Friday 26 December 2014

2015 விருச்சிகம்

விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

எதையும் திறமையாகச் செய்து முடிக்கக்கூடிய ஆற்றலும், பிறரை அடக்கியாளும் தன்மையும் கொண்ட விருச்சிக ராசி நேயர்களேஇந்த 2015-ஆம் ஆண்டில் உங்களுக்கு ஏழரைச் சனியில் ஜென்மச் சனி தொடருகிறது. இது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது. இதனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம்செலுத்துவது நல்லது. நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வதும், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் உத்தமம். ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் கைகூடும். உற்றார்- உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாகச் செயல்படுவார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமும், கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பாராத வகையில் லாபமும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களும் உயர்வடைவார்கள். பொன், பொருள் சேர்க்கைகளும் அமையும். வரும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டுக்கு செல்லவிருப்பதால் பணவிஷயத்தில் சற்று கவனமுடனிருப்பது மிகவும் நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் ஆண்டின் பிற்பாதியில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யநினைக்கும் காரியங்களில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு  குரு மாற்றத்திற்குப் பிறகு சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் வீண் அலைச்சல் உண்டாகும்.

உடல் ஆரோக்கியம்

உங்களுக்கு ஏழரைச் சனியில் ஜென்மச் சனி நடைபெறுவதால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், அஜீரணக் கோளாறு, உடல் சோர்வுமந்தமான நிலை உண்டாகும். குடும்பத்தில் மனைவி, பிள்ளைகளாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். என்றாலும் இந்த வருட ஜூலை 5-ம் தேதி வரை குரு 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்துவிடும் ஆற்றலும் உண்டாகும். நேரத்திற்கு உணவு உண்பது, நெருங்கியவர்களின் பிரச்சினைகளில் தலையீடுசெய்யாதிருப்பது போன்றவை உடல் நலத்திற்கும், மனநலத்திற்கும் நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது வீண் அலைச்சலைக் குறைக்கும்.

குடும்பம், பொருளாதார நிலை

இந்த ஆண்டின் தொடக்கத்தில் குரு பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி, சுபிட்சம், பொருளாதார மேன்மை, திருமண சுப காரியங்கள் கைகூடக்கூடிய யோகம், புத்திர வழியில் பூரிப்பு போன்றவை ஏற்படும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதால் கடன்களும் குறையும். உங்களுக்கு ஏழரைச் சனியில் ஜென்மச் சனி நடைபெறுவதாலும், வரும் ஜீலை 5-ஆம் தேதி முதல் குரு ஜீவன ஸ்தானத்திற்கு மாறுதலாக இருப்பதாலும் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வதும், ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொண்டு பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பதும் மிகவும் நற்பலனைத் தரும்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உங்களுக்கு ஏழரைச் சனி நடைபெறுவது தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துமென்றாலும்  ஜூலை 5 வரை குரு 9-ல் சாதகமாக சஞ்சரிப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். உயரதிகாரிகளின் ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். எதிர்பார்த்த ஊதிய உயர்வுகளும் உண்டாகும். குரு மாற்றத்திற்குப்பின் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்து, அனைவரையும் அனுசரித்து நடப்பது, மற்றவர்களுக்கும் பணி நிமித்தமாக உதவிகளைச் செய்வது போன்றவை நற்பலனைத் தரும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு ஆண்டின் தொடக்கமானது அற்புதமான நற்பலனை உண்டாக்கும். குரு 9-ல் இருப்பதால் வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் அனுகூலமான பலன்கள் அமையும். புதிய வாய்ப்புகளும் தேடிவரும். வங்கிக் கடன்களும் தீரும். குரு மாற்றத்திற்குப்பின் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யநினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். தொழிலில் போட்டி, பொறாமைகளால் சற்று மந்த நிலை நிலவினாலும் பொருட்தேக்கம் ஏற்படாமல் சமாளித்து விடமுடியும்.

பெண்களுக்கு

இந்த வருடம் ஏழரைச் சனியில் ஜென்மச் சனி தொடருவதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக்கொள்வது நல்லது. வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் போன்றவை உண்டாகலாம். கணவன்- மனைவி அனுசரித்துச் செல்வதும், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும், குடும்ப ஒற்றுமையைக் காப்பாற்ற உதவும். ஆண்டின் தொடக்கத்தில் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். திருமணம் போன்ற சுப காரியங்களும் கைகூடும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குருப்பெயர்ச்சிக்குப் பின்பு எதிலும் சிந்தித்துச் செயல்படுவதும் சிக்கனத்தைக் கையாள்வதும் மிகவும் நல்லது.

கொடுக்கல்- வாங்கல்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனகாரகன் குரு பகவான் 9-ல் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவை சிறப்படையும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளிலும் நல்ல லாபம் கிட்டும் என்றாலும் குருப்பெயர்ச்சிக்குப் பின்பு பண விவகாரங்களில் வீண் பிரச்சினைகளை சந்திக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படக்கூடுமென்பதால் பெரிய தொகைகளை தவிர்த்துவிடவும்.

அரசியல்வாதிகளுக்கு

அரசியல்வாதிகள் மக்களின் ஆதரவைப்பெற சற்று கஷ்டப்பட வேண்டியிருக்கும். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாமல் போகுமென்பதால் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளிலும் தடையும் தாமதமும் உண்டாகும். கட்சிப் பணிக்காக நிறைய செலவுசெய்ய நேரிடும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடல்நிலை சோர்வடையும்.

விவசாயிகளுக்கு

விவசாயிகளுக்கு எதிர்பார்த்த அளவுக்கு மகசூல் இருக்காது. புழு, பூச்சி போன்றவற்றின் தொல்லைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். காய்கனிபூ வகைகள் மூலம் ஓரளவுக்கு லாபங்களைப் பெறமுடியும். கால்நடைகளாலும் பால், வெண்ணெய், நெய் போன்றவற்றாலும் லாபம் கிட்டும். ஆண்டின் முற்பாதியில் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் நடைபெறும். பூமி, மனை வாங்கும் யோகமும் உண்டாகும்.

கலைஞர்களுக்கு

இந்த ஆண்டின் தொடக்கமானது உங்களுக்கு சிறப்பான பலனை ஏற்படுத்தும். ஏழரைச் சனி நடைபெறுவது, தொழிலில் முன்னேற்றத் தடைகளை ஏற்படுத்தும் என்றாலும் குரு பலமாக சஞ்சரிப்பதால் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். ஆடம்பரமான வாழ்க்கையும் அமையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குருப்பெயர்ச்சிக்குப் பின்பு எதிலும் கவனமுடன் செயல்படுவதும், உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வதும் உத்தமம். தேவையற்ற பயணங்களை தவிர்த்துவிடவும்.

மாணவ- மாணவியர்களுக்கு

மாணவர்களின் கல்விநிலை சற்று மந்தமாகத்தானிருக்கும். எதிலும் ஈடுபாட்டோடு செயல்பட முடியாத அளவுக்கு படிப்பில் கவனம் குறையும். பெற்றோர்கள் பிள்ளைகளைத் தட்டிக்கொடுத்து வழிநடத்திச் செல்வது மிகவும் நல்லது. தேவையற்ற நண்பர்களின் சகவாசங்களைத் தவிர்க்கவும்.

மாதப் பலன்கள்

ஜனவரி  

ஏழரைச் சனியில் ஜென்மச் சனி தொடருவது சாதகமற்ற அமைப்பென்றாலும் 11-ல் ராகு சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில்  சூரியன் 3-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதும் பொருளாதாரரீதியாக ஓரளவுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். தொழில், வியாபாரத்திலும் மந்தநிலை விலகி லாபம் அமையும். கொடுக்கல்- வாங்கலிலும் பிரச்சினைகள் விலகி சகஜநிலை ஏற்படும். உத்தியோகஸ்தர்களும் எதிர்பார்க்கும் உயர்வுகளை அடைவார்கள். சனிக்கு எள் விளக்கேற்றி வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 03-01-2015 இரவு 07.24 மணி முதல் 06-01-2015 அதிகாலை 04.55 மணி வரை.

பிப்ரவரி

முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியனும் 9-ல் குருவும் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் பொருளாதாரரீதியாக மேன்மைகளும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் இருக்கும். உற்றார்- உறவினர்களும் சாதகமாகச் செயல்படுவார்கள். பணவரவுகளும் திருப்திகரமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண  சுப காரியங்களும் தடை விலகி கைகூடும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். ஆஞ்சனேயரை வழிபட்டால் எதையும் சமாளித்து வெற்றியடைய முடியும்.

சந்திராஷ்டமம்: 31-01-2015 பகல் 01.17 மணி முதல் 02-02-2015 11.28 மணிவரை; மற்றும் 27-02-2015 காலை 07.01 மணி முதல் 01-03-2015 மாலை 05.17 மணி வரை.

மார்ச் 

சுக ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதாலும் 9-ல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியில் இருப்பதாலும் வீண் அலைச்சல், டென்ஷன்கள்  அதிகரிக்கும் என்றாலும் லாப ஸ்தானத்தில் ராகு இருப்பதால் ஓரளவுக்கு ஏற்றத்தை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறிவிட முடியும். பணவரவுகளும் தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். மங்களகரமான சுபகாரியங்களும் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். நண்பர்களால் அனுகூலம் ஏற்படும். சிவனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 26-03-2015 மதியம் 02.15 மணி முதல் 28-03-2015 இரவு 11.35 மணி வரை.

ஏப்ரல் 

ருண, ரோக ஸ்தானமான 6-ல் செவ்வாயும் 11-ல் ராகுவும் சஞ்சாரம் செய்வதால் உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் விலகும். உடல் ஆரோக்கியத்தில் மேன்மையையும், எதிரிகளை வெல்லக்கூடிய ஆற்றலையும் உண்டாக்கும். எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் சிறந்த முறையில் நடைபெறும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடிவரும். உற்றார்- உறவினர்களும் சாதகமாகச் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 22-04-2015 இரவு 11.10 மணி முதல் 25-04-2015 காலை 07.12 மணிவரை

மே

ஜென்ம ராசிக்கு 6-ல் சூரியனும் 9-ல் குருவும் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். வியாபாரரீதியாகவும் முன்னேற்றத்தை அடைவீர்கள். பணவரவுகள் சரளமாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகக்கூடிய அமைப்பும் கொடுக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலும் சரளமாக  நடைபெறும். உத்தியோகஸ்தர்களும் தங்கள் பணிகளில் திறமைக்கேற்ற உயர்வுகளைப் பெறமுடியும். உற்றார்- உறவினர்களும் சாதகமாகச் செயல்படுவார்கள். தினமும் விநாயகரை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 20-05-2015 காலை 08.50 மணி முதல் 22-05-2015 மதியம் 03.53 மணி வரை.

ஜூன் 

9-ல் குரு சஞ்சரிப்பது பொருளாதாரரீதியாக ஏற்றத்தை ஏற்படுத்துமென்றாலும் மாத பிற்பாதியில் சூரியன், செவ்வாய் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கவிருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. தேவையற்ற பிரச்சினைகளில் தலையீடு செய்வதை தவிர்ப்பதும் ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பதும் எதிலும் சிந்தித்துச் செயல்படுவதும் நல்லது. பயணங்களால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். உற்றார்- உறவினர்களாலும் மனநிம்மதி குறையும். திருமண சுப காரியங்கள் கைகூடும். சிவபெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 16-06-2015 மாலை 05.42  மணி முதல் 18-06-2015 இரவு 12.40 மணிவரை.

ஜூலை

அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சூரியன், செவ்வாய் சஞ்சாரம் செய்யவிருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகளை உண்டாக்கும். உற்றார்- உறவினர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. தேவையற்ற பயணங்களாலும் அலைச்சல்கள் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய போட்டிகள் நிலவினாலும் லாபம் குறையாது. உத்தியோகஸ்தர்கள் பிறர்செய்யும் தவறுகளுக்குப் பொறுப்பேற்க நேரிடுமென்றாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். முருக வழிபாடு செய்வது நற்பலனைத்  தரும்.

சந்திராஷ்டமம்: 13-07-2015 இரவு 12.56 மணி முதல் 16-07-2015 காலை 08.30 மணி வரை.

ஆகஸ்ட் 

ராசிக்கு 9-ல் சூரியன் செவ்வாயும் 11-ல் ராகுவும் சஞ்சாரம் செய்வதால் ஓரளவுக்கு அனுகூலங்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிறைவேறும் அமைப்பும், எல்லா வகையிலும் லாபங்கள் உண்டாகக் கூடிய நிலையும் ஏற்படுமென்றாலும், குரு 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்துச் சென்றால் அபி விருத்தியைப் பெருக்கமுடியும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. ஆஞ்சநேயரை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 10-08-2015 காலை 06.42 மணி முதல் 12-08-2015 மதியம் 02.59 மணிவரை.

செப்டம்பர்

மாதக் கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும், 11-ல் ராகு சஞ்சாரம் செய்வதும் எல்லா வகையிலும் லாபங்களை ஏற்படுத்தும்குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். எடுக்கும் முயற்சிகள னைத்திலும் வெற்றியினைப் பெறுவீர்கள். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் கடன்கள் யாவும் குறையும். எதிர்பாராத உதவிகளும் தேடிவரும். தொழில், வியாபாரத்தில் மேன்மைகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் லாபம் தரும். குருவுக்குரிய பரிகாரங்களைச் செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் 06-09-2015 மதியம் 12.17 மணி முதல் 08-09-2015 இரவு 08.38 மணி வரை.

அக்டோபர்

ஜீவன ஸ்தானமான 10-ல் செவ்வாயும் 11-ல் சூரியன் ராகுவும் சஞ்சாரம் செய்வது தொழில்ரீதியாக முன்னேற்றங்களை ஏற்படுத்தும் அமைப் பாகும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். குரு, சனி சாதகமற்று இருப்பதால் பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும். எனவே ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது. குடும்பத் தேவைகளுக்காக சில நேரங்களில் கடன் வாங்கவும் நேரிடும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்க்கவும். சனி பகவானை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 03-10-2015 இரவு 07.14 மணி முதல் 06-10-2015 அதிகாலை 02.38 மணிவரை.

நவம்பர்

ஜென்ம ராசியில்  சனியும், 12-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற வீண் விரயங்களும் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகளும் ஏற்படும். அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளை சில காலம் தள்ளிவைப்பது நல்லது. பணவரவுகளிலும் நெருக்கடிகள் ஏற்படக்கூடும். 6-ஆம் தேதி முதல் செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கவிருப்பதால் எதையும் சமாளிக்க முடியும். தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்படும். பிரதோஷ விரதமிருப்பது நல்லது.

சந்திராஷ்டமம்: 31-10-2015 காலை 04.21 மணி முதல் 02-11-2015 காலை 10.11 மணிவரை; மற்றும் 27-11-2015 மதியம் 02.50 மணி முதல் 29-11-2015 இரவு 07.27 மணிவரை

டிசம்பர்

ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பென்றாலும் 11-ல் செவ்வாய், ராகு சஞ்சாரம் செய்வது நற்பலன்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். உங்களுக்குள்ள பணநெருக்கடிகளும் மறைமுக எதிர்ப்பு களும் படிப்படியாகக் குறையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபத்தினைப் பெறமுடியும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது ஏற்றத்தைப் பெறுவீர்கள். உற்றார்உறவினர்களை அனுசரித்து நடப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம்செலுத்துவது உத்தமம். சிவபெருமானை வழிபாடு செய்யவும்.
சந்திராஷ்டமம்: 24-12-2015 இரவு 12.46 மணி முதல் 27-12-2015 காலை 05.18 மணிவரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 1, 2, 3, 9; நிறம்- ஆழ்சிவப்பு, மஞ்சள்; கிழமை- செவ்வாய், வியாழன்; திசை- தெற்கு; கல் - பவளம்; தெய்வம்- முருகன்.

பரிகாரம்


விருச்சிக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஏழரைச் சனியில் ஜென்மச் சனி தொடருவதால் சனிக்கிழமைதோறும் சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வது, ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, சனிப்ரீதி ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம். 05-07-2015 முதல் குரு 10-ல் சஞ்சரிக்கவிருப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களைச் செய்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி வழிபாடு செய்வது நல்லது. கேது 5-ல் சஞ்சரிப்பதால் தினமும் விநாயகரை வழிபடுவது நற்பலனைத் தரும்.

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer