Monday 16 June 2014

குரு பெயர்ச்சி பலன்கள் தனுசு:



குரு பெயர்ச்சி பலன்கள் (13.06.14 முதல் 04.07.15 வரை)தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம்1) 55/100 (பெண்களால் உயர்வு பணநிலையில் சரிவு!
குறிக்கோளுடன் உழைத்திடும் தனுசு ராசி அன்பர்களே!

இதுவரை குரு பகவான் ராசிக்கு 7-ம் இடத்தில் இருந்து நன்மை பல வழங்கிக் கொண்டிருந்தார். இதனால் சமூகத்தில் செல்வாக்கு உயர்ந்திருக்கும். நினைத்ததை நிறைவேற்றி வந்திருப்பீர்கள். புதிய வீடு, மனை, வாகனம் வாங்கி இருப்பீர்கள். தற்போது குரு 8-ம் இடமான கடகத்திற்கு அடியெடுத்து வைத்திருக்கிறார். இது சிறப்பான இடம் அல்ல. 8ல் குரு பொதுவாக மன வேதனையும், நிலையற்ற தன்மையைக் கொடுப்பார். பொருளாதார சரிவை ஏற்படுத்துவார். தேவையற்ற பகைமையை உருவாக்குவார் என்பது ஜோதிட வாக்கு. ஆனால் இதனைக் கண்டு யாரும் பயப்படத் தேவையில்லை. குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 7ம் பார்வை சாதகமாக அமைந்துள்ளது. இடையூறு வாழ்வில் குறுக்கிட்டாலும் குருவின் சுபமான பார்வை பலத்தால் விரைவில் நீங்கி விடும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. சீரான வசதி வாய்ப்பு இருக்கும். தம்பதியிடையே அன்பு நீடிக்கும். ஆனாலும் வீட்டில் அவ்வப்போது கருத்துவேறுபாடு ஏற்படுவதை தவிர்க்க முடியாது. உறவினர் வகையில் அனுகூலமான போக்கு காணப்படும். சுபவிஷயங்களில் தடைகள் குறுக்கிடலாம். அதே நேரம் தீவிர முயற்சியால் நடத்திட வாய்ப்புண்டு. 2014 நவம்பர்,டிசம்பர் மாதத்தில் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எடுத்த புதிய முயற்சி வெற்றி அடையும். பண வரவு அதிகமாகும். உறவினர் வருகையும், அதனால் நன்மையும் உண்டாகும். சமூகத்தில் மதிப்பு அதிகரிக்கும். பெண்களால் சுகம் கிடைக்கும். அவர்களால் பொன், பொருள் சேரும். விருந்து விழா என சென்று மகிழ்வீர்கள்.  உச்சத்தில் இருக்கும் குருவின் பார்வை 5,7,9 ஆகிய மூன்றும் முறையே 2,4,12 ஆகிய மூன்று இடங்களில் பதிகிறது. இதனால் பற்றாக்குறை நீங்கி பொருளாதார வளம் சேரும். குடும்பத்தில் அமைதி நிலைத்திருக்கும். வீடு, வாகன வகையில் நன்மை உண்டாகும். தாயின் உடல்நலம் சீராகும். அவரின் அன்பும், ஆசியும் பெற்று மகிழ்வீர்கள். தொலை தூர பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். ஆன்மிகத் தலங்களுக்குச் சுற்றுலா சென்று வருவீர்கள்.

தொழில், வியாபாரம்: தொழில், வியாபாரத்தில் டிசம்பர் வரை நல்ல வளர்ச்சியும், அதற்கேற்ப லாபமும் அதிகரிக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பெண்களை பங்குதாரராக கொண்ட தொழிலில் அதிக வருவாய் கிடைக்கும். அதன் பிறகு எதிலும் அலட்சியம் காட்டுவது கூடாது. கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். முயற்சிக்குத் தகுந்த பலன் கிடைக்கும். புதிய தொழில் முயற்சி இப்போதைக்கு தேவையில்லை. ஆனால், பண விஷயத்தில் சிரமம் உண்டாகாது. புதிதாகப் பழகும் நண்பர்களின் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. 2015 ஜனவரியில் வீண் செலவு அதிகமாகும்.

பணியாளர்கள்:  பணியில் சிறப்பான பலனை எதிர்பார்க்க முடியாது. சக ஊழியர்களால் வேலைப்பளு அதிகரிக்கும். சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை. எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காமல் போகலாம். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சலுகைப்பயன் பெற கடின முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும். எது எப்படியானாலும் குருவின் பார்வையால் தடைகளை முறியடிக்க வாய்ப்புண்டு. டிசம்பர் மாதத்தில் பணி, இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. சக பெண் பணியாளர்கள் உதவிகரமாக இருப்பர்.

பெண்கள்: குடும்ப வாழ்வில் ஓரளவு மகிழ்ச்சி உண்டாகும். குடும்பச் செலவுக்குத் தேவையான பணம் சீராக கிடைக்கும். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். உறவினர் வகையில் கருத்துவேறுபாடு ஏற்பட்டாலும் பாதிப்பு ஏதுமிருக்காது. வேலைக்கு செல்லும் பெண்கள் பணிச்சுமையால் சிரமப்பட நேரிடும். சகபணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கலைஞர்கள்: விடாமுயற்சி எடுத்தால் தான் புதிய ஒப்பந்தம் பெற முடியும். எதிர்பார்த்த வருமானம், பாராட்டு போன்றவை கிடைக்காமல் போகலாம். தொழில் ரீதியாக அவ்வப்போது நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ளலாம்.

அரசியல்வாதிகள்:  அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் பதவியை எதிர்பாராமல் பாடுபட வேண்டியதிருக்கும். தலைமையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடப்பது நன்மையளிக்கும். 2015 மார்ச்15க்குப் பிறகு பெண்கள் வகையில் சிரமத்தை சந்திக்க நேரலாம் கவனம்.

மாணவர்கள்: மாணவர்கள் இந்த கல்வியாண்டில் அக்கறையுடன் படிப்பது அவசியம். குருவின் பார்வையால் நன்மை உண்டாகும். முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது. போட்டிகளில் வெற்றிபெற அதிக முயற்சி தேவைப்படும். பெற்றோர் கருத்துக்கு மதிப்பளிப்பது நன்மை தரும்.

விவசாயிகள்:  உழைப்புக்கு ஏற்ற பலன் மட்டுமே கிடைக்கும். அதிக முதலீடு தேவைப்படும் விவசாயம் எதையும் செய்ய வேண்டாம். வம்பு, வழக்கில் சிக்காமல் இருப்பது நன்மையளிக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் வருமானம் கிடைக்கும்.

உடல் நலம்:  உடலில் அவ்வப்போது பாதிப்பு வரலாம். குறிப்பாக வயிறு பிரச்னை உருவாக இடமுண்டு. பயணத்தின் போது விழிப்புடன் இருப்பது நல்லது.

குரு அதிசார பலன்!

குருபகவான் டிசம்பர் 3-ந் தேதி அதிசாரம் பெற்று சிம்ம ராசிக்கு மாறுகிறார். 22-ந் தேதி வரை அதில் இருப்பார். இந்த அதிசாரம் காலத்தில் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிலும் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். தொழிலில் இருந்த பின்னடைவு மறையும்.

பரிகாரம்!

ராமர் சந்நிதியில் தீபமேற்றி வழிபடுங்கள். பத்திரகாளி அம்மனுக்கு எலுமிச்சை பழ விளக்கு ஏற்றுங்கள். வியாழக்கிழமை சிவன் கோவிலுக்கு சென்று வாருங்கள். தட்சிணா மூர்த்திக்கு மஞ்சள் நிற மலர் மாலை அணிவித்து வழிபாடு நடத்துங்கள். ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் கால பைரவருக்கு அர்ச்சனை செய்யுங்கள். டிச. 16 முதல் சனிபகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். வசதி படைத்தவர்கள் கருப்பு நிற பசுவை தானம் செய்யலாம்.

பரிகாரப்பாடல்!

கார கார கார கார காவல் ஊழி காவலன்போர போர போர போர போரில் நின்ற புண்ணியன்மார மார மார மார மரங்கள் ஏழும் எய்த ஸ்ரீராம ராம ராம ராம ராம என்னும் நாமமே.





No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer