Saturday 2 August 2014

63. இரத்த பிட்சா பிரதான மூர்த்தி

63. இரத்த பிட்சா பிரதான மூர்த்தி


சிவபெருமானை பார்த்து ஏளனமாய் சிரித்த நான்முகனின் நடுத்தலையை பைரவர் தன்னுடைய நகத்தினால் திருகி எடுத்தார். அதன் பின்னர் அவருடைய ஆணைப்படி அவரால் உருவாக்கப்பட்ட அதிபலன், ஆலகாலன், கனன்முகன், காலவேகன், சோமகன் போன்ற கணத்தலைவர்களுடன் வனம் சென்று அங்கிருந்த முனிவர்கள், ரிஷிகள், தவசிகள் இவர்களிடமிருந்து இரத்தத்தை தன்னுடைய சூலாயுதத்தால் குத்தி அதனால் வழிந்த இரத்தத்தைக் கபாலத்தில் பிடித்தார். பின்னர் தேவலோகம் சென்று தேவர்களின் இரத்தத்தைப் பிடித்தார். இதனால் இறந்தவர்களை உயிர்பித்து அவர்களின் செருக்கை அழித்தார். அவர்கள் அடுத்து சென்ற இடம் வைகுந்தம். அங்கே தன்னையும், கணத்தலைவர்களையும் தடுத்த திருமாலின் முழுமுதற்காவலனான விடுகசேனனை சூலாயுதத்தால் கொன்றார். தன் தோள் மீது போட்டார். பின்னர் தேவியர் படை சூழ பாம்பணையில் பள்ளிக் கொண்டிருந்த திருமாலின் முன் பைரவர் தனது கணத்தலைவர்களுடன் சென்று திருமாலிடம் இரத்தப் பிட்சை ஏற்க வந்ததைச் சொல்ல சந்தோஷத்துடன் திருமால் தனது நகத்தினால் நெற்றியியை கீறி ஒரு ரத்த நரம்புருவி அதிலிருந்து சொட்டிய இரத்தத்தை கபாலத்தில் விட்டார்.


இவ்வாறாக ஆயிரம் ஆண்டுகள் இரத்தம் கொடுத்தும் பைரவரின் பிட்சா பாத்திரம் நிறையவில்லை, இதனால் திருமால் பலவீனமடைந்து மயங்கினார். இதனைக் கண்ணுற்ற அவன் தேவியர் திகைக்க, பைரவர் அவர்களைத் தேற்றி திருமாலை எழச்செய்தார். பின்னர் திருமாலின் வேண்டுகோளின்படி வடுகசேனனை மறுபடி உயிர்பித்தார். இவ்வாறு முனிவர், ரிஷிகள், தவசிகள், தேவர்கள், திருமால் போன்றோரிடம் இரத்தம் பெற்றதற்குக் காரணம் அவர்களுடைய அகந்தையையும், கர்வத்தையும் அழிப்பதற்குத்தானே ஒழிய வேறில்லை. இவ்வாறு அவர்களின் அகந்தையை ஒழிக்க பிட்சையாக பெற்ற சிவபெருமானுக்கு இரத்த பிட்சா பிரதான மூர்த்தி என்ற பெயர் உண்டாயிற்று. இவரை தரிசிக்க நாம் செல்லவேண்டிய தலம் காசியாகும். இங்குள்ள விஸ்வநாதர்க்கு செவ்வரளி அர்ச்சனையும், வாழைப்பழ நைவேத்தியமும், எள் தீபமும் செவ்வாய்கிழமைளில் கொடுக்க விளக்கிட பகைவர் தொல்லை மறையும். நாம் செய்த பாவங்கள் கங்கையில் மூழ்கி பின் விஸ்வநாதரை தரிசிக்கத் தீரும்.

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer