடன்
பொன்னால் அமுதம் பொரிக் கறியம் தான் கொணர்ந்து
நன் நாவலர்க்(கு) அளித்த நாணயக் கை. 47


வணிகனுடைய கவலை தவிர்த்த கை

முன்னாள்
மனக் கவலை உற்ற வணிகன் முன்னே நின்று
தனைக் கா எனக் கேட்ட தங்கக் கை. 48


கோ தானம் செய்த கை

கனக்கவே
அன்(று) ஈன்ற நா(கு) எழுபதான எருமைத் திறத்தைக்
கன்றோடு நல்கும் கடகக் கை. 49


யானைப் பரிசில் தரும் கை

வென்றி தரும்
ஓர்ஆனை; நூறாயிரக் கலம்நெல் ஓர் கவிக்குச்
சீராக நல்கும் தியாகக் கை. 50


பாலாறு கொணர்ந்த ஒட்டக் கூத்தர்

பேர் இயலைச்
சாற்றும் ஒட்டக் கூத்தன் சரச கவி சொல்லப் பால்
ஆற்றுநீர் கால் கொணர்ந்த ஆண்மைக் கை. 51


உதைத்த காலுக்கு வெண்டயம் இட்ட கை

நேர்த்தி பெற
வண் தமிழோன் தான் உதைத்த வாகுள காலுக்குப் பொன்
வெண்டயம் இட்டே வணங்கும் வெற்றிக் கை. 52


குட்டின கைக்கு மோதிரம் இட்ட கை

புண்டரிகக்
கையால் புலவன் கனகமுடி மேல் குட்டச்
செய்யாழி பண்ணி இட்ட கை 53


அரிசி கேட்டால் யானை தருபவர்

நொய்ய
எறும்புக்கும் ஆஸ்பதம் தான் இல்லை என்ற மட்டில்
திறம் புக்க யானை தரும் செங்கை. 54


எண்ணாயிரம் ஊர்களைத் தந்த பாரி

பறம்பு தனில்
எண்ணாயிரம், முனிவர்க்(கு) ஏற்றபடி அப்படியே
பண்ணாக் கொடுக்கும் பராக்ரமக் கை. 55


தேவர்களுடைய புகழ்க் கொடியை நிறுவிய கை

விண்ணாடர்
கூர்த்த புகழ் அண்ட கோளம் அளவும் படர
நால் திக்கும் மேருவின் நாட்டும் கை. 56


சிவனுடைய பாத பங்கயம் பணிந்த கை

சீர்க்குகனை
ஆதார மானவனை ஐங்கரனைச் சங்கரனைப்
பாதார விந்தம் பணியும் கை. 57


ஐந்தொழில் புரியும் கை

நீதி
நடக்கை இருக்கை நகைக்கை மிடி தீர்க்கை
கொடுக்கை செழுங்கை குளிர்க்கை 58


நீடூழி நிலைக்கும் கற்பகக் கை

தொடுத்த தெல்லாம்
சீராக உண்டாக்கும் செங்கைப் பெருங்கருணைக்
காராளர் கற்பகப் பூங் கை. 59 

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer