Tuesday 12 August 2014

பகவத்கீதை முதல் அத்தியாயம்

முதல் அத்தியாயம்
பகவத்கீதை | அர்ஜுன விஷாத யோகம்
1. அர்ஜுன விஷாத யோகம்

குரு க்ஷத்திரப் போரில் தனக்கு எதிராளியாக தனது உறவினர்களே இருக்கின்றனர் என அர்ஜுனன் வருந்தினான். அந்த வருத்தமே, அர்ஜுன விஷாத யோகம் என்ற, பகவத்கீதையின் முதல் அத்தியாயமாக உருவெடுத்தது. இந்த அர்ஜுன விஷாத யோகமே, அடுத்துப் பதினேழு அத்தியாயங்களில் பகவான் சொல்லிய  உபதேசமான பகவத் கீதைக்கு வித்து போன்றது. வித்து என்றால் விதை. வித்தினால் வித் (ஞானோபதேசம்) உண்டாயிற்று.

கண்ணில்லாத திருதராஷ்டிர ராஜன் போருக்குச் செல்ல இயலாததால் அஸ்தினாபுரத்தில் உள்ள தன் அரண்மனையில் இருந்துகொண்டே போர்க்களத்தில் நடக்கும் செய்திகளைத் தனக்குச் சொல்லும்படி சஞ்ஜயன் என்ற மந்திரியை நியமிக்கிறான். வேதவியாசரருளால் ஞானதிருஷ்டி பெற்றவனாய் சஞ்ஜயன் போர்க்களத்துச் செய்திகளைத் திருதராஷ்டிரனுக்குச் சொல்கிறான். இதுவே முதல் அத்தியாயம் ஆகும்.

த்ருதராஷ்ட்ரரது வினா - சுலோகம் - போருக்கு இருதரத்தாரும் அணிவகுத்திருப்பதை ஸஞ்ஜயர் விளக்குகிறார் 2-20 -தன்னை எதிர்ப்பவர்களைக் காண அர்ஜுனன் தவிக்கிறான் 21-23 -அர்ஜுனன் எதிரிகளுக்குப் பதிலாக உறவினர்களையே காண்கிறான் 24-27 -அர்ஜுனனது தடுமாற்றம் 28-30 அர்ஜுனனது போலி வேதாந்தம் 31-46.

த்ருதராஷ்ட்ர உவாச

1. தர்ம க்ஷத்ரே குரு க்ஷத்ரே ஸமவேதா யுயுத்ஸவ​:
மாமகா​: பாண்டவாஸ்சைவ கிமகுர்வத ஸஞ்ஜய

த்ருதராஷ்ட்ர உவாச-திருதராஷ்டிரன் சொல்லுகிறான், தர்ம க்ஷத்ரே குரு க்ஷத்ரே-அற நிலமாகிய குரு நிலத்தில், ஸமவேதா-ஒன்று கூடி, யுயுத்ஸவ-போர்செய்ய விரும்பித் திரண்ட, மாமகா-நம்மவர்களும், பாண்டவா-பாண்டவரும், கிம் அகுர்வத-என்ன செய்தனர்?

பொருள் : திருதராஷ்டிரன் சொல்லுகிறான்: சஞ்ஜயா, அற நிலமாகிய குரு நிலத்தில் போர்செய்ய விரும்பித் திரண்ட நம்மவர்களும் பாண்டவரும் என்ன செய்தனர்?

ஸஞ்ஜய என்னும் சொல் விருப்பு வெறுப்பு முதலியவைகளை அறவே வென்றவன் என்று பொருள்படுகிறது. ஓரம் சாராது நடு நிலையில் இருப்பவனுக்கே ஞானக்கண் உண்டாகிறது. ஆதலால் தான் வியாச பகவான் ஸஞ்ஜயனுக்கு யுத்தத்தில் நிகழ்பவைகளை உள்ளபடி காணவல்ல ஞானக்கண்ணைக் கொடுத்தருளுகிறார்.

தம் பிள்ளைகளைத் தம்பியின் பிள்ளைகளிடமிருந்து பிரித்துக் கூறுவதால் திருதராஷ்டிரருடைய மனநிலை வெளியாகிறது. போர்புரியாது நாடு தம் பிள்ளைகளுக்குச் சேர்ந்துவிடவேண்டுமென்பது அவரது விருப்பம். தொன்று தொட்டு அறத்துக்கு நிலைக்களமாயிருக்கும் குரு க்ஷத்திரத்தின் மகிமையால் பாண்டவர்களிடமிருந்து மண்ணாசை ஒழியவில்லையா என்பது அவருக்கு ஏற்பட்ட ஐயம். போருக்கு இரு கட்சியினரும் அணிவகுத்திருப்பதை ஸஞ்ஜயர் விளக்குகிறார்.

2. ஸஞ்ஜய உவாச

த்ருஷ்ட்வா து பாண்டவாநீகம் வ்யூடம் துர்யோதநஸ்ததா
ஆசார்யமுபஸங்கம்ய ராஜா வசநமப்ரவீத்

ஸஞ்ஜய உவாச-ஸஞ்ஜயன் சொல்லுகிறான், ததா துர்யோதந-அப்போது துர்யோதனன்; வ்டம் பாண்டவாநீகம்-அணிவகுத்து நின்ற பாண்டவர் படையை, த்ருஷ்ட்வா-பார்த்துவிட்டு, ஆசார்யம் உபஸங்கம்ய-துரோணனிடம் போய், வசனம் அப்ரவீத்-வார்த்தைகளை சொல்லலாயினன்.

பொருள் : சஞ்ஜயன் சொல்லுகிறான்: அப்போது துரியோதன ராஜன் அணிவகுத்து நின்ற பாண்டவர் படையைப் பார்த்துவிட்டு, ஆசாரிய (துரோண)னிடம் போய்(ப் பின்வரும்) வார்த்தை சொல்லலாயினன்:

3. பஸ்யைதாம் பாண்டுபுத்ராணாமாசார்ய மஹதீம் சமூம்
வயூடாம் த்ருபதபுத்ரேண தவ ஸிஷ்யேண தீமதா

ஆசார்ய தவ ஸிஷ்யேண-ஆசார்யரே! உன்னுடைய சீடனான, தீமதா- நிபுணனான, த்ருபத புத்ரேண-துருபதன் மகனால், வ்டாம் பாண்டுபுத்ராணாம்-வகுப்புற்ற பாண்டுவின் பிள்ளைகளின், ஏதாம் மஹதீம் சமூம்-இந்த பெரிய படையை, பஸ்ய-பார்.

பொருள் : குருவே, துருபதன் மகனும் நின் சீடனுமாகிய நிபுணனால் வகுப்புற்ற இப்பெரிய பாண்டவப் படையப் பார்.

4. அத்ர ஸூரா மஹேஷ்வாஸா பீமார்ஜுநஸமா யுதி
யுயுதாநோ விராடஸ்ச த்ருபதஸ்ச மஹாரத​:

அத்ர-இங்கு, மஹேஷ்வாஸா-பெரிய வில்லாளிகளும், யுதி-போரில், பீமார்ஜுநஸமா-வீமனையும் பார்த்தனையும் நிகர்த்தவருமாகிய, ஸூரா-சூரர், யுயுதாந-யுயுதானன், த்ருபத-மகாரதனாகிய துருபதன்.

பொருள் : இங்கு சூரரும் பெரிய வில்லாளிகளும் போரில் வீமனையும் பார்த்தனையும் நிகர்த்தவருமாகிய பலர் இருக்கிறார்கள் யுயுதானன்; விராடன்; மகாரதனாகிய துருபதன்;

5. த்ருஷ்டகேதுஸ்சேகிதாந​: காஸிராஜஸ்ச வீர்யவாந்
புருஜித்குந்திபோஜஸ்ச ஸைப்யஸ்ச நரபுங்கவ​:

த்ருஷ்டகேது-திருஷ்ட கேது, சேகிதாந-சேகிதானன், வீர்யவாந் காஸிராஜ-வீரியமுடைய காசி ராஜன், புரூஜித் -புரூஜித், குந்திபோஜ-குந்தி போஜன், நரபுங்கவ ஸைப்ய-மனிதரேறாகிய சைவியன்.

பொருள் : திருஷ்ட கேது சேகிதானன்; வீரியமுடைய காசி ராஜன்; புருஜித்; குந்தி போஜன்; மனிதரேறாகிய சைவியன்;

6. யுதாமந்யுஸ்ச விக்ராந்த உத்தமௌஜாஸ்ச வீர்யவாந்
ஸெளபத்ரோ த்ரௌபதேயாஸ்ச ஸர்வ ஏவ மஹாரதா​:

விக்ராந்த-வலிமை மிக்க, யுதாமந்யு-யுதாமந்யு, வீர்யவாந் உத்தமௌஜா-வீரன் உத்தமௌஜா, ஸௌபத்ர-சுபத்திரை மகன், த்ரௌபதேயா-திரௌபதி மக்கள்,
ஸர்வ ஏவ மஹாரதா-எல்லோருமே மகாரதர்.

பொருள் : வலிமை மிக்க யுதாமந்யு; உத்தமௌஜா என்ற வீரன்; சுபத்திரை மகன்; திரௌபதி மக்கள்; எல்லோருமே மகாரதர்.

7. அஸ்மாகம் து விஸிஷ்டா யே தாந்நிபோத த்விஜோத்தம
நாயகா மம ஸைந்யஸ்ய ஸஞ்ஜ்ஞார்தம் தாந்ப்ரவீமி தே

த்விஜோத்தம்-இருபிறப்பாளரில் மேம்பட்டவனே, அஸ்மாகம்-நம்முள்ளே, யே விஸிஷ்டா-எவர் விசேஷமாக இருக்கின்றனரோ, தாந்-அவர்களை, நிபோத-தெரிந்து கொள், மம ஸைந்யஸ்ய-எனது படையின், யே நாயகா-எவர் நாயகர்களோ, தாந்-அவர்களை, ஸம்ஜ்ஞார்தம்-கவனத்திற்காக, ப்ரவீமி-சொல்லுகிறேன்.

பொருள் : இனி, எனது படைக்கு நாயகராய், நம்முள்ளே சிறந்தோரையுந் தெரிந்து கொள். இருபிறப்பாளரில் மேம்பட்டவனே, குறிப்பின் பொருட்டாக அவர்களை உனக்குச் சொல்லுகிறேன்.

துர்யோதனன் மறைமுகமாகத் தனது குருவை நிந்திக்கிறான். போர் முறையைப் புகட்டுதலில் நீர் எவ்வளவு வல்லவராயிருந்தாலும், முடிவாகப் பார்க்குமிடத்து நீர் ஒரு பிராம்மணர் தானே! பயங்கொள்ளியாகிய உமக்குச் சண்டையில் எங்கிருந்து உற்சாகம் வரப்போகிறது? பாண்டவப் படையைப் பார்த்து நீர் பயப்படுவது இயல்பு. எனினும் எதற்கும் அஞ்சாதீர். நம் பக்கத்திலும் பேராற்றல் வாய்ந்த வீரர்கள் இருக்கின்றனர்-இதுதான் அவன் பேச்சின் கருத்து.

8. பவாந் பீஷ்மஸ்யுச கர்ணஸ்ச க்ருபஸ்ச ஸமிதிஞ்ஜய​:
அஸ்வத்தாமா விகர்ணஸ்ச ஸெளமதத்திர்ஜயத்ரத:

பவாந்-நீ, பீஷ்ம: கர்ண: க்ருப-பீஷ்மன், கர்ணன், கிருபன், ஸமிதிஞ்ஜய-பொருநர் கூட்டத்தை வெல்வோனாகிய, ததா ஏவ-அதே போல, அஸ்வத்தாமா விகர்ண, ஸௌமதத்தி-அசுவத்தாமன் விகர்ணன் சோமதத்தன் மகன்.

பொருள் : நீ; பீஷ்மன்; கர்ணன்; பொருநர் கூட்டத்தை வெல்வோனாகிய கிருபன்; அசுவத்தாமன்; விகர்ணன்; சோமதத்தன் மகன்;

துரோணாசாரியரை அளவுக்குமிஞ்சி அவமரியாதை செய்து விட்டதாக அஞ்சுகிற துர்யோதனன் அதற்கு ஈடாக சேனாதிபதியாகிய பீஷ்மருக்கு முன்பாக அவரை வைத்து முகஸ்துதி செய்கிறான். மேலும் துரோணருடைய மைத்துனராகிய கிருபரை போர் முனையில் வெற்றியே வடிவெடுத்துள்ளவர் என்று புகழ்ந்து பேசுகிறான். இதுபோன்ற முகஸ்துதிக்கு யார்தான் வசப்படமாட்டார் !

9. அந்யே பஹவ​: ஸூரா மதர்த்தே த்யக்தஜீவிதா​:
நாநாஸஸ்த்ரப்ரஹரணா​: ஸர்வே யுத்தவிஸாரதா​:

அந்யே -இன்னும் வேறு, பஹவ: ஸூரா-பல சூரர், மதர்தே -என் பொருட்டு, த்யக்தஜீவிதா-வாழ்க்கையைத் துறந்தோர், ஸர்வே-எல்லோருமே, நாநாஸஸ்த்ரப்ரஹரணா-பலவிதமான ஆயுதங்களும் அம்புகளுமுடையோர், யுத்வவிஸாரதா-போரில் நிபுணர்.

பொருள் : இன்னும் வேறு பல சூரர்; என் பொருட்டு வாழ்க்கையைத் துறந்தோர்; பலவிதமான ஆயுதங்களும் அம்புகளுமுடையோர்; எல்லோருமே போரில் நிபுணர்.

10. அபர்யாப்தம் ததஸ்மாகம் பலம் பீஷ்மாபிரக்ஷிதம்
பர்யாப்தம் த்விதமேதேஷாம் பலம் பீமாபிரக்ஷிதம்

பீஷ்மாபிரக்ஷிதம்-பீஷ்மனால் காக்கப்படும், அஸ்மாகம் பலம்-நமது படை, அபார்யாப்தம்-(கண்ணுக்கு) நிறைந்திருக்கவில்லை, பீமாபிரக்ஷிதம்-வீமனால் காக்கப்படும், ஏதேஷாம் பலம்-இவர்களுடையை படையோ, பர்யாப்தம்-நிறைந்திருக்கிறது

பொருள் : (எனினும்) பீஷ்மனால் காக்கப்படும் நமது படை (கண்ணுக்கு) நிறைந்திருக்கவில்லை. வீமனால் காக்கப்படும் இவர்களுடையை படையோ நிறைந்திருக்கிறது.

அசுர இயல்பு உடையானுக்கு அழிவுகாலம் அணுகும் பொழுது வீண்பெருமை கொள்ளுதல் அதிகரிக்கிறது. அத்தகைய தற்புகழ்ச்சியில் தனக்கே கேடுதரும் கருத்துகள் தற்செயலாய் வந்து அமைவதும் உண்டு. இங்கு துர்யோதனனுடைய கூற்று இக்கோட்பாட்டுக்கு இலக்காகிறது. தனக்கு ஜன்ம சத்துருவாயிருக்கின்ற பீமனைவிட பீஷ்மர் சிறந்த சேனாதிபதி என்பது அவன் கருத்து. பீமன் தன் வெற்றிக்காகப் பாடுபடுபவன். பாட்டனாராகிய பீஷ்மரோ பட்சபாதமில்லாதவர். உடன்படிக்கையின் படி துர்யோதனனுக்காப் போர் புரிந்தாலும் அவர் தர்மம் ஒன்றே வெற்றியடைய வேண்டும் என்னும் கோரிக்கையுடையவர். அவருடைய சீரிய மனநிலையை துர்யோதனன் அறிந்திலன்.

ஆட்களின் எண்ணிக்கையிலிருந்து ஒரு சேனையின் வலிவை அறிந்துகொள்ள முடியாது. கட்டுக்கு அடங்கியிருக்கிற பாங்கிலிருந்து ஒரு படையின் திறமை தோன்றும். தங்களுடைய சேனை கட்டுக்கு அடங்காதது; பாண்டவர்களுடையதோ கட்டுக்கு அடங்கியது என்று எண்ணிக்கையின் விரிவைத் துர்யோதனன் தற்பெருமையாகச் சொல்லுகிறான். வண்ணத்தில் பெரியது எனினும் வலிவில் சிறியது என்ற அமங்கலக் கருத்து அதில் அடங்கியிருக்கிறது.

ஒரு சமூகத்தினுடைய வாழ்க்கை முறைக்கும் இக்கோட்பாடு பொருந்தும். கட்டுப்பாடும் திட்டமும் உடைய சிறு சமூகங்கள் நன்கு முன்னேற்றமடைகின்றன. கட்டில் அடங்காத பெரிய சமூகங்கள் பிற ஆட்சிக்கு அடிமையாகின்றன; அல்லது சீரும் சிறப்புமின்றித் தம்மைத் தாமே ஆண்டுவருகின்றன. அடக்கமுடைமைக்கும் அடக்கமின்மைக்கும் உள்ள சிறந்த வேறுபாட்டை உலகில் எப்பொழுதும் காணலாம்.

11. அயநேஷு ஸர்வேஷு யதாபாகமவஸ்திதா​:
பீஷ்மமேவாபிரக்ஷந்து பவந்த​: ஸர்வ ஏவ ஹி

ஸர்வேஷு அயநேஷு-எல்லா இடங்களிலும், யதாபாகம் அவிஸ்ததா-வகுப்புகளின்படி நின்றுகொண்டு, பவந்த: ஸர்வ-நீங்களனைவரும், பீஷ்மம் ஏவ-பீஷ்மனையே, அபிரக்ஷந்து-காக்கக் கடவீர்.

பொருள் : நீங்களனைவரும் வகுப்புகளின்படி எல்லா இடங்களிலும் நின்றுகொண்டு பீஷ்மனையே காக்கக் கடவீர்.

முயற்சியற்றவர்களாகிய நீங்கள் என் சொற்படியாவது கேட்டு நடந்துகொள்ளுங்கள் என்று சேனாதிபதிகளை அவமதிப்பது போன்றிருக்கிறது துர்யோதனனது கூற்று.

12. தஸ்ய ஸஞ்ஜநயந் ஹர்ஷம் குருவ்ருத்த​: பிதாமஹ​:
ஸிம்ஹநாதம் விநத்யோச்சை​: ஸங்கம் தத்மௌ ப்ரதாபவாந்

குருவ்ருத்த-கௌரவரில் மூத்தவராகிய, ப்ரதாபவாந் பிதாமஹ-கீர்த்திமிக்க பாட்டன், தஸ்ய-அவனுடைய(துரியோதனனுடைய இதயத்தில்), ஹர்ஷம் ஸஞ்ஜநயந்-மகிழ்ச்சி விளைவிக்குமாறு, உச்சை: ஸிம்ஹநாதம்-உயர்ந்த குரலில் சிங்கநாதம், விநத்ய-புரிந்து, ஸங்கம் தத்மௌ-சங்கை தினான்.

பொருள் : (அப்போது) துரியோதனனுக்கு மகிழ்ச்சி விளைவிக்குமாறு கீர்த்திமிக்க கௌரவர் கிழவனாகிய பாட்டன் உயர்ந்த குரலில் சிங்கநாதம் புரிந்து சங்கை தினான்.

துரோணாசாரியரை இகழ்கின்ற போக்கில் துர்யோதனன் மிகைபடப் பேசிவிட்டான். அதனால் அவருடைய ஊக்கமும் குறைந்தது. மற்ற சேனாதிபதிகள் ஓரளவில் அவமதிக்கப்பட்டனர். துர்யோதனனுடைய உள்ளத்திலோ அச்சம் குடி புகுவதாயிற்று. நிலைமை கெட்டு வருவதை பீஷ்மர் பார்த்தார். மேலும் மனத்தளர்ச்சிக்கும் குழப்பத்துக்கும் இடந்தரலாகாது. தம் பேரன் மீது இரக்கம் வைத்துப் பாட்டனார் சங்குநாதித்துத் திடீரென்று காட்சியை மாற்றுகிறார். அதன் மூலம் கௌரவர்களே யுத்தத்தைத் துவக்கியவர் ஆகின்றனர். ஆக்கிரமிப்பு என்னும் குற்றம் அவர்களைச் சார்ந்ததாகிறது.

13. தத​: ஸங்காஸ்ச பேர்யஸ்ச பணவாநககோமுகா​:
ஸஹஸைவாப்யஹந்யந்த ஸப்தஸ்துமுலோ பவத்

தத-அப்பால், ஸங்கா பேர்ய: -சங்குகளும், பேரிகைகளும், பணவ ஆநக கோமுகா-தம்பட்டங்களும், பறைகளும், கொம்புகளும், ஸஹஸா-திடீரென, அப்யஹந்யந்த-ஒலித்தன, : ஸயுப்த-அந்த ஓசை, துமுல-பயங்கரமாக, அபவத்-இருந்தது.

பொருள் : அப்பால், சங்குகளும், பேரிகைகளும், தம்பட்டங்களும், பறைகளும், கொம்புகளும், திடீரென ஒலித்தன. அஃது பேரோசையாயிற்று.

இது கௌரவர்கள் பக்கம் உண்டாகிய இரைச்சல்.

14. தத​: ஸ்வேதைர்ஹயைர்யுக்தே மஹதி ஸ்யந்தநே ஸ்திதௌ
மாதவ​: பாண்டவஸ்சைவ திவ்யௌ ஸங்கௌ ப்ரதத்மது​:

தத-பின்பு, ஸ்வேதை: ஹயை: யுக்தே-வெள்ளை குதிரைகள் பூட்டிய, மஹதி ஸ்யந்தநே-பெருந் தேரில், ஸ்திதௌ மாதவ: பாண்டவ-நின்ற மாதவனும் பார்த்தனும், திவ்யௌ ஸங்கௌ-தெய்வீகமான சங்குகளை, ப்ரதத்மது-ஊதினர்.

பொருள் : பின்பு வெள்ளைக் குதிரைகள் பூட்டிய பெருந் தேரில் நின்ற மாதவனும் பார்த்தனும் (தம்முடையை) தேவச் சங்குகளை தினர்.

மாதவன் என்பது கிருஷ்ணனுடைய பெயர்களில் ஒன்று. மா-இலக்ஷ்மியின், தவ: -தலைவன். இலக்ஷ்மீபதியே பாண்டவர் பக்கமிருப்பதால் இனி ராஜ்யலக்ஷ்மிக்கு அல்லது விஜயலக்ஷ்மிக்கு இருப்பிடம் பாண்டவர் பக்கமாகப் போகிறது.

பாண்டவன் என்று ஐவரில் யாரை வேண்டுமானாலும் அழைக்கலாம். நாராயணன், நரன் என்ற இரண்டு ரிஷிகள் இப்பொழுது கிருஷ்ணனாகவும் அர்ஜுனனாகவும் அவதரித்திருக்கிறார்கள். அவர்கள் இணைபிரியாதிருப்பதால் ஈண்டுப் பாண்டவன் என்னும் சொல் சிறப்பாக அர்ஜுனனைக் குறிக்கிறது.

15. பாஞ்சஜந்யம் ஹ்ருஷீகேஸோ தேவதத்தம் தநஞ்ஜய​:
பௌண்ட்ரம் தத்மௌ மஹாஸங்கம் பீமகர்மா வ்ருகோதர​:

ஹ்ருஷீகேஸ: பாஜ்ஜந்யம்-கண்ணன் பாஞ்சஜன்யம் என்கிற பெயருடைய சங்கை, நஞ்ஜய: தேவதத்தம்-அர்ஜுனன் தேவ தத்தம் என்ற சங்கை, பௌணட்ரம் மஹாஸங்கம் பீமகர்மா வ்ருகோதர-பௌண்ட்ரம் என்ற பெருஞ்சங்கை அஞ்சுதற்குரிய செயல்களையுடைய ஓநாய் வயிற்று வீமன், தத்மௌ-ஊதினான்.

பொருள் : கண்ணன் பாஞ்சஜன்யத்தை தினான்; தேவ தத்தம் என்ற சங்கை தனஞ்ஜெயன் ஒலித்தான்; அஞ்சுதற்குரிய செயல்களையுடைய ஓநாய் வயிற்று வீமன் பௌண்ட்ரம் என்ற பெருஞ்சங்கை ஊதினான்.

ஹிருஷீகேசன் என்பது இந்திரியங்களுக்குத் தலைவன் என்று பொருள்படுகிறது. இது கிருஷ்ணனுக்கு ஓர் அடைமொழி. இந்திரியங்களைக் கட்டி ஆளுபவன் எச்செயலைச் செய்தாலும் அதை ஒழுங்காகவும் நேர்மையாகவும் செய்வான்.

தனஞ்ஜயன் என்ற சொல் செல்வத்தை வென்றவன் என்ற கருத்துடையது, அர்ஜுனன் ஆங்காங்குச் சென்று அரசர்களிடம் ஒன்றுக்கும் பயன்படாது அடைபட்டுக்கிடந்த செல்வங்களை யெல்லாம் பெயர்த்தெடுத்துக் கொண்டுவந்து சேர்ந்தான். ஆகையால் அவனுக்கு அப்பெயர் வந்தது. பீமசேனனுக்கு வ்ருகோதரன் என்று பெயர். ஓநாயின் வயிறுபோன்று ஒடுங்கிய வயிறு உடையவன் என்றும், எதையும் எளிதில் ஜீரணம் செய்யக்கூடியவன் என்றும் இது பொருள்படுகிறது. நல்ல ஜீரணசக்தி யுடையவர்கள் எச்செயலையும் ஆற்றவல்லவர் ஆகின்றனர்.

16. அநந்தவிஜயம் ராஜா குந்தீபுத்ரோ யுதிஷ்டிர​:
நகுல​: ஸஹதேவஸ்ச ஸுகோஷமணிபுஷ்பகௌ

அநந்தவிஜயம் ராஜா குந்தீபுத்ரோ யுதிஷ்டிர​-அநந்த விஜயம் என்ற சங்கை குந்தியின் மகனான ராஜா யுதிஷ்டிரன், நகுல​: ஸஹதேவஸ்ச ஸுகோஷமணிபுஷ்பகௌ-சுகோஷம், மணிபுஷ்பகம் என்ற சங்குகளை நகுலனும் சகாதேவனும்

பொருள் : குந்தி மகனாகிய யுதிஷ்டிரன் அநந்த விஜயம் என்ற சங்கையும், நகுலனும் சகதேவனும் (முறையே) சுகோஷம், மணிபுஷ்பகம் என்ற சங்குகளையும் ஊதினர்.

நாடு ஆண்டாலும் ஆளாவிட்டாலும் அரசனது இயல்புகள் அனைத்தையும் அடையப் பெற்றிருக்கிறபடியால் யுதிஷ்டிரனுக்கு ராஜா என்னும் சிறப்புச்சொல் பொருத்தமாக அமைகிறது. இப்பொழுது அவன் மூடிசூடாத மன்னனாயிருக்கிறான்.

17. காஸ்யஸ்ச பரமேஷ்வாஸ​: ஸிகண்டீ மஹாரத​:
த்ருஷ்டத்யும்நோ விராடஸ்ச ஸாத்யகிஸ்சாபராஜித​:

பரமேஷ்வாஸ: காஸ்ய: -வில்லாளிகளில் மிகச் சிறந்த காசிராஜனும், மஹாரத: ஸிகண்டீ -மகாரதனாகிய சிகண்டியும், த்ருஷ்டத்யும்ந விராட: -திருஷ்டத்யும்னனும் விராடனும், அபராஜித: ஸாத்யகிஸ்ச-வெல்லப்படாத ஸாத்தியகியும்.

பொருள் : வில்லாளிகளில் மிகச் சிறந்த காசிராஜனும், மகாரதனாகிய சிகண்டியும், திருஷ்டத்யும்நனும், விராடனும், வெல்லப்படாத ஸாத்தியகியும்,

சிகண்டி என்ற சொல் முகத்தில் மீசையில்லாதவன் எனப் பொருள்படுகிறது. இவன் பேடுவாக இருந்தான். பீஷ்மருக்கு எதிரில் இவனை நிறுத்தியபொழுது அவர் போர்புரியாது சும்மா இருந்துவிட்டார். ஆதலால் அவருக்குத் தோல்வியுண்டாயிற்று. திருஷ்டத்யும்னன் என்ற பதத்திற்குப் பொருள் எவராலும் எதிர்க்க முடியாதவன் என்பதாம்.

18. த்ருபதோ த்ரௌபதேயாஸ்ச ஸர்வஸ​: ப்ருதிவீபதே
ஸௌபத்ரஸ்ச மஹாபாஹு​: ஸங்காந் தத்மு​: ப்ருதக் ப்ருதக்

த்ருபதோ த்ரௌபதேயா: -துருபதனும் திரௌபதியின் புதல்வர்களும், மஹாபாஹு: ஸௌபத்ர-பெருந்தோளுடையவனாகிய சுபத்திரை மகனும், ஸர்வஸ-எல்லோரும்,
ப்ருதிவீபதே-பூமிக்குத் தலைவனே! (சஞ்சயன் திருதராட்டிரனிடம்), ப்ருதக் ப்ருதக்-தனித்தனியாக, ஸங்காந் தத்மு-சங்குகளை ஒலித்தனர்.

பொருள் : துருபதனும், துரோபதை மக்களும், பெருந்தோளுடையவனாகிய சுபத்திரை மகனும் தனித்தனியே தத்தம் சங்குகளை ஒலித்தனர். பூமிக்குத் தலைவனே!

பிருதிவீபதே - மண்ணாள்பவனே என்று திருதராஷ்டிரன் இங்கு ஸஞ்ஜயனால் அழைக்கப்படுவது அரசனது பொறுப்பை அவனுக்கு ஞாபகமூட்டுதற் பொருட்டேயாம். நாட்டைக் கடும் போரில் ஆழ்த்திவிடுவதும் சண்டை சச்சரவின்றி சமாதானமாயிருக்கச் செய்வதும் ஆகிய இரு செயல்களும் நாடாள்பவனுக்கு இயலும். உனது விருப்பம் யாதோ என்னும் எச்சரிக்கை இங்கே தொக்கி நிற்கிறது.

19. கோ ஷா தார்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநி வ்யதாரயத்
நபஸ்ச ப்ருதிவீம் சைவ துமுலோ வ்யநுநாதயந்

: துமுல: கோஷ-அந்த பயங்கர ஓசை, நப: ப்ருதிவீம் -ஆகாயத்தையும் பூமியையும், வ்யநுநாதயந்-ஒலிக்கச் செய்து, தார்தராஷ்ட்ரணாம்-திருதராஷ்டிரக் கூட்டத்தாரின், ஹ்ருதயாநி-நெஞ்சுகளை, வ்யதாரயத்-பிளந்தது.

பொருள் : அந்தப் பெருமுழக்கம் வானையும் மண்ணையும் உடனொலிக்கச் செய்வதாய், திருதராஷ்டிரக் கூட்டத்தாரின் நெஞ்சுகளைப் பிளந்தது.

பாண்டவப்படை தொகையில் சிறியது எனினும் அப்பக்கம் இருப்பவர்களுக்குப் பெருமுழக்கம் செய்ய இயன்றது. தெய்வத்தின் துணையும் தர்மத்தின் வலிவுமே அதற்குக் காரணமாயிற்று. குற்றமுடையவர்கள் நெஞ்சில் சிறுபிள்ளையின் பழிப்பும் சுடுசரம் போன்று பாயும். கௌரவர்களுடைய நெஞ்சத்தில் வஞ்சகமிருந்தபடியால் அது வீறப் பிளக்கப்பட்டதில் வியப்பு ஒன்றுமில்லை.

20. அத வ்யவஸ்திதாந்த்ருஷ்ட்வா தார்தராஷ்ட்ராந் கபித்வஜ​:
ப்ரவ்ருத்தே ஸஸ்த்ரஸம்பாதே தநுருத்யம்ய பாண்டவ​:

அத-அப்பால், கபித்வஜ: பாண்டவ-குரங்குக் கொடியர்த்த பார்த்தன், வ்யவஸ்திதாந் தார்தராஷ்ட்ராந்-எதிர் நிற்கும் திருதராஷ்டிரக் கூட்டத்தாரை, த்ருஷ்ட்வா-நோக்கி, ததா ஸஸ்த்ரஸம்பாதே ப்ரவ்ருத்தே-அப்போது ஆயுதங்களை விடுக்க முனைகின்ற போது, தநு: உத்யம்ய-வில்லையேந்திக் கொண்டு.

பொருள் : அப்பால், (இரு திறத்தும்) அம்புகள் பறக்கத் தலைப்பட்டன. அப்போது குரங்குக் கொடியுயர்த்த பார்த்தன் திருதராஷ்டிரக் கூட்டத்தாரை நோக்கி வில்லை யேந்திக் கொண்டு, கண்ணனைப் பார்த்துச் சொல்லுகிறான்.

தன்னை எதிர்ப்பவர்களைக் காண அர்ஜுனன் தவிக்கிறான்.

அர்ஜுன உவாச

21. ஹ்ருஷீகேசம் ததா வாக்யமிதமாஹ மஹீபதே
ஸேநயோருபயோர்மத்யே ரதம் ஸ்தாபய மேச்யுத

ஹ்ருஷீகேஸம் இதம் வாக்யம்-கண்ணனிடம் இந்த வார்த்தைகளை, -சொல்கிறான், மஹீபதே-ராஜனே!, அச்யுத-ஹே அச்சுதா, மே ரதம்-என்னுடைய ரதத்தை, உபயௌ:ஸேநயோ-இரண்டு படைகளின், மத்யே-நடுவே, ஸ்தாபய-நிறுத்துக

பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: “அச்சுதா, படைகளிரண்டுக்கும் நடுவே என் தேரைக் கொண்டு நிறுத்துக என்று. (கேளாய், திருதராஷ்டிர ராஜனே!)

22. யாவதேதாந்நிரீ க்ஷஹம் யோத்துகாமாநவஸ்திதாந்
கைர்மயா ஸஹ யோத்தவ்யமஸ்மிந்ரணஸமுத்யமே

அஸ்மிந் ரணஸமுத்யமே-இந்தப் போர்த் தொடக்கத்தில், மயா கை: ஸஹ யோத்வவ்யம்-என்னால் எவருடன் போர் செய்ய நேருமோ யோத்துகாமாந் அவஸ்திதாந் ஏதாந்-சமரை விரும்பி நிற்கும் இவர்களை, யாவத்-எவ்வளவு நேரம், அஹம் நிரீக்ஷ க்ஷ-நான் பார்க்கிறேன்

பொருள் : சமரை விரும்பி நிற்கும் இவர்களை நான் பார்க்க வேண்டும். இந்தப் போர்த் தொடக்கத்தில் என்னோடு போர் செய்யக் கடவோர் யார்?”

அச்யுதன் என்பது விஷ்ணுவுக்கு அமைந்துள்ள பெயர்களில் ஒன்று. தன் பெருநிலையினின்று இறங்காதவன் என அது பொருள்படுகிறது. (21-22)

23. யோத்ஸ்யமாநாநவே க்ஷஹம் ஏதேத்ர ஸமாகதா​:
தார்தராஷ்ட்ரஸ்ய துர்புத்தேர்யுத்தே ப்ரியசிகீர்ஷவ​:

துர்புத்தே: தார்தராஷ்ட்ரஸ்ய-கெட்ட மதிகொண்ட துரியோதனனுக்கு, யுத்தே ப்ரியசிகீர்ஷவ-போரில் நன்மை செய்யும் வண்ணம், யே-எவர், ஏதே-இந்த அரசர்கள், அத்ர ஸமாகதா: இங்கே வந்துள்ளனர், யோத்ஸ்யமாநாந்-போர் செய்ய திரண்டு நிற்பவர்களை, அஹம் அவே க்ஷ-நான் காண வேண்டும்

பொருள் : “கெட்ட மதிகொண்ட துரியோதனனுக்குப் பிரீதி செய்யும் வண்ணம், இங்கு போர் செய்யத் திரண்டு நிற்போரை நான் காண வேண்டும்என்றான்.

அளவுக்கு மிஞ்சிய ஊக்கம் விரைவில் சோர்வை உண்டு பண்ணக்கூடியது. இனி வரப்போகும் மனத்தளர்ச்சிக்கு முன்னறிகுறியாக அர்ஜுனனுக்கு அளவில்லாப் போர்த்திறம் பிறக்கிறது. ஆகவே தன்னை எதிர்ப்பார் யார் என்று காண அவன் காமுறுகிறான்.

அர்ஜுனன் எதிரிகளுக்குப் பதிலாக உறவினர்களைக் காண்கிறான்.

24. ஏவமுக்தோ ஹ்ருஷீகேஸோ குடாகேஸேந பாரத
ஸேநயோருபயோர்மத்யே ஸ்தாபயித்வா ரதோயுத்தமம்

பாரத-(கேளாய்) பரத நாட்டரசே, குடாகேஸேயுந-அர்ஜுனனால், ஏவம் உக்த-இவ்வாறு சொன்னவற்றை கேட்டு, ஹ்ருஷீகேஸயு-கண்ணன், உபயோ: ஸேநயோ-இரண்டு படைகளுக்கும், மத்யே-நடுவில், ரதோயுத்தமம்-மேன்மை கொண்ட அத்தேரை, ஸ்தாயுபயித்வா-நிறுத்தி.

பொருள் : சஞ்ஜயன் சொல்லிக்கொண்டு வருகிறான்: (கேளாய்) பரத நாட்டரசே, இங்ஙனம் பார்த்தனுரைத்துக் கேட்ட கண்ணன் மிகவும் மேன்மை கொண்ட அத்தேரை இரண்டு படைகளுக்குமிடையே கொண்டு நிறுத்தினான்.

25. பீஷ்மத்ரோணப்ரமுகத​: ஸர்வேஷாம் மஹீ க்ஷதாம்
உவாச பார்த்த பஸ்யைதாந்ஸமவேதாந்குரூநிதி

பீஷ்மத்ரோணப்ரமுகத-பீஷ்மனுக்கும் துரோணனுக்கும் மற்ற வேந்தருக்கும் முன்பாக,
ஸர்வேஷாம் மஹீ க்ஷதாம்-எல்லா அரசர்களுக்கு முன், இதி உவாச-இவ்வாறு சொன்னான், ஸமவேதாந்-கூடி இருக்கும், ஏதாந் குருந்-கௌரவரை, பஸ்ய-பார்

பொருள் : பீஷ்மனுக்கும் துரோணனுக்கும் மற்றெல்லா வேந்தருக்குமெதிரே தேரை நிறுத்திக்கொண்டு, “பார்த்தா! இங்குக் கூடி நிற்கும் கௌரவரைப் பார்!” என்றான்.

அர்ஜுனனுக்குக் குடாகேசன் அல்லது தூக்கத்தை வென்றவன் என்பது ஒரு பெயர். நினைத்தபடி நினைத்தபொழுது தூங்கவோ அல்லது தூங்காதிருக்கவோ அவனுக்கு இயலும். மனதை நன்கு வென்றவனுக்கே இது இயலும். மனதை வென்றவன் எதற்கும் கலங்கான். அத்தகைய மனவுறுதியுடையவனையும் கலக்கும்படியான பெரியதோர் போராட்டம் வரப்போகிறது என்பது அவனுக்குப் காண்பிக்கப்படுகிறது. (24-25)

26. தத்ராபஸ்யத் ஸ்திதாந் பார்த​: பித்ரூநத பிதாமஹாந்
ஆசார்யாந்மாதுலாந்ப்ராத்ரூந் புத்ராந்பௌத்ராந் ஸகீம்ஸ்ததா

27. ஸ்வஸுராந்ஸுஹ்ருதஸ்சைவ ஸேநயோருபயோரபி
தாந்ஸமீ க்ஷய கௌந்தேய​: ஸர்வாந்பந்தூநவஸ்திதாந்

28. க்ருபயா பரயா விஷ்டோ விஷீதந்நிதமப்ரவீத்
த்ருஷ்ட்வேமம் ஸ்வஜநம் க்ருஷ்ண யுயுத்ஸும் ஸமுபஸ்திதம்

29. ஸீதந்தி மம காத்ராணி முகம் பரிஸுஷ்யதி
வேபதுஸ்ச ஸரீரே மே ரோமஹர்ஷஸ்ச ஜாயதே

30. காண்டீவம் ஸ்ரம்ஸதே ஹஸ்தாத்த்வக்சைவ பரிதஹ்யதே
ஸக்நோம்யவஸ்தாதும் ப்ரமதீவ மே மந​:

31. நிமித்தாநி பஸ்யாமி விபரீதாநி கேஸவ
ஸ்ரேயோ நுபஸ்யாமி ஹத்வா ஸ்வஜநமாஹவே

32. காங் க்ஷ விஜயம் க்ருஷ்ண ராஜ்யம் ஸுகாநி
கிம் நோ ராஜ்யேந கோவிந்த கிம் போகைர்ஜீவிதேந வா

33. யேஷாமர்தே காங்க்ஷிதம் நோ ராஜ்யம் போகா​: ஸுகாநி
இமே வஸ்திதா யுத்தே ப்ராணாம்ஸ்த்யக்த்வா தநாநி

34. ஆசார்யா​: பிதர​: புத்ராஸ்ததைவ பிதாமஹா​:
மாதுலா​: ஸ்வஸுரா​: பௌத்ரா​: ஸ்யாலா​: ஸம்பந்திநஸ்ததா

அத பார்த-இதற்கு பின் அர்ஜுனன், தத்ர ஸ்திதாந்-அங்கே நிற்கும்,
பித்ரூந் பிதாமஹாந் ஆசார்யாந் மாதுலாந்-தந்தை உடன் பிறந்தவர்களையும் பாட்டனா ரும் குருக்களும் மாமன்மார்களும், ப்ராத்ருந் புத்ராந் பௌத்ராந்-சகோதரர்களும், பிள்ளைகளும், பேரரும், ததா-அதே போல, ஸகீந்-நண்பர்களும், அபஸ்யத்-பார்த்தான்

ஸேநயோ: உபயோ: அபி-இரண்டு படைகளிலும், ஸ்வஸுராந்-மாமன்மாரும், ஸுஹ்ருத -நண்பர்களும், ஸர்வாந் பந்தூந்-உறவினரெல்லாரும், அவஸ்திதாந்-நிற்பவர்களை, ஸமீக்ஷ்ய-நன்றாக பார்த்து, கௌந்தேய​-அர்ஜுனன்

: கௌந்தேய-அந்த அர்ஜுனன், பரயா க்ருபயா அவிஷ்ட-மிகுந்த இரக்கத்துடன் நிரம்பியவனாக, விஷீதந்-துயரடைந்து, இதம் அப்ரவீத்-இவ்வாறு சொல்லுகிறான்
க்ருஷ்ண-ஹே கிருஷ்ணா, யுயுத்ஸும்-போர் செய்ய விருப்பத்துடன், ஸமுபஸ்திதம்-நிற்கிற, இமம் ஸ்வஜநம் த்ருஷ்ட்வா-இந்த சுற்றத்தார்களை கண்டு.

மம காத்ராணி ஸீதந்தி-என்னுடைய உறுப்புகள் சோர்கின்றன, முகம் பரிஸுஷ்யதி-வாய் உலர்கிறது, மே ஸரீரே வேபது-என்னுடைய உடலில் நடுக்கம் ரோமஹர்ஷ: ஜாயதே-மயிர் சிலிர்ப்பு அடைகிறது.

ஹஸ்தாத் காண்டீவம் ஸ்ரம்ஸதே-கையிலிருந்து காண்டீபம் என்கிற வில் நழுவுகிறது, த்வக் ஏவ பரிதஹ்தே-உடலிலும் எரிச்சல் உண்டாகிறது, மந: ப்ரமதி இவ-மனம் குழம்புவது போல, அவஸ்தாதும் ஸக்நோமி-நிற்கவும் முடியவில்லை.

விபரீதாநி நிமித்தாநி பஸ்யாமி-விபரீதமான சகுனங்களும் காண்கிறேன், ஆஹவே-போரிலே, ஸ்வஜநம் ஹத்வா-சுற்றத்தார்களை கொன்று, ஸ்ரேய: -நன்மையும், அநுபஸ்யாமி-தோன்றவில்லை.

விஜயம் ராஜ்யம் ஸுகாநி-வெற்றியையும் ராஜ்யத்தையும் இன்பங்களையும், கோவிந்த -ஹே கோவிந்தா, காங் க்ஷ-விரும்புகிலேன், ஜீவிதேந ராஜ்யேந: போகை வா-உயிர் வாழ்க்கையாலோ அல்லது ராஜ்யத்தாலோ அல்லது இன்பங்களாலோ கிம்-என்ன

யேஷாம் அர்தே-எவருக்காக, ராஜ்யம் போகா: ஸுகாநி தநாநி-அரசு, போகங்கள் இன்பங்கள், செல்வம், : காங்க்ஷிதம்-நமக்கு விருப்பமோ, தே இமே-அந்த இவர்களே, யுவே-யுத்தத்தில், ப்ராணாந்-உயிர்களை, த்யக்த்வா-இழந்தவராய், இமேஅவஸ்திதா-நிற்கிறார்கள்.

ஆசார்யா: பிதர: புத்ரா-குருமார்கள், தந்தையர், மக்கள், ததா பிதாமஹா: மாதுலா: ஸ்வஸுரா-அதே போல, பாட்டன்மார், மாமன்மார், மாமனார்கள், பௌத்ரா: ஸ்யாலா: ஸம்பந்திந-பேரரும், மைத்துனரும், உறவினர்களும்.

பொருள் : அங்குப் பார்த்தன் தன்னுடைய தந்தையாரும், பாட்டன்மாரும், குருக்களும், மாதுலரும், அண்ணன் தம்பிகளும், மக்களும், பேரரும், தோழர்களும் நிற்பது கண்டான்.

பொருள் : அங்ஙனமே மாமன்மாரும், நண்பர்களும், உறவினரெல்லாரும் இரண்டு படைகளிலும் நிற்கக் கண்டு, குந்தி மகனாகிய அப்பார்த்தன் மிகவும் இரக்கமுற்றவனாய்த் துயருடன் சொல்லுகிறான்:

பொருள் :அர்ஜுனன் சொல்லுகிறான்: கண்ணா, போர் செய்ய வேண்டு இங்கு திரண்டு நிற்கும் சுற்றத்தார்களைக் கண்டு,

பொருள் : என் அவயங்கள் சோர்கின்றன. என் வாய் உலர்கிறது. என்னுடம்பு நடுங்குகிறது. மயிர் சிலிர்க்கிறது.

பொருள் :காண்டீவம் கையிலிருந்து நழுவுகிறது. உடம்பில் எரிச்சலுண்டாகிறது. என்னால் நிற்க முடியவில்லை. என் மனம் சுழலுகிறது.

பொருள் : கேசவா, விபரீதமான சகுனங்கள் பல காண்கிறேன். போரிலே சுற்றத்தார்களை மடிப்பதில் எனக்கு நன்மை தோன்றவில்லை.

பொருள் :கண்ணா, நான் வெற்றியை விரும்புகிலேன்; ராஜ்யத்தையும் இன்பங்களையும் வேண்டுகிலேன். கோவிந்தா. நமக்கு ராஜ்யத்தால் ஆவதென்? இன்பங்களால் ஆவதென்? உயிர் வாழ்க்கையாலேனுமாவதென்னே?

பொருள் : யாவர் பொருட்டு நாம் ராஜ்யத்தையும், போகங்களையும், இன்பங்களையும் விரும்புகிறோமோ, அவர்கள் உயிரையும் செல்வங்களையும் துறந்தோராய் இங்கு வந்து நிற்கிறார்கள்.

பொருள் :குருக்களும், தந்தையரும், மக்களும், பாட்டன்மாரும், மாதுலரும், மாமன்மாரும், பேரரும், மைத்துனரும், சம்பந்திகளும்

குந்தியின் மகன் என்று இயம்புவதன் மூலம், தாயின் இயல்பை-பேதைமையை அர்ஜுனன் விரைவில் பெற்றுவிட்டான் என்பது குறிப்பிடப்படுகிறது. இதுகாறும் சத்துரு பாவனையோடிருந்த அவனுக்கு இப்பொழுது ஒரு நெருக்கடியில் திடீரென்று மித்திரபாவனை வருகிறது. இதை விவேகத்தின் விளைவு எனலாகாது. விவேகமின்மைக்கே இது எடுத்துக்காட்டாகும். நிலை தடுமாற்றம் நிகழ்ந்துவிட்டது. அஞ்ஞானமோ இருள் போன்றது. மனிதனுடைய வீழ்ச்சிக்கு அதுவே காரணமாகிறது. வீழ்ச்சியின் முதற்படி இப்பொழுது ஆரம்பித்திருக்கிறது.

அர்ஜுனனது தடுமாற்றம்

இங்ஙனம் இப்பதத்துக்கு மூன்று அர்த்தங்கள் இருக்கின்றன. நிமித்தம், சகுனம், குறி முதலியவைகள் ஒரு பொருட்சொற்கள். சகுனத்தில் ஓரளவு உண்மையுண்டு. கால தேச நிமித்தம் ஆகிய மூன்றுக்கும் நெருங்கிய தொடர்வுண்டு. நாடிய கருமம் ஒன்று குறித்த வேளையில் அல்லது இடத்தில் நிறைவேறும் அல்லது நிறைவேறாது என்பதற்கு இயற்கையில் இதர உயிர்களின் செயல்கள் சில முன்னறிகுறிகளாக வந்தமைகின்றன. ஓரிடத்தில் ஒரு வேளையில் ஒரு மனிதனைக் காண மற்றொருவன் புறப்படுகிறான் என்று வைத்துக்கொள்வோம். அது இயலும் அல்லது இயலாது என்பதற்குத் தற்செயலாய்ச் சகுனம் வந்தமைவதுண்டு. முக்கியமல்லாத செயல்களை இன்று செய்யலாமா அல்லது நாளைக்குச் செய்யலாமா என்று சகுனம் பார்த்துவிட்டு ஒத்தி வைக்கலாம். ஆனால் மாணாக்கன் ஒருவன் பரீøக்ஷக்குப் போம்பொழுது, நாடு ஒன்று தர்மயுத்தத்தில் பிரவேசிக்கும் பொழுது சகுனம் பார்ப்பது பொருள்படாச் செயலாகும். அப்போதைக்கப்போது செய்து முடிக்கவேண்டிய வினையில் தீவிரமாகக் கருத்தைச் செலுத்தவேண்டும். தம் கடமையை முறையாகச் செய்பவர் குறி பார்ப்பதில் கருத்து வைக்கலாகாது.

அர்ஜுனனுக்கு அபசகுனங்கள் தென்பட்டதற்கு அவனுடைய மனக்கலக்கமே காரணமாகும். வீரன் ஒருவனுக்கு மனக் கலக்கம் பொருந்தாது.

அர்ஜுனனது போலி வேதாந்தம்.

இந்த விரக்தி விவேகத்தினின்று வந்ததன்று. மயக்கத்தின் விளைவானது பற்றற்றவனது பாங்கு போன்று வடிவெடுக்கிறது.

கோவிந்தன் (கோ-உயிர்; விந்தன்-அறிபவன்) உயிர்களின் உள்ளத்தில் இருப்பதை நன்கு அவன் அறிகிறபடியால் இதற்கு ஒரு முடிவு அவன்தான் சொல்லியாக வேண்டும். (26-34)

35. ஏதாந்ந ஹந்துமிச்சாமி க்நதோ பி மதுஸூதந
அபி த்ரைலோக்யராஜ்யஸ்ய ஹேதோ​: கிம் நு மஹீக்ருதே

மதுஸூதந-மதுசூதனா, க்நத: அபி-நான் கொல்லப்பட்டாலும் த்ரைலோக்யராஜ்யஸ்ய ஹேதோ-மூவுலகின் ஆட்சிக்காகவும், ஏதாந் ஹந்தும் இச்சாமி-இவர்களை கொல்ல விரும்பவில்லை, மஹீக்ருதே கிம் நு-பூமிக்காக (சொல்லவும் வேண்டுமா).

பொருள் :மதுசூதனா, யான் கொல்லப்படினும் இவர்களைக் கொல்ல விரும்புகிலேன். மூவுலகின் ஆட்சி பெறுதற்கெனினும் (இது செய்யேன் செய்யேன்!) பூமியின் பொருட்டு செய்வனோ?

மது என்ற அசுரனைக் கொன்றதனால் கிருஷ்ணனுக்கு மது சூதனன் என்ற பெயர் வந்தது.

36. நிஹத்ய தார்தராஷ்ட்ராந்ந​: கா ப்ரீதி​: ஸ்யாஜ்ஜநார்தந
பாபமேவாஸ்யுரயேதஸ்மாந்ஹத்வைதாநாததாயிந​:

ஜநார்தந-ஜனார்தனா, தார்தராஷ்ட்ராந் நிஹத்ய-திருதராஷ்டிரக் கூட்டத்தாரை கொன்று, : கா ப்ரீதி: ஸ்யாத்-நமக்கு என்ன இன்பம் ஏற்படப் போகிறது, ஏதாந் ஆததாயி, த்வா-இந்த பாவிகளை கொல்வதால், அஸ்மாந் பாபம் ஏவ ஆஸ்ரயேத்-நம்மை பாவமே சாரும்.

பொருள் : ஜநார்த்தன! திருதராஷ்டிரக் கூட்டத்தாரைக் கொன்று நாம் என்ன இன்பத்தையடையப் போகிறோம்? இந்தப் பாதகரைக் கொல்வதனால் நம்மைப் பாவமே சாரும்.

ஜநார்தனன்-பொருள், வீடு இரண்டின் பொருட்டு ஜனங்களால் வழுத்தப்படுபவன். இது கிருஷ்ணனுடைய மற்றொரு பெயர்.

ஆததாயினர் என்னும் சொல் பெரும் பாபிகள் எனப்பொருள்படும். ஒருவன் குடியிருக்கும் வீட்டில் தீ வைத்தல், உணவில் விஷத்தை வைத்து வழங்கல், உருவிய வாளோடு ஒருவனைக் கொல்லப் பாய்தல், ஒருவனுடைய செல்வத்தை , நிலத்தை அல்லது மனைவியைத் திருடவும் அபகரிக்கவும் முயலுதல் ஆகிய இவை யாவும் மகா பாபங்களாகின்றன. திருதராஷ்டிரனுடைய மக்கள் இத்தனைவிதக் குற்றங்களையும் செய்தவர்கள் ஆவர். ஆததாயி ஒருவன் பண்டிதனாயிருப்பினும் அவனைக் கொல்லுதல் முறை. ஆனால் இளகிய நெஞ்சத்தால் அர்ஜுனன் அங்ஙனம் செய்ய இசையவில்லை.

37. தஸ்மாந்நார்ஹா வயம் ஹந்தும் தார்தராஷ்ட்ராந்ஸ்வபாந்தவாந்
ஸ்வஜநம் ஹி கதம் ஹத்வா ஸுகிந​: ஸ்யாம மாதவ

மாதவ-ஹே மாதவா, தஸ்மாத்-இதிலிருந்து, ஸ்வபாந்தவாந் தார்தராஷ்ட்ராந் -சுற்றத்தார்களான திருதராஷ்டிர வர்க்கத்தாரை, ஹந்தும் வயம் அர்ஹா-கொல்வதற்கு நாம் உரியவர் அல்லர், ஹி-ஏனெனில், ஸ்வஜநம் ஹத்வா-பந்துக்களை கொன்றபின், கதம் ஸுகிந: ஸ்யாம-எப்படி இன்புற்று இருப்போம்?

ஆதலால், சுற்றத்தாராகிய திருதராஷ்டிர வர்க்கத்தாரைக் கொல்வது நமக்குத் தகாது. மாதவா, பந்துக்களைக் கொன்றபின் நாம் இன்புற்றிருப்பதெப்படி?

38. யத்யப்யேதே பஸ்யுயந்தி லோபோபஹதசேதஸ​:
குலக்ஷயக்ருதம் தோஷம் மித்ரத்ரோஹே பாதகம்

லோப உபஹதசேதஸ-அவாவின் மிகுதியால் அறிவிழந்து, ஏதே-இவர்கள் குலக்ஷயக்ருதம் தோஷம்-குலத்தை அழிப்பதால் வரும் குற்றம், மித்ரத்ரோஹே பாதகம்-நண்பருக்கு துரோகம் இழைக்கும் பாவத்தையும், பஸ்யந்தி-காண்கிலர், யத்யபி-இருந்தும்,

அவாவின் மிகுதியால் அறிவிழந்த இவர்கள் குலத்தையழிப்பதில் விளையும் தீங்கையும் நண்பருக்குச் சதி செய்வதிலுள்ள பாதகத்தையும் காண்கிலராயினும்,

39. கதம் ஜ்ஞேயமஸ்மாபி​: பாபாதஸ்மாந்நிவர்திதும்
குலக்ஷயக்ருதம் தோஷம் ப்ரபஸ்யத்பிர்ஜநார்தந

ஜநார்தந-ஜனார்தனா, குலக்ஷயக்ருதம் தோஷம்-குல நாசத்தினால் வரும் குற்றம் ப்ரபஸ்யத்பி-நன்கு அறிந்த அஸ்மாபி​-நம்மால் பாபாத் நிவர்திதும்-பாவத்தில் இருந்து விலக, கதம் ஜ்ஞேயம்-அறியாமல் இருப்பது ஏன்?

ஜநார்த்தன! குலநாசத்தால் ஏற்படுங் குற்றத்தையுணர்ந்த நாம் இப்பாவத்தினின்று விலகும் வழியறியாதிருப்பதென்ன?

நாளைக்கு அர்ஜுனனே இக்குலநாசத்தைச் செய்யப்போகிறான் என்பது இப்போது அவனுக்குத் தெரியாது. ஆசை மிகுதியால் கௌரவர்கள் உற்றாரை ஒழிக்க முன்வந்திருக்கிறார்கள். மற்று உறவினர் வாஞ்சையால் அர்ஜுனன் மனந்தளர்ந்து பின் வாங்கப் பார்க்கிறான். பொருளாசை ஒருபக்கம், மக்கள் வாஞ்சை மற்றொரு பக்கம். வாழ்வின் கோட்பாடு வேறு ஏதும் இல்லையா? (38-39)

40. குலக்ஷயே ப்ரணஸ்யந்தி குலதர்மா​: ஸநாதநா​:
தர்மே நஷ்டே குலம் க்ருத்ஸ்நமதர்மோ பிபவத்யுத

குலக்ஷயே-குலநாசத்தினால், ஸநாதநா​-தொன்று தொட்டு வருகின்ற, குலதர்மா​-குல தர்மங்கள், ப்ரணஸ்யந்தி-அழிகின்றன, தர்மே நஷ்டே-தர்மம் அழிவதில், க்ருத்ஸ்நம் குலம்-குலம் முழுவதிலும், அதர்ம: உத அபிபவதி-அதர்மமும் பரவுகிறது.

பொருள் : குலநாசத்தால் என்றுமுள்ள குலதர்மங்கள் அழிகின்றன. தர்மம் அழிவதனால் குலமுழுவதையும் அதர்மம் சூழ்கிறதன்றே?

41. அதர்மாபிபவாத்க்ருஷ்ண ப்ரதுஷ்யந்தி குலஸ்த்ரிய​:
ஸ்த்ரீஷு துஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ணஸங்கர​:

அதர்ம: அபி பவாத்-அதர்மம் பரவுவதால், க்ருஷ்ண-கண்ணா, குலஸ்த்ரிய​-குலப் பெண்கள், ப்ரதுஷ்யந்தி-கெட்டுப் போகிறார்கள், துஷ்டாஸு ஸ்த்ரீஷு-கெட்ட பெண்களால், வர்ணஸங்கர​: ஜாயதே-வர்ணக் கலப்பு உண்டாகிறது, வார்ஷ்ணேய-விருஷ்ணி குலத் தோன்றலே!

பொருள் : கண்ணா, அதர்மம் சூழ்வதனால் குல ஸ்திரீகள் கெட்டுப் போகிறார்கள். விருஷ்ணி குலத் தோன்றலே, மாதர் கெடுவதனால் வர்ணக் குழப்பமுண்டாகிறது.

42. ஸங்கரோ நரகாயைவ குலக்நாநாம் குலஸ்ய
பதந்தி பிதரோ ஹ்யேஷாம் லுப்தபிண்டோதகக்ரியா​:

ஸங்கர-குழப்பத்தால், குலஸ்ய -குலத்தையும், குலக்நாநாம்-குல நாசம் செய்தவர்களையும், நரகாய ஏவ-நரகத்துக்கே (கொண்டு செல்கிறது), பிண்ட, தகக்ரியா​: லுப்த-பிண்டமும் சடங்குகளும் இன்றி, ஏஷாம் பிதர: ஹி-இவர்களுடைய முன்னோர்களும், பதந்தி-வீழ்வர்.

பொருள் : அக்குழப்பத்தால் குலத்தார்க்கும் அதனை அழித்தார்க்கும் நரகமேற்படுகிறது. இவர்களுடைய பிதிர்க்கள் பிண்டமும் நீருமின்றி வீழ்ச்சி பெறுகிறார்கள்.

மரணமடைந்தவர் கொஞ்சகாலம் பித்ருலோகத்தில் வசிக்கின்றனர். அவர்களையும், பித்ருலோகத்தில் அவர்களைச் சூழ்ந்திருப்பவர்களையும் குறித்து எண்ணும் நல்லெண்ணம் அவர்களுக்குச் சகாயம் செய்கிறது. இச்செயல் சிராத்தம் என்று சொல்லப்படுகிறது. முன்னோர்களைக் குறித்து எழும் நல்லெண்ணம் உறுதிப்படுதற் பொருட்டுப் பிண்டம், ஜலம் முதலிய பண்டங்கள் கையாளப்படுகின்றன. மற்றும் பல மனிதர்களுடைய நல்லெண்ணங்களை அவ்வேளையில் துணைகொள்ளுதற்பொருட்டு வறியோர்க்கும் மற்றவர்க்கும் சிராத்த காலங்களில் உணவளிக்கப்படுகிறது.

43. தோஷைரேதை​: குலக்நாநாம் வர்ணஸங்கரகாரகை​:
உத்ஸாத்யந்தே ஜாதிதர்மா​: குலதர்மாஸ்ச ஸாஸ்வதா​:

குலக்நாநாம்-குலநாசம் செய்பவர்களின், ஏதை: வர்ணஸங்கரகாரகை​: தோஷை-இந்த வர்ணக் கலப்பு ஏற்படுத்துகின்ற குற்றங்களால், ஸாஸ்வதா​-என்றும் உள்ள, ஜாதிதர்மா​: குலதர்மா -குல ஜாதி தருமங்கள், உத்ஸாத்யந்தே-அழிகின்றன.

பொருள் : வர்ணக் குழப்பமுண்டாகும்படி குலக் கேடர் செய்யும் இக்குற்றங்களால் ஜாதி தர்மங்களும் தொன்று தொட்டுள்ள குலதர்மங்களும் எடுபட்டுப் போகின்றன.

44. உத்ஸந்நகுலதர்மாணாம் மநுஷ்யாணாம் ஜநார்தந
நரகே நியதம் வாஸோ பவதித்யநுஸுஸ்ரும

உத்ஸந்ந குலதர்மாணாம்-எடுபட்டுப் போன குல தருமங்கள், மநுஷ்யணாம் -மனிதர்களுக்கு, அநியதம் நரகே வாஸ-அளவற்ற காலம் நரக வாசம், வதி-ஏற்படுகிறது,
இதி அநுஸுஸ்ரும-கேள்விப்படுகிறோம்.

பொருள் : ஜநார்த்தனா! குலதர்மங்கள் எடுபட்டுப் போன மனிதருக்கு எக்காலும் நரகத்தில் வாசமென்று கேள்விப்படுகிறோம்.

45. அஹோ பத மஹத்பாபம் கர்தும் வ்யவஸிதா வயம்
யத்ராஜ்யஸுகலோபேந ஹந்தும் ஸ்வஜநமுத்யதா​:

அஹோ-அந்தோ, பத-பாவம், வயம் மஹத் பாபம் கர்தும்-பெரும் பாவம் செய்வதற்கு நாம், வ்யவஸிதா-முனைந்து இருக்கிறோம், யத் ராஜ்ய ஸுக லோபேந-ஏனெனில் ராஜ்ய சுகத்திற்கு ஆசைப் பட்டு, ஸ்வஜநம் ஹந்தும்-சுற்றத்தாரைக் கொல்ல, உத்யதா​-முனைந்து விட்டோம்,

பொருள் : அந்தோ! அரசவின்பத்தை விழைந்து சுற்றத்தாரைக் கொல்ல முற்படும் நாம் பெரிய பாவஞ் செய்யத் தலைப்பட்டோம்!

46. யதி மாமப்ரதீகாரமஸஸ்த்ரம் ஸஸ்த்ரபாணய​:
தார்தராஷ்ட்ரா ரணே ஹந்யுஸ்தந்மே  க்ஷமதரம் பவேத்

அஸஸ்த்ரம்-ஆயுதம் இன்றி, அப்ரதீகாரம்-எதிர்த்து போரிடாமல், மாம்-என்னை,
ஸஸ்த்ரபாணய​-ஆயுதம் தாங்கிய, தார்தராஷ்ட்ரா-திருதராஷ்டிரக் கூட்டத்தார், யதி ரணே ஹந்யு-ஒருவேளை போரில் கொன்று விடினும், தத் மே-அதில் எனக்கு,  க்ஷமதரம் பவேத்-நன்மையே ஆகிறது.

பொருள் : கையிலாயுதமில்லாமல், எதிர்க்காமல் நிற்குமென்னை இந்தத் திருதராஷ்டிரக் கூட்டத்தார் ஆயுதபாணிகளாய்ப் போரில் மடித்துவிடினும் அது எனக்குப் பெரிய நன்மையேயாம்.

இக் கூற்றானது அளவுக்கு மிஞ்சிய மனக்குழப்பத்தின் அறிகுறியாகும்.

ஸஞ்ஜய உவாச

47. ஏவமுக்த்வார்ஜுந​: ஸங்க்யே ரதோபஸ்த உபாவிஸத்
விஸ்ருஜ்ய ஸஸரம் சாபம் ஸோகஸம்விக்நமாநஸ​:

ஸங்க்யே-போர்க்களத்தில், ஸோக ஸம்விக்ந மாநஸ​-சோகத்தினால் கலங்கிய மனத்துடன், அர்ஜுந​: ஏவம் உக்த்வா-அர்ஜுனன் இவ்வாறு கூறி, ஸஸரம் சாபம்- அம்பையும் வில்லையும், விஸ்ருஜ்ய-எறிந்து விட்டு, ரதோபஸ்த-தேர்த்தட்டில், உபாவிஸத்-உட்கார்ந்தான்.

சஞ்ஜயன் சொல்லுகிறான்: செருக்களத்தில் இவ்வாறு சொல்லிவிட்டுப் பார்த்தன் அம்புகளையும் வில்லையும் எறிந்து போட்டுத் துயரில் மூழ்கிய மனத்தனாய்த் தேர்ப்பீடத்தின் மேலுட்கார்ந்து கொண்டான்.




No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer