Monday 27 October 2014

மகாபாரதம் பகுதி 039


மகாபாரதம் பகுதி-38

போர் தொடர்ந்தது. ஜராசந்தன் புதுவலிமை பெற்று பீமனுடன் யுத்தம் செய்தான். அர்ஜூனன் ஆச்சரியத்துடன், கண்ணா! இதெப்படி சாத்தியம். அண்ணா பீமன், ஜராசந்தனை இரண்டாக கிழித்தபிறகும், அவனது உடல் ஒட்டிக்கொண்ட ரகசியம் என்ன? என்றான். கிருஷ்ணர் புன்சிரிப்புடன், அது ஒரு பெரியகதை என்று ஆரம்பித்தார். பிருகத்ரதன் என்ற அசுரன் தேவர்களுக்கு பரம எதிரி. இவனுக்கு இரண்டு மனைவிகள். காசிராஜனின் புத்திரிகள். ஆனால், புத்திர பாக்கியம் இல்லை. அவன் கவுசிகமுனிவரை அணுகி இதற்குரிய வழிகேட்டான். அப்போது முனிவர் ஒரு மாமரத்தின் கீழ் அமர்ந்திருந்தார். அந்த மரத்தில் இருந்து ஒரு கனி முனிவரின் மடியில் விழுந்தது. அவர், அந்தப் பழத்தை பிருகத்ரதனிடம் கொடுத்து, இந்த அதிசயக்கனியை உன் மனைவியருக்கு கொடு. அவர்களுக்கு கர்ப்பம் தரிக்கும் என்றார். அவர்கள் ஆளுக்கு பாதியாக பழத்தைச் சாப்பிட்டனர். கர்ப்பம் தரித்து மகிழ்ந்திருந்தனர். ஒரே நாளில் பிரசவம் நிகழ்ந்தது. ஒரு மனைவி பாதி பிள்ளையையும், இன்னொருத்தி பாதி பிள்ளையையும் பெற்றனர். இதுகண்டு பயந்து போன பிருகத்ரதன், அந்த பாதிக் குழந்தைகளை கிரிவிரசம் என்ற நகருக்கு கொண்டு போய் வீசி எறிந்து விட்டான்.

அந்த வழியே ஜரை என்ற அரக்கி வந்தாள். அவள் இந்த அதிசயக்குழந்தைகளைக் கண்டாள். அவற்றை சாப்பிட மனமின்றி, ஒன்றோடு ஒன்றாகப் பொருத்தினாள். அவை இரண்டும் பொருந்தி அழகிய வடிவத்துடன் உயிர் பெற்றன. அந்தக் குழந்தையைப் பற்றி விசாரித்து, அதை பிருகத்ரதனிடமே ஒப்படைத்தாள். இவன் வெட்டிப்பிறந்த குழந்தை என்பதால் அவனுக்கு ஜராசந்தன் என்று பெயர் வைத்தான் பிருகத்ரதன். இவன் இப்படி பிறந்ததால் இவனது சாவும் அதன்படியே தான் ஆகும், என்ற கிருஷ்ணர், கதையைத் தொடர்ந்தார். அர்ஜுனா! ஜராசந்தனுக்கு ஒரு ஆசை, பூலோகம் முழுவதுமே தனக்கு அடிமைப்பட வேண்டுமென்று! இதனால், பல நாட்டு மன்னர்களை ஜெயித்து அவர்களின் நாட்டை தன் பிடிக்குள் கொண்டு வந்தான். அவர்கள் மீண்டும் தலைதூக்கி விடக்கூடாது என்பதற்காக அரசர்களைப் பலியிடும் நரமேதயாகம் செய்ய முடிவெடுத்தான். இதற்காக, அந்த அரசர்களை சிறையில் அடைத்து வைத்திருக்கிறான். அவர்களை விடுவிப்பது நமது கடமை, என்றார். பின்னர் பீமனிடம், அவனை இரண்டாகக் கிழித்து இடம் மாற்றிப்போடும் படி சைகை செய்தார். பீமனும் அவ்வாறே செய்ய ஜரா சந்தனின் கதை முடிந்தது. பின்னர் ஜராசந்தனால் சிறை வைக்கப்பட்ட அரசர்களை விடுதலை செய்தார் கிருஷ்ணர். ஜராசந்தனின் மகன் சகதேவன், கிருஷ்ணரை நமஸ்கரித்து சரணடைந்தான்.

அவனுக்கு பட்டம் சூட்டிய கிருஷ்ணர், மகதநாட்டை அவனிடமே ஒப்படைத்து விட்டார். பதிலுக்கு அவன், தன் செல்வத்தின் பெரும்பகுதியை பீமனுக்கு கொடுத்தான். இதன் பிறகு இந்திரப்பிரஸ்தம் வந்த அவர்கள், ராஜசூகயாகத்திற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. பீமன், அர்ஜூனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் பல திசைகளுக்கும் சென்று அந்நாட்டு அரசர்களை ஜெயித்தனர். யாகத்திற்கான பெரும்பொருளை சில அரசர்கள் தாங்களாகவே கொடுத்து விட்டனர். பீமனின் மகன் கடோத்கஜனை வரவழைத்த சகாதேவன், நீ இலங்கை சென்று அந்நாட்டு மன்னனிடம் பொருள் பெற்று வா, என அனுப்பினான். அப்போது இலங்கையை ராவணனின் தம்பி விபீஷணன் ஆண்டு கொண்டிருந்தான். அவன் கிருஷ்ணர் சம்பந்தப்பட்ட காரியம் என்றது மட்டுமல்லாமல், கடோத்கஜன் தன் குலத்தைச் சேர்ந்த இடும்பியின் மகன் என்பதால் பெருமையடைந்து, 14 தங்க பனைமரங்களைக் கொடுத்தான். சித்தப்பாவின் கட்டளையை நிறைவேற்றிய மகிழ்ச்சியுடன் விடைபெற்றான். ராஜசூய யாகத்திற்கு பீஷ்மர், கவுரவர்கள், கர்ணன் உள்ளிட்டோரும் அழைக்கப்பட்டனர். எல்லா நாட்டு மன்னர்களும் வந்தனர். அவர்களில் ஒருவன் சிசுபாலன். இவன் ஒரு பிறவியில் வைகுண்டத்தில் காவல்புரிந்தவன்.

விஜயன் என்ற பெயர் கொண்டவன். இவனோடு பணிசெய்த மற்றொருவன் ஜெயன். இவர்கள் ஒரு முறை நாராயணனைக் காணவந்த துர்வாசமுனிவரை தடுத்து நிறுத்தவே, கோபமடைந்த அவர், இவர்களை பூலோகத்தில் பிறக்க சாபமிட்டார். அவர்கள் ஏழு பிறவிகள் பகவானின் பக்தர்களாக பூமியில் பிறப்பார்கள் என்று சொல்லவே, ஜெயவிஜயர்கள் அழுதனர். எனவே, மூன்று பிறவிகள் பிறந்து பகவானுக்கு எதிராகச் செயல்படத்தயாரா எனக் கேட்ட போது, பிறவிகள் குறைந்தால் போதும் என ஒப்புக்கொண்டனர். அதன்படி கிருதயுகத்தில் இவர்கள் இரண்யனாகவும், இரண்யாட்சனாகவும் பிறந்து, பெருமாளுக்கு எதிராக நடந்தனர். பெருமாள் நரசிம்மராகவும், வராகமூர்த்தியாகவும் அவதாரம் எடுத்து அழித்தார். திரேதாயுகத்தில் கும்பகர்ணனாகவும், ராவணனாகவும் பிறந்தனர். லட்சுமிதாயின் அம்சமான சீதாதேவிக்கு இன்னல் செய்து, ராமனாய் பிறந்த விஷ்ணுவால் வதம் செய்யப்பட்டனர். வாபராயுகத்தில் கம்சனாகவும், சிசுபாலனாகவும் பிறந்தனர். இப்போது கிருஷ்ணராக அவதாரமெடுத்த பகவான் கம்சனை ஏற்கனவே கொன்றுவிட்டார். சிசுபாலன் தன் அழிவிற்காக காத்திருக்கிறான். சிசுபாலனின் தாய் கிருஷ்ணனின் பக்தை. அவள் பகவானிடம், கிருஷ்ணா! என் பிள்ளையைக் கொன்றுவிடாதே. அவன் மீது நான் வைத்துள்ள பாசம் ஏராளம், என்றாள். பேச்சில் வல்லவரான கிருஷ்ணன், தாயே! உன் மகன் நூறு தவறு செய்யும்வரை பொறுத்திருப்பேன். அதைத் தாண்டினால் கொன்றுவிடுவேன், என சொல்லிவிட்டார்.


சிசுபாலன் ராஜசூகயாகத்தின் போது நூற்று ஒன்றாவது தவறைச் செய்ய வந்திருக்கிறான். யாகத்தின் போது அக்கிர பூஜை என்ற சடங்கை நடத்துவார்கள். உலகில் யார் உயர்ந்த மன்னரோ, அவருக்கு அந்த பூஜை நடத்தப்படுவது வழக்கம். கிருஷ்ணர் துவாரகாபுரியின் மன்னரல்லவா! அவ்வகையில் அவரே இந்த பூஜைக்குரியவர் என்றார் யாகத்திற்கு வந்திருந்த வியாசமுனிவர். இதை சிசுபாலன் எதிர்த்தான். யார் இந்த கருப்பனுக்கா அக்கிர பூஜை செய்யப் போகிறீர்கள்? மாடு மேய்க்கும் இவனுக்கு பூஜை பெற என்ன தகுதியிருக்கிறது? கோகுலத்தில் வெண்ணெய் திருடிய இந்த திருடனுக்காக அக்கிர பூஜை? மேலும், இவன் பெண் பித்தனல்லவா? கோபியர்கள் குளிக்கும்போது, துணிகளை திருடி மரத்தின் மேல் இருந்தபடி அவர்களை நிர்வாணமாக ரசித்தவன் அல்லவா? ஜராசந்தனுக்கு பயந்து ஓடி துவாரகையில் ஒளிந்து கொண்டிருக்கும் இவனுக்கு பூஜை செய்வதை நான் எதிர்க்கிறேன். வீரம்மிக்க பல அரசர்கள் இங்கிருக்கும் போது, இந்த பேடிக்கா பூஜை என்றான் ஏளனம் கலந்த சிரிப்புடன். கிருஷ்ணரின் கண்கள் சிவந்தன.


             
               
               
               
               

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer