Saturday 2 August 2014

48. கஜாந்திக மூர்த்தி

48. கஜாந்திக மூர்த்தி


சூரபத்மனின் தொல்லைகளைப் பொறுக்க முடியாத  இந்திரன் தன் மனைவி இந்திராணியுடன் சீர்காழியில் மறைவாக வசித்து வந்தான். அங்கே சிவபெருமானைத் துதித்துக் கொண்டிருந்தான். இதற்கிடையே தேவர்கள் கொடுமைத் தாங்காததால் இந்திரனைத் தேடி சீர்காழி வந்தனர். இந்திரனையும் அழைத்துக் கொண்டு திருக்கைலை அடைந்தனர். இந்திராணி ஐயப்பனின் பாதுகாப்பில் இருந்தார். கைலையில் சனகாதி முனிவர்கள் யோகத்தினைப் பற்றி சிவபெருமானிடம் அளவளாவிக் கொண்டிருந்ததால் இவர்கள் பல ஆண்டுகள் காத்திருந்தனர். அச்சமயத்தில் சூரபத்மனின் தங்கையான அசுமுகையும் அவளது தோழியான துன்முகியும் சீர்காழி சென்றனர். இந்திராணியை சூரபத்மனை மணம் செய்து கொள்ளச் சொன்னார்கள். இதற்கு மறுத்த அவரை இழுத்துக்கொண்டு சென்றனர். இதைப்பார்த்த ஐயப்பன் அவர்களுடன் கடுமையான போர் நடத்தினார். அவர்கள் இந்திராணியை கொடுமைப்படுத்தியதற்காக அவர்களின் கையையும் வெட்டி அனுப்பினார். இச்செய்தி கேள்வியுற்ற சூரபத்மனின் மகனான பானுகோபன் அவர்களைப் பழிவாங்கப் புறப்பட்டான். பின்னர் சூரபத்மன் தனது சகோதரிகளின் கையை வளரச் செய்தான். அதன்பின் பானுகோபன் இந்திராணியையும், இந்திரனையும் தேடி அலைந்தான் அவர்களைக் காணவில்லை. உடனே இந்திரலோகம் அடைந்தான் அங்கும் காணாததால் இந்திரனின் புத்திரனாகிய ஜெயந்தனிடம் போரிட்டு அவர்களது ஐராவதத்துடன் கிளம்பினான்.


அப்போரில் ஜெயந்தன் மயங்கினான். இதனால் ஐராவதம் பானுகோபனுடன் சண்டையிட்டது. அதுவும் அடிவாங்கி பின்வாங்கியது. பின் அனைத்து தேவர் குழாமையும் அமர்த்தினான். இதனால் மனம் வருந்திய ஐராவதம் திருவெண்காடு சென்று முப்பொழுதும் நீராடி இறைவனைத் துதித்தது. இதனால் மனம் மகிழ்ந்த சிவபெருமான் அதற்கு காட்சிக்கொடுத்தார். அதன்பின் அதன் குறைகளை நீக்கி அதன் ஒடிந்த கொம்புகளை புதுப்பித்தார். பழையபடி இந்திரனின் வாகனமாக்கினார். அதற்குப்பிறகு முருகபெருமானால் சூரசம்ஹாரம் முடிந்தவுடன் இந்திரன் தன்னுலகம் திரும்பினான். ஐராவதமும் அவனுடன் சென்றது, தேவர்குழாம் மீட்கப்பட்டனர். ஐராவதமாகிய ஒரு யானையின் வேண்டுகோளுக்கு மனமிரங்கி காட்சிக் கொடுத்து வேண்டும் வரம் கொடுக்க சிவபெருமான் கஜாந்திக மூர்த்தி என வணங்கப்படுகிறார். இவரை சீர்காழியருகே அமைந்துள்ள திருவெண்காட்டில் வணங்கலாம். இங்குள்ள இறைவனின் திருநாமம் திருவெண்காட்டுநாதர் என்றும் இறைவி திருநாமம் பிரம்மவித்யா நாயகி என்றும் வணங்கப்படுகிறது. இங்கமைந்துள்ள அக்னி, சூர்ய, சந்திர தீர்த்ததில் அடுத்தடுத்து நீராடி இறைவனை வழிபட இந்திரலோக வாழ்வு தித்திக்கும். மே<லும் மகாவில்வார்ச்சனையும் சர்க்கரை பொங்கல் நைவேத்தியமும் திங்களன்று கொடுக்க, தடைவிலகி எடுத்தக் காரியம் ஜெயமாகும் என்பது ஐதீகம்.

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer