Sunday 28 September 2014

மகாபாரதம் பகுதி 017


மகாபாரதம் பகுதி-17

இதோடு விட்டானா பாண்டு... குந்தியை அழைத்தான். அன்பே! உன்னளவில் நீ எனக்கு பெரிதும் உதவியிருக்கிறாய். நமக்கு பிறந்த மூவருமே மைந்தர்கள். உன் சகோதரிக்கு (மாத்ரி) என்னால் குழந்தை பாக்கியம் தர இயலவில்லை. அவளுக்கும் நீ இந்த மந்திரத்தைக் கற்றுக் கொடுத்தால், அவளுக்கும் குழந்தை பிறக்க வழி பிறக்குமல்லவா? அன்பே! எனக்காக நீ இதைச் செய்யமாட்டாயா? என்று கெஞ்சலாகக் கேட்ட கணவனின் விருப்பத்திற்கு சம்மதித்தாள் குந்தி. கற்பு நிறைந்த பெண்கள் கணவர் சொல் தட்டுவதில்லை. மாத்ரியை அழைத்தாள். சகோதரி! கணவரின் அனுமதியுடன் தேவர்களுக்கு நான் மூன்று பிள்ளைகளைப் பெற்றேன். உனக்கும் அதே மந்திரத்தைக் கற்றுத்தரச் சொல்லியுள்ளார் பாண்டு மன்னர். உனக்கும் குழந்தைகள் பெறும் ஆசை இருக்கத்தானே செய்யும். நான் மந்திரத்தைச் சொல்கிறேன். கேள், என அந்த ரகசிய மந்திரத்தை அவளது காதில் ஓதினாள் குந்தி. மகிழ்ச்சியடைந்தாள் மாத்ரி. தேசத்தின் நலன் கருதி கணவர் அல்லாத மனமாசில்லாத ஒருவரிடம் குழந்தை பெறுவது ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று என்பதையும், அதனால் கற்பிற்கு பாதிப்பில்லை என்பதையும் தெளிவாகத் தெரிந்து கொண்ட அவள், அசுவினி தேவர்களை அழைத்தாள். அவர்கள் இவ்வுலகிலுள்ள எட்டு திசைகளின் காவலர்கள். அந்த எட்டு பேரும் வந்தனர். ஒரே உருவம் எடுத்தனர். மாத்ரியை கட்டியணைத்தனர். அவளுக்கு ஆசி வழங்கி விட்டு சென்றனர். கர்ப்பமானாள் மாத்ரி. அவளுக்கு இரட்டிப்பு சந்தோஷம் கிடைக்கும் வகையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அவர்களுக்கு நகுலன், சகாதேவன் என்று பெயர் சூட்டினான் பாண்டு.

புத்திரர்கள் ஐவரும் செல்லமாய் இங்கே வளர, அஸ்தினாபுரத்தில் துரியோனாதிகள் நூறு பேரும் இன்னும் செல்லமாக வளர்க்கப்பட்டனர். பாண்டு புத்திரர்களின் நண்பர்கள் யார் தெரியுமா? புலிகளும், சிங்கங்களும். இளம் வயதிலேயே பயத்தை விரட்டுவது என்பது பெரிய கலை. பாண்டு புத்திரர்களான பாண்டவர்கள் ஐவரும் சிறு வயதிலேயே வீரம் மிக்கவர்களாகத் திகழ்ந்தனர். ஆயகலைகள் அறுபத்து நான்கும் அவர்களுக்கு கற்பிக்கப்பட்டன. வீரம் மிக்கவர்களுக்கு மனிதாபிமானமும் முக்கியம். பாண்டவர்கள் இளம் வயதிலேயே பல தர்மங்களைச் செய்தனர். இந்த பூமியின் அளவை விட அவர்கள் வழங்கிய பொருளின் அளவு அதிகமாக இருந்தது. வாலிப வயதை அடைந்து விட்டார்கள் பாண்டவர்களும், துரியோதனாதிகளான கவுரவர்களும். இந்த நிலையில் ஒரு வசந்தகாலம் வந்தது. பாண்டுவுக்கு வயது ஏறியிருந்தாலும், அவன் கிந்தம முனிவரிடம் பெற்ற சாபத்தால் அவனால் மனைவியரின் அருகே நெருங்க முடியவில்லை. வசந்த காலத்தின் மன்மத பாணங்கள் அவனைத் துன்புறுத்தியது. ஒருநாள் அந்த பாணங்களின் தாக்குதலுக்கு மிகக் கொடூரமாக ஆளான அவன் முன்னால் மாத்ரி வந்து நின்றாள். அவளது அழகை கண்களால் அள்ளிப்பருகிய பாண்டு, அவளை அணைத்தான். நீண்ட நாள் இடைவெளிக்குப் பிறகு ஏற்பட்ட ஸ்பரிசத்திற்கு மாத்ரியும் கட்டுப்பட்டாள். நடக்கப்போகும் விபரீதம் அவளுக்குத் தெரியவில்லை. சற்றுநேரம் சென்றது. பாண்டு அவள் மீது பிணமாகக் கிடந்தான். இன்பம் பெற வந்த மாமன்னன் துன்பக்கடலில் ஆழ்த்திவிட்டு, மீளாத்தூக்கத்தில் ஆழ்ந்தானே என மாத்ரி கதறினாள்.


ஐயோ! கணவருக்கு புத்திமதி சொல்லாமல், அவரது இச்சைக்குப் பணிந்து அவரது உயிரையே பறித்து விட்டதே! என் இதழ்களில் இருந்து நீங்கள் பருகிய அமுதம் உங்களை விஷமாக்கி கொன்று விட்டதே! மனமொத்த தம்பதிகளை உலகில் யார் ஒருவர் பிரிக்கிறாரோ, அவர்களுக்கு உங்கள் வாழ்க்கை ஒரு பாடமாகி விட்டது. ஆம்...நீங்கள் கிந்தமரிடம் பெற்ற சாபம் தீவினையாக மாறி உங்களை அழித்து விட்டதே! நான் என்ன செய்வேன். ஐந்து புதல்வர்களை வளர்க்கும் பொறுப்பை இரண்டு விதவைகளிடம் ஒப்படைத்து விட்டீர்களே!என புலம்பினாள். மாத்ரியின் புலம்பலைக் கேட்டு வந்த குந்தி, நடந்து விட்ட விபரீதத்தை எண்ணி கதறித்துடித்தாள். இந்த பட்டத்தரசிகளின் ஓலம் கேட்டு பாண்டு புத்திரர்கள் ஓடி வந்தனர். அரண்மனையில் தங்கியிருந்த முனிவர்கள், மகான்கள் எல்லாம் வந்தனர். முனிவர்களில் முதியவரான காஷ்யபர், சதசிருங்கர் போன்றவர்களெல்லாம் வருத்தப்பட்டார்கள். மாத்ரியால் கணவனின் இறப்பைத் தாங்க முடியவில்லை. மேலும் அவரது சாவுக்கு காரணமாக அமைந்தது தன்னுடன் இன்பம் துய்த்தது என்பதை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை. அவள் உயிர் வாழ விரும்பவில்லை. தான் பெற்ற பிஞ்சுகளை ஏற இறங்க பார்த்தாள். எப்படியும் குந்தி அவர்களைக் காப்பாற்றி விடுவாள் என்ற நம்பிக்கை பிறந்தது. குந்தி! இனியும் நான் உயிர் வாழமாட்டேன். அவரது பிரிவைத் தாங்கும் சக்தி எனக்கில்லை. மைந்தர்களே! குந்தியின் சொல் கேட்டு நடக்க வேண்டும். நீங்கள் வீர மைந்தர்களாய் வாழுங்கள், என வாழ்த்தி விட்டு, சிதை மூட்டச்சொல்லி உத்தரவிட்டாள். அந்த தீயில் இறங்கி தன் உயிரை விட்டாள். கற்புடைய ஒரு பெண் வேறென்ன செய்வாள்! இதற்குள் இறந்து போன பாண்டு மன்னன் சொர்க்கம் போய் சேர்ந்தான். அங்குள்ள கற்பக மரத்தின் நிழலில் தங்கியிருந்தான். மாத்ரியும் அவனை அடைந்தாள். இருவரும் ஆகாயகங்கையில் நீராடினர். மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். தனிமையில் ஐந்து புத்திரர்களுடன் என்ன செய்வாள் குந்தி? அவளையும், புத்திரர்களையும் ஹஸ்தினாபுரத்துக்கு அழைத்துச் சென்றார்கள் முனிவர்கள். திருதராஷ்டிரன் தன் தம்பி மனைவியையும், குழந்தைகளையும் அன்போடு வரவேற்றான். தங்கள் ஐந்து சகோதரர்களையும் பார்த்து துரியோதன சகோதரர்களும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. பெரியப்பாவின் பாதத்தில் விழுந்து வணங்கினர் பாண்டு புத்திரர்கள். அவர்களைக் கண்ணீரோடு அணைத்துக் கொண்டான் திருதராஷ்டிரன். அப்போது அங்கு வந்தார் பரமாத்மா கிருஷ்ணன்.

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer