Wednesday 4 June 2014

உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில்

உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில்


உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் திருநெல்வேலி மாவட்டம் உவரியிலுள்ள சிவன் கோவில். முதன்மைக் கடவுளான சிவன் இங்கு சுயம்புமூர்த்தியாக லிங்கவடிவில் உள்ளதால் இப்பெயர் வழங்கப்படுகிறது.

இக்கோவில் திருச்செந்தூர்- கன்னியாகுமரி (மாநில நெடுஞ்சாலை 176) சாலையில் உள்ளது. திருச்செந்தூரிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவிலும் தூத்துக்குடியிலிருந்து சுமார் 70 கி.மீ தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து சுமார் 52 கி.மீ தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து சுமார் 70 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4 முதல் இரவு 9 மணி வரையும் கோயில் திறந்திருக்கும்.

அஞ்சல் முகவரி: அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில், உவரி- 627 651, திருநெல்வேலி மாவட்டம்.

இயற்கை எழில்மிக்க கடற்கரையோரமாக இக்கோவில் உள்ளது. இங்கு சிவன் சுயம்பு லிங்கோத்பவராக எழுந்தருளியுள்ளார். கடலோரத்தில் நான்கு நன்னீர் ஊற்றுக்கள் அமைந்துள்ளன. இவற்றிலிருந்து சுயம்புநாதருக்கு அபிஷேகத்திற்குத் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

3 நாட்கள் நடைபெறும் வைகாசி விசாகத் திருவிழாவில் மகர மீனுக்கு சுவாமி காட்சிதருதல் சிறப்பு நிகழ்வாகும். ஒவ்வொரு தமிழ்மாத கடைசி வெள்ளிக்கிழமையும் பக்தர்கள் இங்கு அதிகம் வருகின்றனர். தைப்பூசம் (தேர் திருவிழா), பங்குனி உத்திரம், ஆடி அமாவாசை, தை அமாவசை, திருவாதிரை திருநாள், கார்த்திகை தீபம் ஆகிய நாட்களிலும் இக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

இது தவிர பௌர்ணமி, கார்த்திகை, விநாயகர் சதுர்த்தி, தமிழ் வருடப்பிறப்பு, பிரதோசம் தீபாவளி, பொங்கல் ஆகிய நாட்களில் கோயிலில் விசேச வழிபாடுகள் உண்டு. பக்தர்கள் வேண்டுதலுக்காகக் கடற்கரை மண்ணை 11 அல்லது 41 ஓலைப்பெட்டியில் சுமந்து கொண்டுவந்து போட்டு வழிபடுதல் இங்கு விசேஷமான வழிபாடாக உள்ளது.

தலவரலாறு

அருகில் உள்ள கூட்டப்பனையிலிருந்து ஒருவர் பால் விற்க தினமும் உவரி வழியாக செல்லும் போது தற்போது சுவாமி இருக்கும் இடத்தருகே வரும்போது கால் இடறி விழுந்து கொண்டே இருந்தார். கால் இடறக் காரணமாக இருந்த கடம்ப மரத்து வேரை வெட்டி வீழ்த்திய போது ரத்தம் பீறிட்டது. இறைவனும் அசரீராக தான் இந்த இடத்தில் குடிகொண்டிருப்பதாகவும், தனக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்தும் படியும் சொல்ல பனை ஓலையில் கோவில் கட்டினர். நாளடைவில் பெரிய அளவில் கோவில் கட்டப்பட்டது. சுவாமியை வழிபட்டால் கூன், குஷ்டம் ஆகிய நோய்கள் குணமாவதால் இத்தலம் மிகவும் பிரபலமானதாக உள்ளது.

முற்காலத்தில் மட்டுமின்றி இன்றும் ஏராளாமான மக்கள் விசாக நேரத்தில் குமரி மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து உவரி சுயம்புநாதரை வந்து வழிபடுகின்றனர்.

உவரி விசாகத்திற்கு வரும் மக்கள் விசாகத்தன்று அதிகாலையில் கடலில் நீராடி கடல் தங்கமாகிய கடல் மண்ணை எடுத்து சுயம்பு நாதர் ஆலயத்தின் அருகில் தலையில் சிறிய பெட்டிகளில் சுமந்து வந்து குவிப்பார்கள். இதனால் தீரும் பாவ வினைகளும், நோய்களும், கஷ்டங்களும் ஏராளம். செல்வங்கள் சேரும், புகழ் சேரும், கல்வி அறிவு அதிகரிக்கும்.

நினைத்த காரியங்கள் வெற்றி அடையும் சுயம்புலிங்கத்தின் அருள் என்றும் மண் சுமந்தாருடன் நிலைத்து நிற்கும். கடல் குளித்த பின் விநாயகரை வழிபட்டு மும்முறை வலம் வந்து, சுயம்பு நாதர் ஆலயத்தை சுற்றி வந்து வணங்கி, முன்னோடியைத் தொழுது பிரம்மசக்தியம்மன், இசக்கியம்மாள் ஆலயங்களை வலம் வந்து சாஸ்த்தாவை வழிபடுவார்கள்.

தெப்பக்குளம் அல்லது கிணற்று நீரில் நீராடி தூய ஆடை அணிந்து சுயம்பு நாதர் ஆயலத்தினுள் சென்று மூலஸ்தானத்தை மூன்று முறை வலம் வந்து அர்ச்சனை செய்து கொடி மரத்தைத் தொழுது பிரார்த்தனை செய்வார்கள். குமரி மாவட்ட மக்கள் உவரியில் தங்குவதற்கும்,சமையல் செய்து பரிமாறுவதற்கும், பாதுகாப்பிற்காகவும் மடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


நான்கு கால பூஜையும் முடிந்த பின் உற்சவ மூர்த்தி வீதிவுலா நடைபெறும். இந்த நிகழ்ச்சி நிறைவு பெற்று உற்சவ மூர்த்தி ஆலயத்தினுள் எழுந்தருளும் போது விடியும் நேரம் ஆகிய விடும் அதன் பின் மக்கள் தங்கள் வீடுகளுக்குப் புறப்பட்டுச் செல்வர். விசாகத்திற்கு மறுநாள் பவுர்ணமி ஆகும். பெரும்பான்மையான மக்கள் உவரியில் பவுர்ணமி தீர்த்தமாடி சுயம்புலிங்க சுவாமியை வழிபடுவது வழக்கம்.

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer