Monday 16 June 2014

குரு பெயர்ச்சி பலன்கள் கன்னி



குரு பெயர்ச்சி பலன்கள் (13.06.14 முதல் 04.07.15 வரை)கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) 75/100 ( வீடும் வாங்கலாம் வேதனையும் வரலாம்!
பாச பந்தத்துடன் பழகி மகிழும் கன்னி ராசி அன்பர்களே!

உங்களுக்கு இதுவரை குருபகவான் ராசிக்கு 10ல் இருந்து, பிற்போக்கான பலன் அளித்து வந்தார். அதனால், மனதில் தீராத வெறுப்பு எப்போதும் குடிகொண்டிருக்கும். எதைச் செய்தாலும் நிறைவேற்ற முடியாமல் இழுபறி நிலை தொடர்ந்திருக்கும். இப்படி கெடு பலனைத் தந்து கொண்டிருந்த குரு பகவான் இப்போது இடம்மாறி 11-ம் இடத்திற்கு வருவது மிகவும் உன்னதமான நிலை. அவர் எண்ணற்ற பல நன்மைகளை தரக் காத்திருக்கிறார். பொருளாதார வளம் மேம்படும். உத்தியோகம் சிறப்படையும். புதிய பதவி கிடைக்கும். அதோடு குருவின் 5,7,9-ம் இடத்துப் பார்வைகள் சாதகமாக விழுகிறது. அதன் மூலமும் பல நன்மைகள் கிடைக்கும்.குரு பகவான் மட்டுமின்றி சனி பகவான் நன்மை தரும் இடத்தில் உள்ளனர். இது சிறப்பான காலம். இது வரை இருந்து வந்த உளைச்சல் மறைந்து மனதில் உற்சாகம் கூடும். பொருளாதார வளம் சிறப்படையும். நினைத்த காரியம் எளிய முயற்சியில் வெற்றிகரமாக நிறைவேறும். ஆற்றல் மேம்படும். அவப்பெயர் மறைந்து உறவினர் மத்தியில் செல்வாக்கு மேம்படும். அக்கம் பக்கத்தினரிடம் மதிப்பு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். கணவன்- மனைவி இடையே இருந்த கருத்துவேறுபாடு அடியோடு மறைந்து அன்பு மேம்படும். இதுவரை தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவீர்கள். அதுவும் மனதிற்கு பிடித்த நல்ல வரனாக அமையும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். விருந்து, விழா என அடிக்கடி சென்று மகிழ்வீர்கள்.வீட்டிற்கு அடிக்கடி உறவினர்கள் வருகையும், அதனால் நன்மையும் காண்பீர்கள். புதிய வீடு-மனை வாங்க யோகமுண்டு அல்லது தற்போது உள்ளதை விட வசதியான வீட்டுக்கு குடி புக வாய்ப்புண்டு. வாகன வகையிலும் அனுகூலம் உண்டாகும். 2015 ஜனவரிக்கு பிறகு குடும்பத்தில் வீண் குழப்பம் வரலாம். உறவினர் வகையில் விரோதமும் ஏற்படும். எடுத்த முயற்சியில் தடை உண்டாகும். 2015 பிப். 4 க்கு பிறகு கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு மறைந்து ஒற்றுமை பலப்படும். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். புதிய உறவினர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். பெண்கள் ஆதரவுடன் இருப்பர். பகைவர்களின் தொல்லை மறையும். பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் தக்க சமயத்தில் கிடைக்கும். நண்பர்களும் தானாக முன்வந்து உதவி செய்ய முற்படுவர். விரும்பிய வகையில் நகை-ஆபரணம் வாங்கி மகிழலாம்.

தொழில், வியாபாரம்: தொழில், வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். தொழில் போட்டியாளர்கள் கூட உங்களின் திறமை உணர்ந்து சரண் அடைவர். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். உங்களின் திறமை பலவிதத்தில் மேம்பட்டு இருக்கும். டிசம்பருக்கு பிறகு புதிய வியாபாரத்தை ஆரம்பிக்க அதிர்ஷ்டகரமான சூழ்நிலை உருவாகும். அரசு வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சுய தொழில் துவங்க நினைப்போருக்கு இது தகுந்த காலகட்டம். கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலப்படும்.

பணியாளர்கள்:  வழக்கத்தை விட அதிக நற்பலனை இந்த ஆண்டு எதிர்பார்க்கலாம். இதுவரை வேலையில் இருந்து வந்த தடைகள், திருப்தியின்மை போன்றவை மறையும். வேலையில் புதிய தெளிவு பிறக்கும். மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு சீராக கிடைக்கும். சக ஊழியர்களும் உதவிகரமாக இருப்பர். பதவி உயர்வு கிடைக்க யோகமுண்டு. சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். வேலை இன்றி இருப்பவர்களுக்கு தக்க பணி கிடைக்க வாய்ப்புண்டு. கைத்தொழிலில் ஈடுபடுபவர்கள் மனமகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். அவர்கள் குறைந்த முதலீட்டில் புதிய தொழில் செய்யலாம். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம். வக்கீல் தொழில் சிறப்பாக நடக்கும்.

பெண்கள்: வாழ்வில் சிறப்பான முன்னேற்றம் அடைவர். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கப் பெறுவர். இவர்களின் சீரிய தலைமையில் குடும்ப வாழ்வு சிறக்கும். பிறந்த வீட்டில் இருந்து வெகுமதிகள் அடிக்கடி வரலாம். மனம் போல புத்தாடை, ஆபரணம், ஆடம்பர பொருள்அதிகமாக வாங்குவீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு மணப்பொருத்தம் கைகூடும். அக்கம் பக்கத்தார் உங்களை பெருமையாக பேசுவார்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் நல்ல முன்னேற்றம் அடைவர்.

கலைஞர்கள்:  புதிய ஒப்பந்தம் மூலம் வருமானம் கிடைக்கப் பெறுவர். மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வீர்கள்.

அரசியல்வாதிகள்:  தலைமையின் ஆதரவுடன் முன்னேற்றம் உண்டாகும். விரும்பிய பதவி கிடைக்கப் பெறுவீர்கள்.

மாணவர்கள்:  இந்த கல்வி ஆண்டு மிகச் சிறப்பானதாக அமையும். விரும்பிய பாடம் கிடைக்கப் பெறுவீர்கள். படிப்பில் முதன்மையானவர்களாகப் பளிச்சிடுவீர்கள். சிலர் வெளிநாடு சென்று படிக்கும் யோகத்தைப் பெறுவர்.

விவசாயிகள்:  விவசாயத்தில் வளர்ச்சி உண்டாகும். எதைப் பயிரிட்டாலும் நல்ல விளைச்சல் கிடைக்கும். சிலர் நவீன முறையைக் கையாண்டு விளைச்சலை அதிகரிக்கச் செய்வர். புதிதாக நிலம் வாங்கும் யோகமுண்டு. வழக்கு விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும்.

உடல்நலம்:  உடல்நலம் சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவு பெருமளவில் குறையும்.

குரு அதிசாரப் பலன்!

குருபகவான் டிசம்பர் 3-ந் தேதி அதிசாரம் பெற்று சிம்ம ராசிக்கு மாறுகிறார். 22-ந் தேதி வரை அதில் இருப்பார். இந்த அதிசாரக் காலத்தில் பொருள் விரயம் ஏற்படலாம். பண விஷயத்தில் கவனம் தேவை. மனவேதனை உருவாகலாம். வீண் அலைச்சல் ஏற்படும். எந்தச் செயலையும் நிறைவேற்ற விடாமுயற்சியும், கடின உழைப்பும் தேவைப்படும்.

பரிகாரம்!

கேதுவுக்கு கொள்ளு படைத்து அர்ச்சனை செய்யுங்கள். ராகுவையும் வழிபட்டு வாருங்கள். பாம்பு புற்றுள்ள கோவிலுக்கு சென்று வாருங்கள். துர்க்கைக்கு எலுமிச்சை பழ விளக்கு ஏற்றுங்கள். துர்க்கை வழிபாடு மிகவும் உயர்வை தரும். ராகு காலத்தில் பைரவருக்கு தயிர் சாதம் படைத்து வழிபடலாம். 2014 டிச.16 வரை சனிபகவானுக்கு எள் சாதம் படைத்து வணங்குங்கள். சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். மேலும் காக்கைக்கு அன்னம் படைத்து சாப்பிடுங்கள். ஆதரவற்ற மூதாட்டிகளுக்கும் இயன்ற உதவி செய்யுங்கள். பத்திரகாளி வழிபாடு நன்மையளிக்கும்.

பரிகாரப்பாடல்!

பரமனை மதித்திடாப் பங்க யாசனன்ஒருதலை கிள்ளியே யொழிந்த வானவர்குருதியும் அகந்தையும் கொண்டு தண்டமுன் புரிதரு வடுகனைப் போற்றி செய்குவாம்.





No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer