Saturday 16 August 2014

பதினெட்டாம் அத்தியாயம் 2

26. முக்தஸங்கோநஹம்வாதீ த்ருத்யுத்ஸாஹஸமந்வித:
ஸித்த்யஸித்த்யோர்நிர்விகார: கர்தா ஸாத்த்விக உச்யதே 

முக்தஸங்கோ-பற்றற்றவனாகவும், அநஹம்வாதீ-நான் என்னும் எண்ணம் இல்லாதவனாகவும், த்ருத்யுத்ஸாஹஸமந்வித:-உறுதியும், ஊக்கமும் உடையவனாகவும், ஸித்தி அஸித்த்யோ நிர்விகார:-வெற்றி தோல்வியில் வேறுபாடற்றவனாகவும், கர்தா ஸாத்த்விக உச்யதே-உள்ள கர்த்தாவை (செயல் ஆற்றுபவனை) சாத்வீகன் (ஒளியியல்பு) உடையவன் என்பர்.

பொருள் : நசைக ளற்றான், நானென்ப தற்றான், உறுதியுங் களிதரும் ஊக்கமு முடையான்,
வெற்றி தோல்வியில் வேறுபா டற்றான் இங்ஙன மாகித் தொழில்க ளியற்றுவோன்
ஒளியியல் புடையா னென்ப.

எல்லா வடிவங்களும் ஈசன் சொரூபம்; எல்லாச் செயல்களும் அவனுடையவை என்ற எண்ணத்தில் சாதகன் நிலைத்திருக்கிறான். எனவே அவன் பற்று நீங்கியவன் ஆகிறான். உடல் தன்னுடையது என்பது அல்லாது அது ஈசனுடைய ஆலயமென்று சாதகன் கருதுகிறான். அவ்வுடலின் மூலம் நிகழ்கின்ற கர்மங்களுக்குத் தான் பொறுப்பாளன் அல்லன்; அது ஈசன் செயல் என்று அவன் உறுதியாக உணர்கிறான். ஆதலால் அவனிடத்து அகங்காரமில்லை. தன்னை பகவானுடைய தொண்டன் என்று கருதுகிறபடியால் தொடுத்த கர்மங்களில் அவனுக்கு உறுதியும் ஊக்கமும் உண்டாகின்றன.

பற்றுடையார் வெற்றியில் மகிழுறவும், தோல்வியில் துன்புறவும் செய்கின்றனர். கடவுளுடைய செயல் என்று எண்ணுபவன் கர்மத்துக்குக் கர்த்தாவாகத் தோன்றுகிறானெனினும், மனத்தினுள் எல்லாம் ஈசன் செயல் என்ற திடநம்பிக்கையிருப்பதால் அவன் நிர்விகாரியாக, மனதின்கண் வேறுபாடு அடையாதவனாக இருக்கிறேன்.

கள்ளங் கபடமற்ற மனமிருந்தால் ஈசுவரனை எளிதில் அடையலாம். கற்கள் இல்லாமல் உழுது பண்படுத்தப்பட்ட மிருதுவான பூமியில் நடப்படும் வித்து எளிதில் முளைத்துக் கிளம்பி, சீக்கிரத்தில் பயன் அளிப்பதைப் போல, கள்ளங்கபடமற்ற மனத்தில் ஆத்மீக உபதேசங்கள் எளிதில் பயன் அளிக்கின்றன.

27. ராகீ கர்மபலப்ரேப்ஸுர்லுப்தோ ஹிம்ஸாத்மகோஸுசி:
ஹர்ஷஸோகாந்வித: கர்தா ராஜஸ: பரிகீர்தித

ராகீ-வேட்கையுடையோன், கர்மபலப்ரேப்ஸு-செய்கைப் பயன்களை விரும்புவோன், லுப்த:-லோபி (பேராசை உள்ளவன்), ஹிம்ஸாத்மக:-இடர் செய்வோன், அஸுசி:-தூய்மை யற்றோன், ஹர்ஷஸோகாந்வித:-இன்பதுன்பத்தால் பாதிக்கப் படுபவன், கர்தா ராஜஸ: பரிகீர்தித:-இவ் வண்ணமாகித் தொழில் செய்வோன் ரஜோ குணத்தானென்பர்

பொருள் : வேட்கையுடையோன், செய்கைப் பயன்களை விரும்புவோன், லோபி, இடர் செய்வோன், தூய்மை யற்றோன், களிக்குந் துயிலுக்கும் வசப்பட்டோன்இவ் வண்ணமாகித் தொழில் செய்வோன் ரஜோ குணத்தானென்பர்.

ஏதேனும் ஒருவிதத்தில் பிறர் பொருளைத் தன்னுடையதாக்கிக்கொள்ள முயலுபவன் உலுத்தன் அல்லது உலோபியாகிறான். அதன் பொருட்டு மற்றவர்களைத் துன்புறுத்தவும் அவன் ஆயத்தமாயிருக்கிறான். அத்தகையவன் எண்ணுவதிலும், பேசுவதிலும், செய்வதிலும், உடலை வைத்துக்கொள்ளும் முறையிலும் சுத்தமில்லை. விரும்பியது வந்தமையுங்கால் அவன் விரைவில் மகிழ்வடைகிறான். வேண்டாதது வந்தமையுங்கால் அவன் விரைவில் சோகித்துத் துன்பப்படுகிறான்.

ரஜோகுணம் நிறைந்தவனது கர்த்ருத்வம் (கர்த்தா என்று உணரும் பான்மை) இத்தகையதாம்.

வீண் கர்வம் பிடித்தவனாகயிருப்பது கேவலம் தாழ்ந்த சுபாவம். காக்கையைப் பார். தான் சாமர்த்தியமுள்ள பக்ஷியென அது நினைத்துக்கொண்டிருக்கிறது. ஒருபோதும் அது வலையில் அகப்படுவதில்லை. ஆபத்து வருமென்பதைச் சற்றுத் தெரிந்துகொண்டதும் பறந்தோடி விடுகிறது. வெகு தந்திரமாக ஆகாரத்தைத் திருடுகிறது. என்றாலும் மலம் தின்பதில் மட்டும் அதற்கு அருவருப்பில்லை. அதிகச் சமர்த்தாக இருப்பதின் பலன் இதுதான்.

28. அயுக்த: ப்ராக்ருத: ஸ்தப்த: ஸடோ நைஷ்க்ருதிகோலஸ:
விஷாதீ தீர்கஸூத்ரீ கர்தா தாமஸ உச்யதே 

அயுக்த:-கட்டுப் படுத்தாத மன நிலை உடையவன், ப்ராக்ருத:-அறிவு முதிர்ச்சி அடையதவன்,
ஸ்தப்த:-கர்வமுடையவன், ஸட:-வஞ்சகம் உடையவன், நைஷ்க்ருதிக:-பிறருடைய வாழ்க்கையை கெடுப்பவன், விஷாதீ-கவலை கொண்டவன், அலஸ:-சோம்பேறியும், தீர்கஸூத்ரீ -காலத்தை நீடித்துக்கொண்டே போவோன், கர்தா தாமஸ உச்யதே - இவ்வண்ணமாகித் தொழில் செய்வோன் தமோ குணமுடையா னெனப்படுவான்

பொருள் : யோக நிலை பெறாதோன், அநாகரிகன், முரடன், வஞ்சகன், பொறாமையுடையோன், சோம்பேறி, ஏக்கம் பிடித்தவன், காலத்தை நீடித்துக்கொண்டே போவோன், இவ்வண்ணமாகித் தொழில் செய்வோன் தமோ குணமுடையா னெனப்படுவான்.

அடக்கமும், ஒடுக்கமும், சாதனமும் உடைய மனது யோகத்துக்கு உரியது. அத்தகைய நல்லியல்பு ஒன்றும் இல்லாத மனது ஈண்டு உரைக்கப்படுகிறது. புத்தி வளர்ச்சியடையாது பாமரனாகவும் பாலன் போன்றும் இருப்பவன் பிராகிருதன். வணங்க வேண்டிய இடத்தில் வணங்காதிருப்பவன் முரடனாகிறான். வேலை செய்தற்கு விருப்பமில்லாது தன் வல்லமையை யெல்லாம் மறைத்து வைத்துக்கொள்பவன் வஞ்சகனாகிறான். பிறருக்கிடையில் வேண்டுமென்ற பகைமையை உண்டுபண்ணுபவன் பழிகாரனாகிறான். செய்ய வேண்டியதை ஒன்றும் செய்யாதிருப்பவன் சோம்பேறி. மனம் தளர்ந்து யாண்டும் துன்பம் துய்க்கும் தன்மையன் ஒருவன் அரும்பெரும் செயலுக்கு அருகன் ஆகான். துன்பப்படுபவனிடத்திருந்து பேராற்றல்களெல்லாம் மறைந்துபட்டுப் போகின்றன. தற்காலிகமாகத் துன்பத்தின் வசப்பட்டிருந்த அர்ஜுனனைத் தட்டி யெழுப்புதற்கே கீதா உபதேசம் நிகழ்வதாயிற்று. ஒரே நாளில் முடிக்கவேண்டிய வேலையை ஒரு மாதத்துக்கு நீட்டிக்கொண்டு போகிறவன் காலத்தை வீணே கடத்துபவன் ஆகிறான். அதனால் அவனது வாழ்க்கைப் பயன் குன்றுகிறது.

ஒரு செம்படவன் ஆற்றில் வலையை வீசி அநேக மீன்களைப் பிடித்தான். சில மீன்கள் வலைக்குள் அசைவற்றிருந்து வெளியே போகக் கொஞ்சமேனும் பிரயத்தனப்படாமலிருந்தன. வேறு சில மீன்கள் பிரயத்தனப்பட்டுத் துள்ளிக் குதித்தன. ஆனால் வெளியே போக முடியவில்லை. இன்னும் சில மீன்கள் எப்படியோ வலையைவிட்டுத் தப்பித்துக்கொண்டு போய்விட்டன. உலகத்திலுள்ள மனிதர்களும் இவ்வாறு மூவகையினராக இருக்கின்றனர். 1. முக்தியடையப் பிரயத்தனப்படாது பந்தப்பட்டிருப்பவர்கள் 2. பிரயத்தனப்படும் முமுக்ஷúக்கள் 3. விடுதலையடைந்த முக்தர்கள்.

அறிவும் உறுதியும் பெறுகிற படித்தரங்கள் இனி விளக்கப்படுகின்றன:

29. புத்தேர்பேதம் த்ருதேஸ்சைவ குணதஸ்த்ரிவிதம் ஸ்ருணு
ப்ரோச்யமாநமஸேஷேண ப்ருதக்த்வேந தநஞ்ஜய 

தநஞ்ஜய-தனஞ்ஜயா, குணத: ஏவ-குண வகையால், புத்தே: த்ருதே: -புத்திக்கும் மன உறுதிக்கும், த்ரிவிதம் பேதம்-மூன்று விதமான வேறுபாட்டை, அஸேஷேண ப்ருதக்த்வேந-முழுமையாகவும் பகுத்தும், ப்ரோச்யமாநம் ஸ்ருணு-உரைக்கிறேன், கேள்.

பொருள் : குண வகையால் மூன்று விதமாகிய புத்தியின் வேற்றுமைகளையும், மிச்சமின்றிப் பகுத்துரைக்கிறேன்; தனஞ்ஜயா, கேள்.

திக்விஜயம் செய்தபொழுது அர்ஜுனன் தேவலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள தனத்தையெல்லாம் ஜயித்தானாதலால் அவன் தனஞ்ஜயன் என்ற பெயர் பெற்றான். யாருக்கும் பயன் படாது ஓர் இடத்தில் அடைபட்டுக் கிடக்கும் செல்வத்தைப் பயன்படுகிற இடத்துக்கு மீட்டெடுத்துக்கொண்டு வருவது அரசனுடைய கடமையாகும்.

செய்யத்தக்கது எது, தகாதது எது என்று முடிவுகட்டுந் தன்மையானது அறிவு என்றும் புத்தி என்றும் பகரப்படுகிறது. அத்தகைய புத்தியினிடத்து மூன்றுவிதமான பாகுபாடுகள் இருக்கின்றன. செய்யவேண்டிய காரியத்தைத் தளர்வுறாது திட்பத்துடன் செய்வது உறுதி அல்லது திருதி என்று பெயர் பெறுகிறது. அதுபோன்ற மனவலிவின்கண் மூன்று படித்தரங்கள் அமைந்திருக்கின்றன.

உப்பினாலும் துணியினாலும் கல்லாலும் செய்யப்பட்ட மூன்று வகைப் பதுமைகள் இருக்கின்றன. அவைகளைத் தண்ணீரில் அமிழ்த்தினால் முதலாவது பதுமை கரைந்து தன் உருவத்தை இழந்து விடும். இரண்டாவது தன் உருவத்துடனிருந்தே நிறையத் தண்ணீரைத் தன்னுள் கிரகித்துக்கொள்ளும். மூன்றாவதில் தண்ணீரே நுழையாது. முதல் பதுமை பரமாத்மாவிடம் சேர்ந்து அதனோடு ஒன்றி ஐக்கியமாய்விடும் மனிதனைக் குறிக்கும். அவன் முக்த புருஷன். இரண்டாவது பதுமை திவ்யானந்தத்தையும் திவ்ய ஞானத்தையுமுடைய வாஸ்தவமான பக்தனைக் குறிக்கும். மூன்றாவதோ, ஞானமானது கொஞ்சமேனும் நுழையாத ஹிருதயத்தையுடைய உலகப் பற்றுள்ளவனைக் குறிக்கும்.

அவ் அறிவுக்கும் உறுதிக்கும் இனி விளக்கம் வருகிறது :

30. ப்ரவ்ருத்திம் நிவ்ருத்திம் கார்யாகார்யே பயாபயே
பந்தம் மோக்ஷம் யா வேத்தி புத்தி: ஸா பார்த ஸாத்த்விகீ 

பார்த-அர்ஜுனா, யா ப்ரவ்ருத்திம் நிவ்ருத்திம் -எது ப்ரவ்ருத்தி மார்க்கம், எது நிவ்ருத்தி மார்க்கம், கார்யாகார்யே பயாபயே -செய்யத்தக்கது யாது, தகாதது யாது, அச்சமெது, அஞ்சாமை யெது, பந்தம் மோக்ஷம் வேத்தி-பந்தமெது, விடுதலை யெது என்பனவற்றைப் பகுத்தறியும், ஸா புத்தி: ஸாத்த்விகீ-அந்த புத்தியே சாத்விக புத்தியாம்.

பொருள் : தொழிலெது, ஒழிவு யாது, செய்யத்தக்கது யாது, தகாதது யாது, அச்சமெது, அஞ்சாமை யெது, பந்தமெது, விடுதலை யெது என்பனவற்றைப் பகுத்தறியும் புத்தியே, பார்த்தா, சாத்விக புத்தியாம்.

பிரபஞ்சத்தில் ஜீவனைப் பந்தப்படுத்திப் பிறப்பு இறப்பைப் பெருக்கிக்கொண்டுபோகும் கர்மம் பிரவிருத்தி எனப்படுகிறது. மற்று, மோக்ஷத்துக்கு ஏதுவான கர்மம் நிவிருத்தி என்று சொல்லப்படுகிறது. இதையே அகர்மம் என்றும் சந்நியாசம் என்றும் சொல்லலாம். ஏனென்றால் கர்மத்தைக் கடப்பதற்கு அது உறுதுணையாகிறது. கால தேச வர்த்தமானத்தை அனுசரித்து எதைச் செய்தால் மனிதனுக்கு நலன் வருகிறதோ அது செய்யத் தகுந்த கர்மம். எதைச் செய்தால் கேடு உண்டாகுமோ அது தகாத கர்மமாகிறது. தகாத கர்மத்தைச் செய்ய மனிதன் பயப்படவேண்டும். பெயரளவில் அது பயமெனப்படுகிறது. உண்மையில் அது வீரத்தின் தோற்றமாம். விஷப் பாம்பு, புலி முதலியவைகளுடன் பழகப் பயப்படவேண்டும். அதாவது மடத்தனமாகப் பாதுகாப்பின்றி அவைகளின் அருகில் செல்லலாகாது. தானாக வந்தமைகிற மரணத்துக்குப் பயப்படலாகாது. பிசாசு, பூதகணங்கள் முதலியவைகளைப்பற்றிப் பயப்படுவதில் பொருளில்லை. அவைகளைப்பற்றிய பயமெல்லாம் அக்ஞானத்தால் வருவது. இல்லாததை இருப்பதாகக் கோழைநெஞ்சம் கற்பித்துக் கொண்டு அஞ்சுகிறது. பிரவிருத்தியும், தகாத கர்மமும், பயமும் பந்தத்தை உண்டுபண்ணுகின்றன. நிவிருத்தியும், தக்க கர்மமும், அபயமும் மோக்ஷத்தைத் தருகின்றன. அக்ஞானத்தால் பந்தம் ஏற்படுகிறது. ஞானத்தால் மோக்ஷம் விளைகிறது. சாத்விக புத்தி இவைகளையெல்லாம் நன்கு ஓர்கிறது.

இவ்வுலகம் அநித்தியமா? நீ ஈசுவரனை அறியாமலிருக்கும் வரையில் அது அநித்தியந்தான். ஏனெனின், நீ ஒவ்வொரு பொருளிலுமுள்ள ஈசுவரனைக் காண்பதில்லை. ஆகவே, நான், எனது என்ற மனோபாவம் உன்னிடம் ஆழ்ந்துகிடக்க, நீ உலக வசத்தவனாகிறாய். இவ்விதம் அக்ஞானத்தினால் மதிமயங்கிய நீ, விஷயப்பொருள்களையே கருதுபவனாகி, மாயையாகிய சமுத்திரத்தில் மேலும் மேலும் ஆழமாக மூழ்கிக்கொண்டேயிருக்கிறாய். வழி நேராக இருப்பினும், ஸம்ஸாரத்தினின்று கரையேற வொண்ணாதபடி மாயையானது மனிதர்களுடைய கண்களை முற்றிலும் குருடாக்கி வருகின்றது. ஸம்ஸாரம் எவ்வளவு அநித்தியமென்பது உனக்கே தெரியும். நாம் வசிக்கிற வீட்டைப் பற்றிச் சற்று யோசனை செய்வோம். எத்தனை பேர்கள் அதில் பிறந்து இறந்து போயிருக்கின்றனர்! உலகப் பொருள்கள் ஒரு நிமிஷத்தில் நம் முன்னர் தோன்றி, அடுத்த நிமிஷத்தில் மறைந்து போகின்றன. பந்துக்கள் என யாரை நீ கருதுகிறாயோ அவர்கள் நீ கண்மூடிய பிறகு உனக்குப் பந்துக்கள் ஆகிறதில்லை. அப்படியிருந்தும் லௌகிகனுடைய பற்று எவ்வளவு பலமானது ! குடும்பத்தில் அவனுடைய பராமரிப்பை எதிர்பார்ப்பவர் ஒருவருமில்லாத காலத்தில் கூட அவனுக்குக் காசிக்குப் போய்வரச் சந்தர்ப்பப்படுவதில்லை. பக்தி சாதனம் செய்ய அவனுக்கு அவகாசம் கிடைப்பதில்லை. பேரன் ஹரீசன் என்ன செய்வான்? என்ற விசாரம் அவனை உலகத்தோடு பிணிக்கின்றது. மீன்பறியின் வாய் எப்போதும் திறந்திருக்கிறது; என்றாலும் மீன்கள் வெளியே ஓடிப் போவதில்லை. வண்ணாத்திப்புழு தான் இழைத்த கூண்டிலேயே கிடந்து சாகின்றது. அப்படிப்பட்ட ஸம்ஸாரம் அநித்தியமென்றும் அழிந்து போகக்கூடியதென்றும் ஏற்படவில்லையா?

31. யயா தர்மமதர்மம் கார்யம் சாகார்யமேவ
அயதாவத்ப்ரஜாநாதி புத்தி: ஸா பார்த ராஜஸீ 

பார்த-பார்த்தா. யயா தர்மம் அதர்மம் -எந்த புத்தியினால் தர்மத்தையும் அதர்மத்தையும், கார்யம் அகார்யம் ஏவ -செய்யத் தக்கது, தகாதது, அயதாவத் ப்ரஜாநாதி-உள்ளபடி அறியாத, ஸா புத்தி: ராஜஸீ-புத்தி ராஜச மெனப்படும்.

பொருள் : தர்மத்தையும் அதர்மத்தையும் காரியத்தையும் அகாரியத்தையும் உள்ளபடி அறியாத புத்தி ராஜச மெனப்படும், பார்த்தா.

அசைகின்ற நீரில் பிம்பம் உள்ளபடி தெரிகிறதில்லை. அங்ஙனம் ராஜஸ புத்தியில் சாஸ்திரோக்தமான தர்மமும் காரியமும் உள்ளபடி தென்படமாட்டா; திரிவுபட்டே தென்படுகின்றன. சூதாடுதலாகிய தகாத காரியத்தைத் தகுந்த காரியமாக துரியோதனன் எண்ணி தர்மராஜனை அதில் இணைத்துவிட்டான். தனக்கு உரியதல்லாத ராஜ்யத்தை உரியதென்று பற்றிக்கொண்டு பாண்டவரைப் போரில் தூண்டியது அதர்மச் செயல். ஆயினும் அவன் அதை தர்மமென்று எண்ணினான்.

ரஜோகுணத்தினின்று உதித்த புத்தியுடையவனிடத்துப் பெருமிதமான உழைப்பு இருக்கிறது. ஆனால் அந்த உழைப்பில் நேர்மையைக் காணமுடியாது. அயலார் இருவர் கிருஷியோ, வர்த்தகமோ, கைத்தொழிலோ செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களுள் ரஜோகுண விருத்தியுடையவன் தனது ஆற்றலையும் அறிவையும் ஓயாது உபயோகப்படுத்துவான். ஆனால் அம்முயற்சி ஆக்கத்துறையில் இராது. அயலான் சம்பாதித்ததைத் தான் அபகரித்துக்கொள்ள அவன் எத்தனிப்பான்; அல்லது அயலானுக்கு நலம் செய்வது போன்று வெளிப்படையில் காட்டிக்கொண்டு, மறைமுகமாக அவனைக் கெடுக்க எத்தனிப்பான்; வெளிப்படையாக அவனோடு போட்டி போட்டும் அவனை அழிப்பான். தன்னருகில் அமைதியாக வாழ்ந்திருக்க அவன் யாரையும் விடமாட்டான்; ஏதேனும் ஒரு விதத்தில் அயலானை அல்லல்படும்படி செய்துவைப்பான். வழக்குக் தொடுப்பதில் ரஜோகுணத்தானுக்கு நிகரானவனைக் காணமுடியாது. காலமெல்லாம் நீதி மன்றங்களில் வியாச்சியங்களும் வில்லங்கங்களும் தோன்றிக்கொண்டே இருக்கும். மெய்யைப் பொய்யாக்குதலிலும் பொய்யை மெய்யாக்குதலிலும் அவன் வல்லவன். முறை தவறிய முயற்சியிலேயே அவன் பெருமகிழ்வடைவான். நேர்மையாக நடந்துகொள்பவர்களை ஒன்றுக்கும் உதவாத அப்பாவிகளென்று அவன் ஏளனம் பண்ணுவான். நல்லார் அருகில் அவன் ஒருநாளும் செல்லான். பாரமார்த்திக வாழ்வு சம்பந்தமான பேச்சு அவனுக்குக் கசப்பாக இருக்கும். பிழைக்கத் தெரியாதவர்களது போக்கு அத்தகையது என்று அவன் அனுதாபம் காட்டுவான் அல்லது பராமுகமாய் இருப்பான். கெட்ட வழியில் சம்பாதிக்கும் அவன் செல்வம் கெட்ட காரியத்துக்கே ஓயாது போய்க்கொண்டிருக்கும். நல்ல காரியத்துக்குச் செல்வத்தைச் சிறிதேனும் அவன் ஈயான். ரஜோகுணத்தில் உதித்த அறிவு செய்யும் செயல்கள் இவை போன்றவைகளாம்.

32. அதர்மம் தர்மமிதி யா மந்யதே தமஸாவ்ருதா
ஸர்வார்தாந்விபரீதாம்ஸ்ச புத்தி: ஸா பார்த தாமஸீ 

பார்த-பார்த்தா, யா தமஸா ஆவ்ருதா-எந்த புத்தி இருளால் கவரப்பட்டதாய், அதர்மம் தர்மம் இதி -அதர்மத்தை தர்மமாகக் கருதுவதும், ஸர்வார்தாந் விபரீதாந் -எல்லாப் பொருள்களையும் நேருக்கு மாறாக, மந்யதே-நினைக்கிறதோ, ஸா புத்தி: தாமஸீ-அது புத்தி தாமச புத்தியாம்.

பொருள் : பார்த்தா, இருளால் கவரப்பட்டதாய், அதர்மத்தை தர்மமாகக் கருதுவதும் எல்லாப் பொருள்களையும் நேருக்கு மாறாகக் காண்பதும் ஆகிய புத்தி தாமச புத்தியாம்.

நல்லதைக் கெட்டதாகவும், கெட்டதை நல்லதாகவும் நினைப்பது விபரீத புத்தி. நோயாளி ஒருவன் மருந்தை அருந்தமாட்டேன் என்று நோயை வளர்க்கிற உணவை உண்டால் என்னாகுமோ அதுவே தாமஸபுத்தியின் விளைவு. அறிவிலியாகிய சிறுவன் ஒருவன் பள்ளிக்கூடத்துக்கு ஒழுங்காகப் போவதில்லை; துஷ்டப் பிள்ளைகளுடன் கூடிக்கொண்டு வீண்காலம் போக்குகிறான். அவனுக்குப் பள்ளிக்கூடம் போவது கெட்டதாகத் தோன்றுகிறது. கூடாநட்புக் கொள்வதை நலமென நினைக்கிறான். முதியவர்களில் பலர் உழைத்துப்பாடுபடுவதில்லை; சோம்பலே வடிவெடுத்திருக்கின்றனர். உழைப்பவர், சுகஜீவனம் பண்ணத் தெரியாதர்கள் என்று அன்னவர் நினைக்கின்றனர். கடவுள் வழிபாடு, பாரமார்த்திக விஷய ஆராய்ச்சி ஆகியவைகளில் அவர்களுக்குக் கசப்பு ஏற்படுகிறது. வேதாந்த விசாரம் செய்தற்கு இப்பொழுது அவசரம் ஒன்றுமில்லை என்பது அவர்களது கருத்து. விருத்தாப்பியத்தில் அதைப் பார்த்துக்கொள்ளலாம் என்று சாக்குச் சொல்லுகின்றனர். ஊரார் விஷயங்களைப் பற்றி வீண்பேச்சுப் பேசுவது, அவர்களிடத்துள்ள குணத்தைக் குற்றமாகவும், குற்றத்தைக் குணமாகவும் ஓர்தலில் தமோகுண விருத்தியுடையவர்க்குப் பெருமகிழ்வு உண்டாகிறது. ஆண்மை தரக்கூடிய நல்ல விளையாட்டுகளை அவர்கள் விளையாடமாட்டார்கள். சூதாடுவது போன்ற விளையாட்டுகளில் அவர்கள் வீண் காலம் கழித்துக்கொண்டிருப்பார்கள். இலவசமாக உணவு கிடைக்கக்கூடிய இடங்களில் அவர்கள் அழைப்பின்றியே வந்து கூடிக் கலந்துகொள்வார்கள்.

இனி, திருதி விளக்கப்படுகிறது :

33. த்ருத்யா யயா தாரயதே மந:ப்ராணேந்த்ரியக்ரியா:
யோகேநாவ்யபிசாரிண்யா த்ருதி: ஸா பார்த ஸாத்த்விகீ 

பார்த-பார்த்தா, யயா அவ்யபிசாரிண்யா த்ருத்யா:-எந்த பிறழ்ச்சி இல்லாத உறுதியால், யோகேந-யோகத்தின் மூலம், மந: ப்ராண இந்த்ரியக்ரியா:-மனம், உயிர், புலன்கள் இவற்றின் செயல்களை, தாரயதே-நிலை நிறுத்துகிறானோ, ஸா த்ருதி: ஸாத்த்விகீ-அந்த உறுதியே சாத்வீகமாவது.

பொருள் : மனம், உயிர், புலன்கள் இவற்றின் செயல்களைப் பிறழ்ச்சியில்லாத யோகத்துடன் தரிக்க வல்லதாகிய மன உறுதியே சாத்வீகமாவது, பார்த்தா.

திருதி என்னும் சொல்லை உறுதி என்று மொழி பெயர்த்திருக்கிறோம். மனத்தகத்து அமையும் திட்டம் என்பதும் அதுவே. நல் வாழ்க்கையில் நிலைத்துள்ள மனதுக்கு அது உண்டாகிறது. சூரிய வெளிச்சம் கிரணங்களாகச் சிதறடைந்து போகிறது. அக்கிரணங்களைத் திரும்பவும் ஒருமுகப்படுத்தினால் பேரொளி உண்டாகிறது. அப்பேரொளியை எப்பொருளின்மீது திருப்பினாலும் அப்பொருளை அது நன்கு விளக்கிக் காட்டவல்லது. அறிவும் ஆற்றலும் ஒன்றுபட்ட அந்தக்கரண நிலை திருதி என்பதாகிறது. திருதி படைத்துள்ள யோகியின் மனதும், பிராணனும், இந்திரியங்களும் திருத்தமாகவும் அழுத்தமாகவும் வேலைசெய்ய வல்லவைகளாகின்றன. இந்தச் செயல்களெல்லாம் பரமாத்மாவினுடைய சேவைக்கென்றே ஒப்படைக்கப்படுகின்றன. அதாவது மனதில் உண்டாகிற உணர்ச்சியும், பிராணன் உயிர்பிடித்திருப்பதும், கர்மேந்திரியங்களும் ஞானேந்திரியங்களும் தத்தம் வேலைகளைச் செய்வதும் ஆகிய இவையெல்லாம் விதவிதமான ஈசுவர வழிபாடுகளாகின்றன. வஸ்திரத்தில் அமைந்துள்ள நூலானது பல இழைகளைக் கொண்டது. அங்ஙனம் திருதி என்பது மனம், பிராணன், இந்திரியங்கள் ஆகியவைகளின் உயர்ந்த செயல்களைக் கொண்டது. நூலானது ஊசியின் காதிலே நுழைதற்கு இழைகள் பிளவுபடாதிருக்க வேண்டும். இழைகள் குவிந்து இருந்தால் ஊசியின் காதில் எளிதில் செல்லும். ஆனால் ஊசியின் காது அடைபட்டிருந்தால் குவிந்த நூலும் வளைந்துபோய்விடும். உள்ளே நுழையாது. ஏனென்றால் நூலில் உறுதியில்லை. யோகி ஒருவனுடைய திருதியோ குவிந்த நூல்முனை போன்றும், கூரிய உறுதியான ஊசிமுனை போன்றும் இருக்கும். அத்தகைய பண்பட்ட திருதியானது பரமாத்மாவுக்கென்றே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. வேறு எப்பொருளுக்கும் அது பங்கிட்டுக் கொடுக்கப்பட்டதன்று. காந்த ஊசி யாண்டும் வடதிசையையே நோக்கி நிற்பதுபோன்று யோகியின் திருதி எப்பொழுதும் பரமாத்மாவுக்கென்றே ஒப்படைக்கப்பட்டதாகிறது. அந்த உறுதிப்பாடு சாத்விகமானது. அது மனிதனை மேலோன் ஆக்குகிறது.

34. யயா து தர்மகாமார்தாந்த்ருத்யா தாரயதேர்ஜுந
ப்ரஸங்கேந பலாகாங்க்ஷீ த்ருதி: ஸா பார்த ராஜஸீ 

து பார்த-ஆனால் பார்த்தா, அர்ஜுந-அர்ஜுனா, பலாகாங்க்ஷீ-பயன்களை விரும்புவோன், யயா த்ருத்யா-எந்த உறுதியினால், ப்ரஸங்கேந-மிகுந்த பற்றோடு, தர்மகாமார்தாந் தாரயதே-அறம் பொருளின்பங்களை அடைவதிலே உறுதியாக இருக்கிறானோ, ஸா த்ருதி: ராஜஸீ-அந்த உறுதி ராஜசம் ஆகும்.

பொருள் : பார்த்தா, பற்றுத லுடையோனாய்ப் பயன்களை விரும்புவோன் அறம் பொருளின்பங்களைப் பேணுவதில் செலுத்தும் உறுதி ராஜச உறுதியாகும்.

புருஷார்த்தம் அல்லது உறுதிப்பொருள் நான்கு, தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் அல்லது அறம், பொருள், இன்பம், வீடு என்பனவாம் அவை. சாத்விக திருதி மோக்ஷத்தை நாடுகிறது. தர்மம், அர்த்தம், காமம் ஆகியவைகள் பிரபஞ்ச வாழ்க்கையின் முக்கிய பகுதிகளாகிய இவ்வுலக வாழ்க்கைக்கும் சுவர்க்க வாழ்க்கைக்கும் உதவுகின்றன. உலகப்பற்றைப் பொதுவாக இரண்டாகப் பிரித்து வைக்கலாம். காசு ஆசை அல்லது பொருளில் பற்றுதல்; இது எவ்வளவு உறுதியாக மனதைப்ற்றிப்பிடித்திருக்கிறது என்பது மனிதனுக்குத் தெரியாது. உணவையும் உறக்கத்தையும் தியாகம் செய்துவிட்டு மனிதன் அல்லும் பகலும் உழைக்கிறான். அதன் பயனாக இன்னும் கொஞ்சம் செல்வம் சேரும் என்ற நம்பிக்கை அவனை அச்செயலில் தூண்டுகிறது. சொந்த ஊரையும் உற்றாரையும் உறவினரையும் பிரிந்து தூர தேசத்துக்கு ஒருவன் போகிறான். அதிகம் திரவியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை அவனை ஆங்கு இழுத்துச் செல்லுகிறது. இனி, உடலின் தேவைகளையும் சுருக்கிக்கொண்டு ஒருவன் பாடுபடுகிறான். மேலும் செல்வம் சேரவேண்டும் என்ற நோக்கம் அவனை அப்படித் தூண்டுகிறது. அடுத்தபடியாக இருப்பது இன்பத்தில் வைத்துள்ள பற்றுதல். எல்லா உயிர்களும் இன்பத்தை நாடுகின்றன. இன்பம் கிடைப்பதாலேயே அவைகள் இவ்வுலக வாழ்க்கையை விரும்புகின்றன. அவைகள் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளெல்லாம் காமத்தை நிறைவேற்றுதற்பொருட்டேயாம். சலிப்படையாது, தளர்வுறாது எல்லா உயிர்களும் உழைக்கின்றன. இன்பத்தின் பொருட்டே அவைகள் அங்ஙனம் செய்கின்றன. வெவ்வேறு உயிர்கள் வெவ்வேறு விதங்களில் இன்பத்தைப் பெறலாம். ஏதேனும் ஒருவிதத்தில் அது அகப்பட்டால் போதுமானது. உயிரைக் கொடுத்து இன்பத்தைப் பெற அவைகள் எத்தனிக்கின்றனவென்றால் அது மிகையாகாது. நல்லறம் பயிலுதல் பொருளையும் இன்பத்தையும் பெற்று வைத்திருத்தல் பொருட்டேயாம். பொருளோடும் இன்பத்தோடும் கூடிய அறம் இவ்வுலக சம்பந்தமானது. இம்மைக்கு ஏதுவாகிய அறம் பொருள் இன்பங்களில் பெரும் பற்றுதல் வைப்பது ரஜோகுணத்தின் இயல்பு. ஆகையால் இம்மூன்றைக் கடைப்படிக்கும் உறுதி ராஜஸமானது. அது மனிதனை உலக பந்தத்திலேயே ஆழ்த்தி வைக்கிறது.

தாபஜுரத்தினால் பிதற்றுகிறவன் சமீபத்தில் குளிர்ந்த ஜலத்தையும் இனிமையான தின்பண்டங்களையும் வைத்திருந்தால் அவன் அத்தண்ணீரை அருந்தாமலும் தின்பண்டங்களை ருசிபார்க்காமலும் இருப்பானா? அதுபோல காமஜுரத்தினால் வாதைப்பட்டுச் சிற்றன்பங்களில் ஆசை வைத்த உலகப்பற்றுள்ளவன் ரூப லாவண்யங்களின் வனப்பினிடையும் செல்வத்தின் கவர்ச்சியின் மத்தியிலும் இருந்தால் அவனால் ஆசையை அடக்க முடியாது. அவன் பக்திமார்க்கத்தை விட்டுப் புறம்பே போவது நிச்சயம்.

35. யயா ஸ்வப்நம் பயம் ஸோகம் விஷாதம் மதமேவ
விமுஞ்சதி துர்மேதா த்ருதி: ஸா பார்த தாமஸீ 

யயா-எந்த (மன உறுதியினால்), ஸ்வப்நம் பயம் ஸோகம்-உறக்கத்தையும் அச்சத்தையும், துயரத்தையும், விஷாதம்-ஏக்கத்தையும், மதம்-செருக்கையும், விமுஞ்சதி-விடமுடியவில்லையோ, பார்த த்ருதி: ஸா தாமஸீ-பார்த்தா, அந்த உறுதி தமோ குணத்தைச் சார்ந்தது.

பொருள் : பார்த்தா, உறக்கத்தையும் அச்சத்தையும், துயரத்தையும் ஏக்கத்தையும், மதத்தையும் மாற்றத் திறமையில்லாத மூட உறுதி தமோ குணத்தைச் சார்ந்தது.

தமோகுணமும் அக்ஞான இருளும் ஒன்றோடொன்று சேர்ந்தவைகளாகின்றன. தூங்குகின்ற நிலை ஜட அவஸ்தைக்கு ஒப்பானது. கனவு காணும் இயல்பும் அதில் அடங்கியிருக்கிறது. பகற் கனவு காணும் தமோகுண முடையவனை உலகில் காணலாம். அத்தகையவன் விழித்திருந்து வியவகாரம் செய்வது தூக்கத்தில் சொப்பனம் காண்பது போன்று உறுதியற்றது. அவன் புரியும் செயல்கள் உலகுக்குப் பயன்படாதவைகளாகும்.

தமோகுண உறுதிக்குத் தக்க சான்று திருதராஷ்டிர மன்னன் ஆவான். அவன் பிறவியிலேயே குருடன். தெளிந்த அறிவும் நல்ல விவேகமும் இன்மைக்கு அவன் அந்தகனாயிருந்தது புறச் சின்னமாகும். துரியோதனன் முதலாயினோர் அவனுக்குப் புதல்வர்களாயிருந்ததும் பொருத்தமானது. ஏனென்றால் அக்ஞானத்தினின்றே கேடுகள் அனைத்தும் உதிக்கின்றன. குருட்டு அரசனுக்கு ராஜ்யத்தில் பெரும் பற்றுதல் இருந்தது. தன் புதல்வர்களின் கையைவிட்டு அது ஒருவேளை போய்விடுமோ என்ற அச்சம் அவன் உள்ளத்தில் அடிக்கடி உண்டாயிற்று. அவர்கள் புரிந்த அடாத செயல்களை அரசன் கேள்வியுற்றுத் துயரத்தை யடைந்தான். ஆனால் புதல்வர்கள் மீது அவன் தீவிரமான நடவடிக்கை ஒன்றும் எடுத்துக்கொள்ளவில்லை. தனது புகழுக்கே பங்கம் வந்துகொண்டிருந்ததைக் குறித்து அரசன் மனம் கலங்கினான். ஆனால் பீஷ்மர், துரோணர், கிருஷ்ணன் போன்றவர்களது புத்திமதியைக் கேட்க அவன் ஆயத்தமாயில்லை. எப்படியிருந்தாலும் தானே பேரரசன் என்ற செருக்கும் அவனுடைய உள்ளத்தில் நிறைந்திருந்தது. விவேகமில்லாத அவ்வேந்தன் விடாது பிடித்த திருதியானது தமோகுணத்தினின்று உதித்ததாம்.

திருதராஷ்டிரன் போன்ற மக்கள் பலரை இன்று நாம் சமூகத்தில் காணலாம். முன்னோர்கள் தேடி வைத்த செல்வம் அவர்களுக்குச் சொந்தமானதாயிருக்கிறது. ஆனால் நல்லறிவும் முயற்சியும் அவர்களிடத்து இல்லை. அந்த அளவில் அவர்கள் குருடரேயாவர். உண்பதும் உறங்குவதுமே அவர்களுக்கு முக்கியமான தொழில்களாகும். செல்வத்தை முறையாகக் காக்கவும் வளர்க்கவும் அவர்களுக்குத் தெரியாது. எனவே அது கைவிட்டுப் போய்விடுமோ என்ற அச்சம் உள்ளத்தை உறுத்திக்கொண்டிருக்கும். செல்வத்தில் சில பகுதி விரயமான பிறகே அவர்களுக்கு விஷயம் விளங்குகிறது. பின்பு அதைக் குறித்து அவர்கள் துன்பத்தில் அழுந்துவார்கள். மனக்கலக்கத்துக்கு இங்கு மூலத்தில் விஷாதம் என்னும் சொல் அமைந்திருக்கிறது. கீதையின் முதல் அத்தியாயத்தின் தலைப்பு அர்ஜுன விஷாதம் என்பதாம். அதாவது தற்காலிகமாக அவனுக்கு மனம் கலங்கிற்று. தமோகுணத்தில் உதித்த உறுதியுடையவருக்கோ ஓயாத மனக்கலக்கமாம். ஏனென்றால் அவர்களுடைய வாழ்வு துர்மேதை என்னும் சேற்றில் கட்டிய வீடு போன்றது. ஓயாது அது இடிந்துவிழுந்துகொண்டே இருக்கும். இத்தனைவிதக் கேடுகளுக்கிடையில் தங்களைக் குறித்துப் பெருமை பாராட்டும் செருக்கு அவர்களை விட்டு அகலுவதில்லை. இது தமோகுணத்தினின்று உதித்த உறுதியாம்

36. ஸுகம் த்விதாநீம் த்ரிவிதம் ஸ்ருணு மே பரதர்ஷப
அப்யாஸாத்ரமதே யத்ர து:காந்தம் நிகச்சதி 

பரதர்ஷப-பாரதக் காளையே! இதாநீம் த்ரிவிதம் ஸுகம்-இப்போது மூன்று விதமாகிய இன்பங்களை, மே ஸ்ருணு-என்னிடமிருந்து கேள், யத்ர அப்யாஸாத் ரமதே-எதனிலே ஒருவன் பயிலப் பயில உவகை மிகுதியுறப் பெறுவானோ, து:காந்தம் நிகச்சதி-எதனில் துக்க நாச மெய்துவானோ.

பொருள் : பாரதக் காளையே! இப்போது மூன்று விதமாகிய இன்பங்களைச் சொல்லுகிறேன், கேள். எதனிலே ஒருவன் பயிலப் பயில உவகை மிகுதியுறப் பெறுவானோ, எதனில் துக்க நாச மெய்துவானோ,

உயிர் வாழ்க்கைக்கு உற்சாகம் தருவது சுகப்பிராப்தி. சுகம் வேண்டாத உயிர் எவ்வுலகிலும் இல்லை. அதன் பொருட்டு ஜீவர்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சிக்கு ஓரளவில்லை. ஆயினும் அதை அடைதலில் தார தம்மியமுண்டு. மின்னல்போன்று சிலருக்கு அது தோன்றுகிறது. இதோ, சுகம் கிட்டிவிட்டது என்று உணருதற்கு முன்பு அது மாயமாய் மறைந்து போகிறது. மீண்டுமொரு நீண்ட முயற்சி. இங்ஙனம் பெருமுயற்சிக்கிடையில் இன்பப்பேறு மின்னல் போன்று இடையீடு உடையதாகிறது. இன்னும் சிலர்க்கு அது ஓட்டைப் பாத்திரத்தில் கொட்டும் ஜலம் போன்று வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருக்கிறது. அது எங்கிருந்து வருகிறது என்பது அவர்களுக்கு விளங்குவதில்லை. பிறகு எங்கே போய் மறைகிறது. ஏன் போகிறது என்பதும் பிடிபடுவதில்லை. பூரணகும்பம் போன்று ஒரு நாளைக்கு இன்பம் நிறைநிலையடையும் என்று நம்பியிருக்கின்றனர். அந்த நம்பிக்கையே வாழ்க்கைக்குத் தூண்டுகோலாகிறது. ஏதோ ஒரு சிலர்க்கு வளர்பிறை போன்று சுகம் ஓங்குகிறது. அது இடர்ப்படுவதில்லை. இன்பம் துய்ப்பதில் வாய்க்கும் இத்தகைய ஏற்றத் தாழ்வுக்குக் காரணம் ஏதாவது உண்டா என்று ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

அப்பியாசம் அல்லது பயிற்சியானது வாழ்க்கையை வேண்டியவாறு மாற்றியமைக்க வல்லது. உடலுக்கு ஏற்ற பயிற்சி யுண்டு. அதே பாங்கில் உள்ளத்துக்கு ஏற்ற பயிற்சிகளும் உண்டு. ஜன்மாந்தரத்தின் வாசனைகள் என்று சொல்லுவது எல்லாம் பயிற்சியினின்று வந்தவைகள். பயிற்சியை மாற்றினால் வாசனையை மாற்றலாம். அப்பியாசத்தின் மூலம் சுபாவத்தையே மாற்றியமைக்கலாம். விலங்கினிடத்து ஒழுங்குப்பாட்டை உண்டு பண்ணுதற்கும் பயிற்சி பயன்படுகிறது. அதை ஒரு நாள் அல்லது இரண்டு நாளைக்குக் கையாளுவது போதாது. இடையறாப் பழக்கமாக அது வடிவெடுக்க வேண்டும். துன்பத்தைத் தவிர்ப்பதற்கும் இன்பத்தைப் பெறுதற்கும் அப்பியாசம் சிறந்ததொரு உபாயமாகிறது.

37. யத்ததக்ரே விஷமிவ பரிணாமேம்ருதோபமம்
தத்ஸுகம் ஸாத்த்விகம் ப்ரோக்தமாத்மபுத்திப்ரஸாதஜம் 

யத் அக்ரே விஷம் இவ-எது தொடக்கத்தில் விஷத்தை ஒத்ததாய், தத் பரிணாமே அம்ருதோபமம்-அது விளைவில் அமிர்தத்துக்கு ஒப்பாக மாறுகிறதோ, தத் ஸுகம் ஸாத்த்விகம் ப்ரோக்தம்-அந்த இன்பமே சாத்விகம் எனக் கூறப் படுகிறது, தத் ஆத்ம புத்தி ப்ரஸாதஜம்-அது தன் (பரமாத்மாவைப் பற்றிய தெளிந்த) அறிவில் பிறப்பது.

பொருள் : எது தொடக்கத்தில் விஷத்தை யொத்ததாய், விளைவில் அமிர்தமொப்ப மாறுவதோ, அந்த இன்பமே சாத்விகமாகும்; அஃது தன் மதியின் விளக்கத்திலே பிறப்பது.

வைராக்கியமும் தியானமும் கூடிய பாரமார்த்திக வாழ்க்கை துவக்கத்தில் துன்பம் நிறைந்ததாகத் தென்படுகிறது. பிறகு மனத்தெளிவினின்று விளையும் சித் சுகோதயம் ஒப்பு உயர்வு அற்றது. அது ஒன்றே பிறவிப் பெரும்பயன் என்பது அப்பொழுது விளங்குகிறது.

பாரமார்த்திக வாழ்வினின்று வரும் பேரின்பம் சாதாரண சாதகர்களுக்குப் பிடிபடாது போகலாம். ஆனால் நல்லொழுக்கத்தின் பயனை எல்லாரும் எளிதில் காணலாம். விஷயங்களில் விரைந்து செல்லும் இந்திரியங்களைத் தடுத்து ஆளுதல் ஆரம்பத்தில் கஷ்டமாயிருக்கும். அதில் வெற்றிபெற்றான பிறகு வரும் நிலைத்த இன்பமானது நிலையற்ற விஷய சுகத்தைவிட மேலானது என்பது விளங்கும். யோகிகளுடைய வாழ்க்கையையும் போகிகளுடைய வாழ்க்கையையும் சீர்தூக்கிப் பார்த்தாலும் இவ்வுண்மை விளங்கும்.

முற்காலத்தில், ஜயபுரியிலிருக்கும் கோவிந்தஜீயின் கோவிலிலிருந்த அர்ச்சகர்கள் கல்யாணம் பண்ணிக்கொள்வதில்லை ஆகவே அவர்கள் ஆத்ம சக்தியால் வெகு பலம் படைத்தவர்களாக இருந்தனர். ஒரு சமயம் அவ்வூர் அரசன் அவர்களைத் தன்னிடம் வரும் படி சொல்லியனுப்பினான். அவர்கள் போகாமல், அரசனைத்தான் எங்களிடம் வரச் சொல்லுங்கள், என்று பதில் அனுப்பினர். அப்பால், அவர்கள் கல்யாணம் பண்ணிக் கொண்டனர். அதன்பின் அர்ச்சகர்களை அரண்மனைக்கு வரவழைக்க வேண்டிய அவசியம் அரசனுக்கு இல்லாது போயிற்று. ஏனெனில், அவர்கள் தாமாகவே அரசனிடம் வந்து, மகராஜ்! நாங்கள் ஆசீர்வாதம் செய்ய வந்திருக்கிறோம். சுவாமிக்குச் சாத்திய புஷ்பங்களைக் கொணர்ந்திருக்கிறோம். அங்கீகரிக்கவேண்டும், என்று சொல்ல ஆரம்பித்தனர். அவர்களுக்கு அப்படிப்பட்ட அவசியம் நேர்ந்துவிட்டது பாவம்! அவர்கள் வேறு என்னதான் செய்வார்கள்! ஒரு நாளைக்கு வீடுகட்டவேண்டியிருந்தது. இன்னொரு நாள் குழந்தைக்கு அன்னப்பிராசனம் செய்யவேண்டியிருந்தது. வேறொரு நாள் பெண்ணுக்குக் கல்யாணம் பண்ணவேண்டியிருந்தது. இப்படியாக அவர்களுக்கு இடைவிடாத பணமுட்டுப்பாடு உண்டாயிற்று. அதனால் ராஜசபைக்குப் போகவேண்டிய அவசியம் நேர்ந்தது.

பிறர்க்கு அடிமையாக வேலை செய்வதன் பயனை நீங்களே நன்கு உணர்வீர்கள். ஆங்கிலமும் மேனாட்டுப் பயிற்சியும் பெற்ற வாலிபர்களில் அநேகர் பிறர்க்கு அடிமைவேலை செய்து தங்கள் எஜமானர்கள் கொடுக்கும் உதைகளை வாய்பேசாது பெற்று அனுபவிக்கின்றார்கள். ஏன் அவ்வளவு அவமதிப்புக்கெல்லாம் அவர்கள் உட்பட்டிருக்கின்றார்கள் என்பது தெரியுமா? அவைகளுக்கெல்லாம் அடிப்படையாக இருப்பது பொதுப்பட பெண்ணாசையே யாகும்.

இந்திரிய நிக்கிரகம் அல்லது புலனடக்கம் பழகுதல் ஒன்றே வளர்பிறை போன்று சுகத்தை வளர்ப்பதற்கு உற்ற உபாயம். அம்மனிதன் எவ்வுலகில் எதற்கும் அடிமைப்படான். உலப்பில்லா ஆனந்தம் அவன் பெறும் பேறு ஆகும்.

38. விஷயேந்த்ரிய ஸம்யோகாத் யத் ததக்ரேம்ருதோபமம்
பரிணாமே விஷமிவ தத்ஸுகம் ராஜஸம் ஸ்ம்ருதம் 

யத் விஷயேந்த்ரிய ஸம்யோகாத்-எது விஷயங்களிலே புலன்களைப் பொருத்துவதனால், அக்ரே அம்ருதோபமம்-தொடக்கத்தில் அமுதைப் போலிருந்து, பரிணாமே விஷமிவ - விளைவில் நஞ்சு போன்றதாய் முடியுமோ, தத்ஸுகம் ராஜஸம் ஸ்ம்ருதம்-அந்த இன்பம் ராஜசம் எனப்படும்.

பொருள் : விஷயங்களிலே புலன்களைப் பொருத்துவதனால் தொடக்கத்தில் அமுதைப் போலிருந்து விளைவில் நஞ்சு போன்றதாய் முடியும் இன்பம் ராஜசமெனப்படும்.

இந்திரியங்களைக் கொண்டு இந்திரியார்த்தங்களை அணைந்து பெறும் இன்பம் நஞ்சு ஆகிறது. அதனால் பலம் குறைகிறது. வீரியத்துக்கு விரயம் உண்டாகிறது. அதாவது ஆண்மையோடு செயலாற்ற இயலாது. ரூபம் அல்லது சுந்தர வடிவம் குலைகிறது. வயோதிகம் விரைவில் வருகிறது. நிறம் மங்குகிறது. இயல்பாக மேதாவியாக வேண்டியவன் விஷய சுகத்தால் புல்லறிவாளனாகித் தாழ்வுறுகிறான். இறைவனைப்பற்றிய ஞாபகசக்தி ஒழிந்து போகிறது. செல்வமும் கையைவிட்டுச் சென்று அழிகிறது. ஊக்கத்தோடு வினையாற்றும் வல்லமை வருவதில்லை. அதர்மமே மேலும் மேலும் தலையெடுக்கிறது. அதனால் வாழ்க்கையே நரகவேதனையாய்க் கழிகிறது. ஓட்டைப் பாத்திரத்தில் வார்க்கும் ஜலம் போன்று இன்பம் தோன்றவும் மறையவும் செய்கிறது.

வாழ்வு என்னும் பாற்கடலைத் தேவர்களும் அசுரர்களும் கடைந்தார்கள். முதலில் அவர்கள் பெற்ற உலக விஷயங்களாகிய செல்வம், கல்வி, வண்டி, வாகனம், ஆபரணம் முதலியன அமிர்தம் போன்று இன்பம் கொடுத்தன. ஒவ்வொரு செயலுக்கும் எதிர்ச் செயல் என்பது உண்டு. யாரும் அதைத் தடுக்க முடியாது. வாழ்வு என்பதற்கு எதிர்ச் செயல் மரணம். அது விஷத்துக்கு ஒப்பானது. வாழ்வில் விருப்பங்கொண்டிருந்த தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பின்பு மரணம் என்னும் விஷம் வந்தது. அதை ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு விருப்பம் வரவில்லை. எனவே அவர்கள் மிக வருந்தினார்கள். எங்கெங்கேயோ ஓடினார்கள்; என்னென்னவோ செய்து பார்த்தார்கள். ஒன்றும் பயன்படவில்லை. முன்பு பெற்ற சுகவாழ்வே இப்பொழுது துன்பம் நிறைந்ததாகத் தென்பட்டது. புலனடக்கமே வடிவெடுத்துள்ள துறவி வேந்தனாகிய சங்கர மகாதேவனிடம் ஓடினார்கள். மரணத்தை வென்றவனாகிய அப்பரம புருஷன் தன்னை வந்தடைந்த உயிர்களை மரணத்தினின்று காப்பாற்றினான். ரஜோகுண சுகத்தைத் தவிர்த்து சத்வகுண சுகத்துக்குப் போகவேண்டும். இறுதியாக குணாதீதத்திலுள்ள சுகத்தைப் பெறவேண்டும்.

39. யதக்ரே சாநுபந்தே ஸுகம் மோஹநமாத்மந:
நித்ராலஸ்யப்ரமாதோத்தம் தத்தாமஸமுதாஹ்ருதம் 

யத் ஸுகம் அக்ரே அநுபந்தே -எந்த சுகம் தொடக்கத்திலும் இறுதியிலும், ஆத்மந: மோஹநம்-ஆத்மாவுக்கு மயக்கம் விளைவிப்பதாய், நித்ரா ஆலஸ்ய ப்ரமாத: உத்தம் - உறக்கத்தினின்றும் சோம்பலினின்றும் தவறுதலின்றும் பிறக்கும், தத் தாமஸம் உதாஹ்ருதம்-அது தாமசமென்று கருதப்படும்,

பொருள் : தொடக்கத்திலும் இறுதியிலும் ஒருங்கே ஆத்மாவுக்கு மயக்கம் விளைவிப்பதாய், உறக்கத்தினின்றும் சோம்பலினின்றும் தவறுதலின்றும் பிறக்கும் இன்பம் தாமசமென்று கருதப்படும்.

ஏதேனும் ஒருவிதத்தில் தனக்கு இன்பம்கிடைத்தால் போதுமென்று அறிவிலி ஆர்வத்தோடு அதை நாடுகிறான். சுகத்தை அவன் அனுபவிக்க ஆரம்பிக்கும் பொழுதே அது மயக்கத்தைக் கொடுத்துத் துன்பமாக மாறியமைகிறது. கள் குடித்தல் அல்லது மதுபானத்தை அதற்குச் சான்றாக எடுத்துக்கொள்ளலாம். அதன் வெறியில் விவேகம் போய்விடுகிறது. மற்றவர் ஏளனம் செய்வது குடிகாரனுக்குப் புலப்படுவதில்லை. மிகைபட்ட துக்கத்தை அது உண்டுபண்ணுகிறது. வெறி அடங்கியதும் தளர்வுற்ற மனதும் வலிவற்ற உடலும் மேலும் துன்பத்தை விளைவிக்கின்றன. அவன் சோம்பலே வடிவெடுத்தவன் ஆகிறான். இங்ஙனம் துவக்கத்திலும் இடைவேளையிலும் இறுதியிலும் தமோகுணப் பிரவிருத்தி துன்பத்தையே வளர்க்கிறது. மின்னல் போன்று இடையிடையே இன்பம் தோன்றி உடனுக்குடனே மறைந்தது தான் மிச்சம்.

ஒட்டகம் முட்செடியைப் பெருவிருப்பத்தோடு தின்கிறது. முள்தைத்து அதன் உதடெல்லாம் ரத்தம் சொட்டினலும் அது முள்ளைத் தின்பதை நிறுத்துவதில்லை. விஷய சுகத்தை நாடுபவர் போக்கு அத்தகையது.

40. ததஸ்தி ப்ருதிவ்யாம் வா திவி தேவேஷு வா புந:
ஸத்த்வம் ப்ரக்ருதிஜைர்முக்தம் யதேபி: ஸ்யாத்த்ரிபிர்குணை

ப்ரக்ருதிஜை:-இயற்கையில் தோன்றும், ஏபி: த்ரிபி: குணை:-இம்மூன்று குணங்களினின்றும், முக்தம்-விடுபட்ட, யத் ஸத்த்வம் ஸ்யாத்-எந்த உயிர் இருக்குமோ, தத் ப்ருதிவ்யாம் வா-அது மண்ணுலகத்திலோ, திவி தேவேஷு வா-வானுலகத்தில் தேவருள்ளேயொ, புந: அஸ்தி-வேறு இடங்களிலோ இல்லை.

பொருள் : இயற்கையில் தோன்றும் இம்மூன்று குணங்களினின்றும் விடுபட்ட உயிர் மண்ணுலகத்திலுமில்லை; வானுலகத்தில் தேவருள்ளேயுமில்லை.

புல்முதல் பிரம்மா ஈறாக எல்லா உயிர்களும் முக்குண மயமான பிரகிருதியில் கட்டுண்ட ஆத்மாக்களாவார்கள். அவர்கள் மக்களாக இருந்தாலும் சரி, தேவர்களாக இருந்தாலும் சரி, முக்குணங்களைக் கடக்கும் வரையில் அவர்கள் எல்லாரும் பத்தாத்மாக்களேயாம். அதாவது பிறப்பும் இறப்பும் அவர்களுக்கு மாறி மாறி வந்துகொண்டிருக்கின்றன. குணபேதத்துக்கு ஏற்ப அந்த ஜீவர்களின் பிறப்பு மேலானதாகவோ கீழானதாகவோ அமைவதும் இயல்பு. ஜீவர்கள் எல்லாரிலும் மிகப்பெரியவர் பிரம்மா. அவர் அடைந்திருப்பது ஒரு பதவியேயொழிய முக்தியல்ல. அதாவது முக்குணங்களில் அவரும் சம்பந்தப்பட்டிருக்கிறார். முக்குணங்களைக் கொண்டல்லாது படைப்புத் தொழில் நிகழாது. பிரகிருதி லயம் என்பது அவர் பெற்றுள்ள ஒரு பெரிய பதவியாகும். ஆனால் மற்ற ஜீவர்களுக்கு இருப்பது போன்று பிரம்மாவுக்கு மேலும் பிறப்பு இல்லை. ஒரு கல்பத்தின் முடிவில் பிரம்மாவானவர் கிரமமுக்தியடைகிறார். அப்பொழுது அவர் முக்குணங்களைக் கடந்தவர் ஆகிறார்.

ஒருவன் தாழ்ந்த சுபாவத்தோடு நெடுங்காலம் போராடியும் ஆத்ம ஞானத்தின் பொருட்டு இடைவிடாது உழைத்தும் ஸமாதி நிலையை அடையும் போது அகங்காரம் அடியோடு அகலும். ஆனால் ஸமாதி நிலையை அடைவது மிகவும் கஷ்டம். முக்குணத்தில் பிறந்த அகங்காரமானது எளிதில் நீங்குவதில்லை. அதனால்தான் நாம் இவ்வுலகில் மறுபடியும் பிறந்து துன்பத்தை அனுபவிக்கிறோம்.

இனி, மோக்ஷத்துக்கு ஏதுவான மார்க்கங்கள் விளக்கப்படுகின்றன :

41. ப்ராஹ்மணக்ஷத்ரியவிஸாம் ஸூத்ராணாம் பரந்தப
கர்மாணி ப்ரவிபக்தாநி ஸ்வபாவப்ரபவைர்குணை

பரந்தப-எதிரிகளை வாட்டுபவனே, ப்ராஹ்மண க்ஷத்ரியவிஸாம் ஸூத்ராணாம் -பிராம்மணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் இவர்களுடைய, கர்மாணி-தொழில்கள், ஸ்வபாவப்ரபவை: குணை:-அவரவரின் இயல்பில் விளையும் குணங்களின்படி, ப்ரவிபக்தாநி-வகுப்புற்றனவாம்.

பொருள் : பரந்தபா! பிராம்மணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் இவர்களுடைய தொழில்கள் அவரவரின் இயல்பில் விளையும் குணங்களின்படி வகுப்புற்றனவாம்.

ஸ்வபாவம் என்பது ஈசுவரனுடைய பிரகிருதி அல்லது மாயை. அது முக்குணமயமாயுள்ளது. குணத்துக்குத் தகுந்தபடி கர்மம் வேறுபடுகிறது. கர்மத்தினின்று பெறுகிற சம்ஸ்காரத்துக்கு ஏற்ப சுபாவம் மாறுகிறது. அதாவது கர்மமும் சுபாவமும் இணைபிரியாதவைகள். சுபாவம் எப்படியோ அப்படி வருணம் மாறுகிறது. ஆக, ஒரு மனிதன் எந்த வர்ணத்தைச் சேர்ந்தவன் என்பதை அவனுடைய சுபாவத்தினின்றும் கர்மத்தினின்றும் தெரிந்து கொள்ளலாம். சுபாவமோ மிக சூக்ஷ்மமானது. எளிதில் அதைத் தெரிந்துகொள்ள முடியாது. ஞானிகளுக்கு மட்டும் அது கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்துள்ள வஸ்துபோன்று நன்கு விளங்கும். பின்பு, கர்மமோ ஸ்தூலமானது. ஒருவன் செய்கிற கர்மத்திலிருந்து அவனுடைய வருணத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

வர்ணபேதத்தை பகவான் சிருஷ்டிக்கலாமா, உயர்வு தாழ்வை அவர் உண்டுபண்ணலாமா என்ற கேள்விகள் பிறப்பதுண்டு. இந்தியாவில் வர்ணபேதமும், மேலோன் கீழோன் என்ற வேற்றுமையும் இருக்கும் வரையில் அந்நாடு சிறந்த நாடு ஆகாது என்று கருதுவாரும் உளர்.

சிருஷ்டி என்பதன் பொருளே பேதத்தை உண்டுபண்ணுவது என்பதாகும். எல்லாம் ஒரே இயல்பை யடைவதும் சம்ஹாரம் ஆவதும் ஒன்று. ஆக, பேதம் இருந்தாகவேண்டும். உடலில் அவயவ பேதம் உண்டு. வயதில் குழந்தை, யுவன், விருத்தன் என்ற பேதம் உண்டு. பாலில் ஆண்பால் பெண்பால் என்ற பேதம் உண்டு. மனபரிபாகத்திலும் புரிகின்ற செயலிலும் உள்ள பேதம் வர்ணபேதம் என்று சொல்லப்படுகிறது. இது சிருஷ்டி முழுதிலும் அமைந்திருக்கிறது. அப்படி அமைக்காது சிருஷ்டி செய்யவும் முடியாது. வர்ணபேதம் இயற்கையின் அமைப்பு. அது இந்தியாவில் பாங்கை உள்ளபடி அறிந்துகொள்ளவில்லை. ஆக, வர்ணபேதத்தை அங்கீகரிப்பதைத் தவிர மனிதன் வேறு ஒன்றும் செய்யமுடியாது.

உலகில் எங்கும் வர்ணபேதம் இருக்கிறது. ஆனால் மேல் நிலைக்கு வந்திருப்பவன் கீழ் நிலையில் இருப்பவனை அலட்சியப்படுத்தலாகாது. அப்படி அலட்சியப்படுத்தும் சமூகம் விரைவில் கீழ்நிலைக்கு வந்து சேரும். இக்கோட்பாடு எல்லா சமூகங்களுக்கும் பொதுவானது.

வருணத்துக்குரிய கர்மத்தின் பிரிவினை வருமாறு :

42. ஸமோ தமஸ்தப: ஸௌசம் க்ஷõந்திரார்ஜவமேவ
ஜ்ஞாநம் விஜ்ஞாநமாஸ்திக்யம் ப்ரஹ்மகர்ம ஸ்வபாவஜம் 

ஸமோ தம: தப:-மன அடக்கமும், புலனடக்கமும், தவமும், ஸௌசம்-தூய்மை, க்ஷõந்தி-பொறுமை, ஆர்ஜவம்-நேர்மை, ஆஸ்திக்யம்-ஆத்திகம், ஜ்ஞாநம் விஜ்ஞாநம் ஏவ - ஞானம், அனுபவம் மூலம் உணர்தலும், ஸ்வபாவஜம் ப்ரஹ்ம கர்ம-இயல்பிலே தோன்றும் பிராம்மண கர்மங்களாகும்.

பொருள் : அகக் கரணத்தை யடக்குதல், புறக் கரணத்தை யடக்குதல், தவம், தூய்மை, பொறுமை, நேர்மை, ஞானம், கல்வி, ஆத்திகம் இவை இயல்பிலே தோன்றும் பிராம்மண கர்மங்களாகும்.

ஒருவன் பிறந்த குடியை முன்னிட்டு ஒருவனை பிராம்மணன் என்கிறது லௌகிகம். மனபரிபாகத்தையும் வாழ்க்கை முறையையும் பார்த்து ஒருவனை பிராம்மணனென்கிறது வேதாந்தம். எந்த சமூகத்தில் எந்தக் குடியில் எக்காலத்தில் வேண்டுமானாலும் பிராம்மணன் தோன்றலாம். ஏனென்றால் பிறப்பு உரிமையில் பொருள் ஒன்றுமேயில்லை. மனபரிபாகமே முக்கியமானது. வேதாந்தம் விளக்குகிறபடி பிராம்மண இயல்பை அடையப் பெற்றவர்களை உலகில் காண்பது அரிது. ஆனால் அந்நிலையை அடைய மனிதன் முயலவேண்டும்.

கட்டுப்பாடான வாழ்க்கையே வடிவெடுத்தவன் அந்தணன். மனவடக்கமும் பொறிகளின் அடக்கமும் இயல்பாக அவனிடத்து அமைந்திருக்கின்றன. பரத்தை நாடித் தவம் புரிதல் ஒன்றே அவன் தொழில். தவத்தால் அவனது மனம் மொழி மெய் ஆகிய திரிகரணங்களும் தூய்மையடைகின்றன. புறவுலகினின்று அவனுக்கு ஏற்படும் இடுக்கண்களிடத்து பிராம்மணன் பொறுமையே வடிவெடுத்தவனாகிறான். துன்புறுத்துவார் யாரையும் அவன் நொந்துகொள்வான். தனது சிந்தையிலும் சொல்லிலும் செயலிலும் அவன் நேர்மையே வடிவெடுத்தவனாகிறான். சாஸ்திர ஞானத்துக்கும் சுவானுபவ ஞானத்துக்கும் அவன் களஞ்சியமாகிறான். சாஸ்திரத்தின் உட்கருத்தையும் பிரபஞ்சத்தில் உயிர் வாழ்க்கையின் தத்துவத்தையும் அவனே உள்ளபடி அறிய வல்லவனாகிறான். ஆஸ்திக்யம் அல்லது ஈசுவர நம்பிக்கையென்பது கடவுளைச் சார்ந்திருப்பது கடவுளுக்கென்றே உயிர் வாழ்தலாம். அந்தணன் அருளுக்கே உரியவன் ஆகிறான். பொருளை அவன் ஒருபொழுதும் தேடான். எளிய வாழ்க்கையே வடிவெடுத்தவன் அவன். உடலை அலங்கரிப்பது அந்தணன் செயலன்று. எல்லா உயிர்களிடத்தும் அவன் அருளைச் சொரிந்து செந்தண்மை பூண்டொழுகுகிறான். ஸ்ரீராமகிருஷ்ணரது ஜீவிதம் அந்தணன் ஒருவனுடைய பாரமார்த்திக வாழ்க்கைக்கு நல்ல எடுத்துக்காட்டாகும். இத்தகைய வாழ்வுடையவனே பிராம்மணன். இங்ஙனம் பண்பாடு அடைந்துள்ள பிராம்மணன் தொகை அதிகரிக்கின்றவளவு உலகத்துக்கு ÷க்ஷமம் உண்டாகிறது.

43. ஸௌர்யம் தேஜோ த்ருதிர்தாக்ஷ்யம் யுத்தே சாப்யபலாயநம்
தாநமீஸ்வரபாவஸ்ச க்ஷõத்ரம் கர்ம ஸ்வபாவஜம் 

ஸௌர்யம்-சூரத் தன்மை, தேஜ:-ஒளி, த்ருதி:-உறுதி, தாக்ஷ்யம் -திறமை, யுத்தே அபி அபலாயநம்-போரில் புறங்காட்டாமை, தாநம் ஈஸ்வரபாவ: -ஈகை, இறைமை (ஆளும் தன்மை), ஸ்வபாவஜம் க்ஷõத்ரம் கர்ம-இயற்கையிலே தோன்றும் க்ஷத்திரிய கர்மங்களாகும்.

பொருள் : சூரத் தன்மை, ஒளி, உறுதி, திறமை, போரில் புறங்காட்டாமை, ஈகை, இறைமைஇவை இயற்கையிலே தோன்றும் க்ஷத்திரிய கர்மங்களாகும்.

அறம் அல்லது தர்மமே வடிவெடுத்திருப்பவன் க்ஷத்திரியன் ஆகிறான். சமூகத்தினுடைய இகலோக வாழ்க்கையை ஒழுங்குபடுத்துதல் அவனது வாழ்க்கைக் கடமையாகும். க்ஷத்திரியன் என்பதன் பொருள் உடலில் காயம் பட்டவன் என்பதாகிறது. நலத்தை நிலைநாட்டுதற்காக உடல் வாழ்க்கையை அவன் ஒப்படைத்திருக்கிறான். அப்பெரு முயற்சியின் விளைவாக உடல் அடிக்கடி புண்பட்டாலும் அல்லது சிதைக்கப்பட்டாலும் அதை அவன் பொருள்படுத்தான். பீஷ்மர் வதைக்கப்பட்டது போன்று க்ஷத்திரியன் ஒருவனுடைய தேகம் வதைக்கப்படுமானால், அதற்கிடையில் அவர் படைத்திருந்த உயர்ந்த மனப்பான்மையை அவன் கொண்டிருப்பானானால் அவ்வரசன் நன்கு வாழ்ந்தவன் ஆவான். இனி, எல்லாரும் அரசன் ஆகமுடியுமா என்ற கேள்வி எழலாம். நாடு ஆளும் முறையில் எல்லாரும் அரசர் ஆகவேண்டியதில்லை. சமூகத்தில் மேலாம் பொறுப்பை நிறைவேற்றும் பாங்கில் பலபேர் அரசர் ஆகலாம்.

கேடும், கேடுடைய மனிதனும் ஒன்றே. நல்லான் ஒருவன் கேடுடைய மனிதனை யாண்டும் எதிர்க்கக் கடமைப்பட்டிருக்கிறான். பயிர்களுக்கிடையில் உள்ள களைகளைக் களையக் கிருஷிகன் கடமைப்பட்டிருப்பது போன்று சமூகத்தில் அறம் பிறழ்பவர்களை அடக்கவும், ஒடுக்கவும், வெல்லவும், ஒழிக்கவும் அறவாளன் கடமைப்பட்டிருக்கிறான்.

எதிரிக்கு அஞ்சாது வீரத்தோடு பாய்ந்து தாக்கவல்லவன் சூரத்தன்மை யுடையவனாகிறான். அச்சத்தை அறியாத மனநிலை தேஜஸ் அல்லது துணிவெனப்படுகிறது. எவ்வளவு ஏராளமாக உழைத்தாலும் களைப்பை அறியாத மனநிலை திருதி அல்லது உறுதி எனப்படுகிறது. காலதேச வர்த்தமானம் அறிந்து எதிரியை வல்லமையோடு தாக்கக் கூடிய நிலைக்குச் சாதுரியம் என்று பெயர். திடீரென்று எதிரி வந்து தாக்குவானாகிலும் மனம் தளராது நொடிப் பொழுதில் தூக்கி வினைசெய்வது சாதுரியமாகிறது. சில வேளைகளில் பின்னோக்கிச் சென்று எதிரியைப் பின்பு வளைத்து அடிப்பதும் சாதுரியமாம். ஆனால் பகைவனுக்குப் பயந்து போர்க்களத்தினின்று புறங்காட்டி யோடிப் பிழைக்க நினைப்பவன் க்ஷத்திரியனாகான். பகைவனுக்கு அடிமைப்படுவதைவிட வீரத்துடன் எதிர்த்து நின்று அடிபட்டுச் சாவது மேல். குடிகளை முறையாக ஓம்புதலே தானமென்று சொல்லப்படுகிறது. வள்ளலாக இருந்து அவர்களுக்கு அரசன் யாண்டும் பொருளை வழங்கவேண்டும். மக்கள் நேர் கோடாவண்ணம் அவர்களை ஆளுதல் இறைமையாகிறது. இதற்கு ஈச்வர பாவம் என்பது மூலம். தலைவனாயிருத்தல் என்றும் இச்சொல் பொருள்படும். இரண்டு அல்லது மூன்று பேர்களுடன் சேர்ந்து வாழும் பொழுதும் ஒன்றும் தலைவனாகத் திகழலாம். எப்பொழுதும் தலைவன் ஆவது தகைமையினாலேயாம். சுயநலம் கருதாது காரியத்தை நிர்வகிப்பவனும் அதை வெற்றிகரமாகக்கொண்டு சாதிப்பவனும் தலைவன் ஆகிறான். தாய் ஒருத்தி வீட்டுக்குத் தலைவியாகிறாள். ஏனென்றால் அன்புடன் பணிவிடை செய்யும் திறமையும், காரியங்களை நன்கு நிர்வகிக்கும் திறமையும் அவளிடத்து உண்டு. இறைமை வாய்க்கப்பெற்ற மக்கள் மேன்மக்கள் ஆகின்றனர். பகைவரிடத்து நடந்துகொள்ளுகிற முறையும் நாட்டு மக்களிடத்து நடந்துகொள்ளுகிற முறையும் சேர்ந்து ஈண்டு விளக்கப்பட்டுள்ளன. அந்தணனுடைய அருளையும் வைசியனுடைய பொருளையும் அரசன் இனிய முறையில் சேகரிக்கிறான். அவைகளுடன் தனது ஆண்மையை அவன் உவந்து கலக்கிறான். பின்பு, இவையாவும் அவன் உலக நன்மைக்கு எடுத்து வழங்குகிறான். பாரமார்த்திகத் துறையிலே விவேகானந்த சுவாமிகள் இச்செயலைச் செய்திருக்கிறார்; அவர் ஒரு ராஜரிஷி.

44. க்ருஷிகௌரக்ஷ்யவாணிஜ்யம் வைஸ்யகர்ம ஸ்வபாவஜம்
பரிசர்யாத்மகம் கர்ம ஸூத்ரஸ்யாபி ஸ்வபாவஜம் 

க்ருஷி கௌரக்ஷ்ய வாணிஜ்யம்-உழவு, பசுக்காத்தல், வணிகம், வைஸ்யகர்ம ஸ்வபாவஜம் - இவை இயற்கையிலே பிறக்கும் வைசியக் கர்மங்களாம், பரிசர்யாத்மகம் கர்ம-மக்கள் அனைவருக்கும் தொண்டு புரிதல், ஸூத்ரஸ்ய அபி-சூத்திரனுக்கு, ஸ்வபாவஜம்-அவனியற்கையாய் ஏற்பட்ட தொழில்.

பொருள் : உழவு, பசுக்காத்தல், வணிகம் இவை இயற்கையிலே பிறக்கும் வைசியக் கர்மங்களாம். தொண்டு புரிதல் சூத்திரனுக்கு அவனியற்கையாய் ஏற்பட்ட தொழில்.

பயிர்த்தொழில் புரிவது, ஆடுமாடுகளை வளர்த்தல், வியாபாரம் பண்ணுதல், தொழிற்சாலைகளை நிறுவுதல் ஆகிய இவையாவும் செல்வத்தை உண்டுபண்ணும் தொழில்களாம். சுதந்திர வாழ்க்கை வாழ்ந்து பணத்தைப் பெருக்குபவர்களெல்லாம் வைசியர்கள். இக்காலத்தில் புதியதாகத் தோன்றியுள்ள வக்கீல்களும் டாக்டர்களும் இடை அல்லது கடைத்தரமான வைசியர்கள். இவர்கள் சமூகத்துக்குச் செல்வத்தை உண்டுபண்ணுபவர்களல்லர்; செல்வத்தை ஏற்பவர்களாம். இகலோக வாழ்க்கைக்கு இன்றியமையாத தன தானியங்களை விருத்தி பண்ணுவதும், மூலப்பொருள்களைச் சேகரிப்பதும், அவைகளைப் பண்படுத்திப் பயன்படும் பொருள்களாக மாற்றியமைப்பதும், வாணிகத்தின் மூலம் பொருள்களை நாலா பக்கங்களிலும் பங்கிட்டுக் கொடுத்தலும் வைசிய தர்மமாகும். கஞ்சா, அபினி, மதுபானம் போன்றவை மக்களுடைய நல்வாழ்வைக் கெடுக்கின்றன. அத்தகைய பொருள்களை உண்டு பண்ணுவதும், அவைகளில் வர்த்தகம் பண்ணுவதும் வைசிய தர்மமாகாது.

பிறரிடத்து வேலைக்காரனாயிருந்து இட்டவேலையைச் செய்து சம்பளம் ஏற்று ஜீவிப்பவன் சூத்திரனாகிறான். இக்காலத்துக் குமாஸ்தாக்களெல்லாரும் சூத்திரர்களாம். நல்ல மனப்பான்மையுடன் ஆசிரிய வேலை செய்கிறவர்கள் பிராம்மண கர்மம் செய்கிறார்கள். அரசாங்கத்தில் முறையாக ஆட்சி முறையைச் செலுத்துபவர்கள் க்ஷத்திரிய கர்மம் இயற்றுகிறார்கள். அவர்கள் சம்பளம் ஏற்பதில் குறையில்லை. ஆனால் வயிற்றுப் பிழைப்புக்காகவென்று அத் தொழில்களை நாடுவார்களானால் அவர்கள் சூத்திரர்களாகிறார்கள். கைக்கூலி அல்லது லஞ்சமேற்கிற எல்லாரும் சூத்திர்களேயாம். உடல் வாழ்க்கை ஒன்றில் மட்டும் கருத்து வைத்திருப்பவன் சூத்திரன். அதற்கு மேல் மேலான சிந்தையும் செயலும் உடையவன் செய் தொழிலுக்கு ஏற்ப வைசியன், க்ஷத்திரியன் அல்லது பிராம்மணன் ஆகிறான்.

இந்த நான்கு வர்ணங்களும் மனபரிபாகத்தைப் பொறுத்தவைகள். உலகெங்கும் உள்ள ஜன சமூகங்களில் இவைகள் இயல்பாய் அமைந்திருப்பதைக் காணலாம். ஒரே குடும்பத்தில் பிறந்துள்ள நான்கு சகோதரர்க்கிடையில் ஒவ்வொருவனும் ஒவ்வொரு வர்ணத்தைச் சேர்ந்தவனாயிருக்கலாம். ஒரு சமுதாயத்தில் உள்ள மக்களுள் பெரும் பான்மையோர் ஏதேனும் ஒரு வர்ணத்தின் சுபாவத்தை உடைத்திருக்கலாம். பள்ளிக்கூடம் ஒன்றில் கீழ் வகுப்பும் மேல் வகுப்பும் இருப்பதுபோன்று சமுதாயத்தில் நான்கு வர்ணத்தாரும் இருக்கிறார்கள். மேல் வகுப்பில் இருப்பவனுக்குக் கீழ் வகுப்பின் படாமும் தெரியும். அங்ஙனம் நான்கு வர்ணங்களின் கர்மங்களையும் நன்கு செய்யத் தெரிந்தவன் அந்தணன். மூன்று வர்ணங்களின் கர்மங்களை நன்கு செய்யத் தெரிந்தவன் க்ஷத்திரியன். இங்ஙனம் வினையாற்றும் திறமை கீழே இறங்கி வருகிறது.

கர்மயோகத்துக்கு ஒப்பானது சூத்திரனுடைய தர்மம். ராஜயோகத்துக்கு ஒப்பாகிறது வைசியனுடைய தர்மம். ராஜயோகி தன் சொரூபத்தில் உள்ள சக்தியைச் சேகரிக்கிறான். வைசியன் புறவுலகில் சக்திக்குச் சின்னமாயிருக்கும் பொருளைச் சேகரிக்கிறான். பக்தியோகத்தின் வடிவினன் ஆகிறான் க்ஷத்திரியன். சமூகத்தினிடத்து அன்பு கொண்டிருந்தால்தான் அதனிடத்து நல் வாழ்க்கையை அவன் வழங்க முடியும். சமூகத்துக்குப் பெருங்கேடு செய்பவன் கொடுங்கோல் வேந்தன். ஞானயோகத்துக்கு எடுத்துக்காட்டாவான் பிராம்மணன். சிருஷ்டி முழுதையும் பிரம்ம சொரூபமாக அவன் காண்கிறான். நான்கு யோகமும் ஒரு மனிதனிடத்து ஒழுங்காக அமைந்திருந்தால் அவன் நிறைமனிதன் ஆகிறான். பின்பு நான்கு வர்ண தர்மங்களையும் ஒருங்கே ஆற்ற வல்லவனே நிறைமனிதன் ஆகிறான். நான்கு வர்ணங்களும் ஒரு சமூகத்தில் நன்கு அமைந்திருந்தால் அது தலை சிறந்த சமூகமாகும்.

நல்ல சமூகம் ஒன்றில் உள்ள பாடசாலைகளில் படிப்பைக் கட்டாயப்படுத்தி எல்லாச் சிறுவர்கள் சிறுமிகளுக்கும் நான்கு வர்ணங்களுக்குரிய பயிற்சிகளைக் கொடுத்து அவரவர் பாங்குக்கு ஏற்ப மேலே வரத் தூண்டுதல் செய்தால் இரண்டு மூன்று தலை முறைகளுக்குள் அந்தச் சமுதாயத்தைத் தலையாயதாக்கலாம்.

45. ஸ்வே ஸ்வே கர்மண்யபிரத: ஸம்ஸித்திம் லபதே நர:
ஸ்வகர்மநிரத: ஸித்திம் யதா விந்ததி தச்ச்ருணு 

ஸ்வே ஸ்வே கர்மணி-தனக்குத் தானே உரிய கர்மத்தில், அபிரத: நர:-மகிழ்ச்சியுறும் மனிதன்,
ஸம்ஸித்திம் லபதே-ஈடேற்றம் பெறுகிறான், ஸ்வகர்மநிரத:-தனக்குரிய தொழிலில் இன்புறுவோன், யதா ஸித்திம் விந்ததி-எங்ஙனம் சித்தியடைகிறான் என்று, தத் ஸ்ருணு-அதைக் கேள்.

பொருள் : தனக்குத் தானே உரிய கர்மத்தில் மகிழ்ச்சியுறும் மனிதன் ஈடேற்றம் பெறுகிறான். தனக்குரியதொழிலில் இன்புறுவோன் எங்ஙனம் சித்தியடைகிறானென்பது சொல்லுகிறேன் கேள்.

பயிற்சியால் எந்தக் கர்மத்துக்குத் தகுதியுடையவனாக மனிதன் தன்னைச் செய்துகொள்கிறானோ அது அவனுடைய ஸ்வகர்மமாகிறது. ஸ்வதர்மம் என்பதும் அதுவே. ஸ்வகர்மத்தை மகிழ்வுடனும் ஊக்கத்துடனும் செய்பவன் நல்ல ஆத்ம சாதகன் ஆகிறான். அர்ஜுனனுக்குத் தன் ஸ்வதர்மத்தில் வெறுப்பு ஏற்பட்டது சீரிய மனப்பான்மையின் விளைவு அன்று. தற்காலிகமாகத் தோன்றிய மனக் குழப்பமே அதற்குக் காரணமாயிற்று. பள்ளியில் படிக்கும் மாணாக்கன் ஒருவன் தனது வகுப்பிலும் பாடத்திலும் மகிழ்வு கொள்ளுதல் வேண்டும். தன் கர்மத்தில் களிப்புறுபவனே முன்னேற்றமடைகிறான். படிப்புப் பூர்த்தி யாவதற்குப் பள்ளிப் பிள்ளை மேல் வகுப்புக்குப் போவது அவசியம். மற்று, ஆத்ம சாதகன் பரிபக்குவம் அடைதற்கு ஸ்வகர்மத்தை மாற்றவேண்டிய அவசியமில்லை. தோட்டி வேலை செய்கிற ஒருவன் அவ்வேலையில் மகிழ்வுறுதல் வேண்டும். வேலையில் மேலானது என்பதும் கீழானது என்பதும் கிடையாது. மனத்தகத்து உள்ள மாசு ஆனது கர்மத்தில் மாசு படிந்திருப்பது போன்று காட்சி கொடுக்கிறது. எத்தொழிலைச் செய்தாலும் நல்ல மன நிலையுடன் அதைச் செய்தால் மனபரிபாகமடையலாம். அதன் விவரம் வருமாறு:

46. யத: ப்ரவ்ருத்திர்பூதாநாம் யேந ஸர்வமிதம் ததம்
ஸ்வகர்மணா தமப்யர்ச்ய ஸித்திம் விந்ததி மாநவ

யத: பூதாநாம் ப்ரவ்ருத்தி-எதிலிருந்து உயிர்கள் உண்டாயினவோ, யேந இதம் ஸர்வம் ததம் - எதனால் அனைத்தும் வியாபிக்கப் பட்டிருக்கிறதோ, தம்-அந்த பரமாத்மாவை, ஸ்வகர்மணா அப்யர்ச்ய-தனக்குரிய கர்மத்தால் பூஜை செய்யும், மாநவ: விந்ததி-மனிதன் ஈடேறுகிறான்.

பொருள் : உயிர்களுக்கெலாம் பிறப்பிடமாய், இவ்வையக மனைத்திலும் நிறைந்திருக்கும் கடவுளைத் தனக்குரிய கர்மத்தால் பூஜை செய்யும் மனிதன் ஈடேறுகிறான்.

இப்பிரபஞ்சத்தை முறையாக இயக்குவது ஈசனுடைய செயல். இதில் பயன்படாத உயிர் என்பது ஒன்றுமில்லை. ஒவ்வொரு ஜீவனும் அவனவன் தொழிலை முறையாகச் செய்தவன் மூலம் பிரகிருதியின் நடைமுறைக்கு நன்கு துணைபுரிகிறான். ஆகையால் அறிவுடைய மனிதன் தான் எக் கர்மத்தை நன்கு செய்ய முடியுமோ அதை ஈசுவர ஆராதனையாகச் செய்யவேண்டும். அதன் மூலம் அவன் மனபரிபாகம் அடைகிறான். ஞானத்தைப் பெறுதற்கும் ஈசுவரனை அடைதற்கும் அக்கர்மம் சாதனமாகிறது.

ஈசுவர ஆராதனை வேறு, அவரவர் தொழில் புரிவது வேறு என்று பலர் எண்ணியிருக்கின்றனர். கடவுள் வழிபாட்டின் தத்துவம் அறியாதவரே அத்தகைய எண்ணம் கொள்ளுவர். செய்கிற ஒவ்வொரு வேலையும் தேகத்துக்கு வலிவு கொடுக்கிறது என்பதை நாம் காண்கிறோம். தேகப்பயிற்சியையும் பொருள் சம்பாத்தியத்தையும் ஒரே தொழிலில் அடக்குவது சாத்தியம். இனி, அதே தொழிலை தேவாராதனையாகச் செய்யவும் முடியும். வியாதன் ஒருவன் கசாப்புக்கடை வைத்து ஜீவனம் பண்ணினான். அதே தொழில் அவனுக்கு சமுதாய சேவையும் ஆயிற்று; தேவாராதனையும் ஆயிற்று. அவன் பரமஞானியானான். அவன் ஒரு துறவிக்குச் செய்த உபதேசம் வியாதகீதை என்னும் பெயர் பெற்றுள்ளது. வயிற்றுப் பிழைப்புக்கு என்பதை அடியோடு மறந்துவிட்டு ஈசுவர ஆராதனை யென்றே கருதி ஒருவன் தன் தொழில் புரியலாம். அத்தகைய உணர்ச்சியின் வாயிலாக அவனது தொழில் அதிவிரைவில் அவனை ஈசனிடம் அழைத்துச் செல்கிறது. உலக வாழ்வே யோகிக்குக் கடவுள் வழிபாடாக வடிவெடுக்கிறது.


தென்னை நெற்று ஒன்றில் தேங்காய், ஓடு, மட்டை முதலியன இருக்கின்றன. தேங்காயை உண்ண மட்டையை உரித்து ஓட்டை உடைக்கவேண்டும். ஸ்வகர்மத்தை தேவாராதனையாகச் செய்வது மட்டையை உரித்து ஓட்டை உடைப்பதற்கு ஒப்பாகும். அதனால் தெய்வம் என்னும் தேங்காய் நமக்குரியதாகிறது.







No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer