Monday 16 June 2014

குரு பெயர்ச்சி பலன்கள் துலாம்



குரு பெயர்ச்சி பலன்கள் (13.06.14 முதல் 04.07.15 வரை)துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) 55/100 சொத்தும் வாங்கலாம் கடனும் கூடலாம்!
நட்புக்கு தோல் கொடுக்கும் துலாம்ராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு குரு பகவான் 9ம் இடத்தில் இருந்து பல நன்மைகளைச் செய்து கொண்டிருந்தார். குறிப்பாக எடுத்த முயற்சியில் வெற்றியைத் தந்திருப்பார். பொருளாதார வளம் சிறந்திருக்கும். சுப நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடந்திருக்கும். இப்போது குருபகவான் 10ம் இடத்திற்கு அடியெடுத்து வைத்திருக்கிறார். இது சுமாரான நிலையே. 10-ம் இட குருவை ஜோதிடத்தில், ஈசனார் ஒரு பத்திலே தலையோட்டிலே இரந்து உண்டதும் என்று கூறப்படுகிறது. அதாவது குரு 10-ல் இருக்கும்போது சிவன் பிச்சை எடுத்தார் என்பது பொருள். பொதுவாக பத்தில் இருக்கும் குரு பகவான் பொருள் நஷ்டத்தையும், மன சஞ்சலத்தையும் ஏற்படுத்துவார். சிலர் பணி,பதவியில் இடையூறு அதிகரிக்கலாம். ஆனால்,  இது பொதுவான பலன் என்பதால் நீங்கள் அஞ்சத் தேவையில்லை. குருபகவான் சாதகமற்று இருந்தாலும் அவரது 5ம் பார்வை சாதகமாக அமைந்துள்ளது. அதன்மூலம் எந்த பிரச்னையையும் எதிர்கொண்டு சமாளித்து வெற்றி காண்பீர்கள். அதோடு மற்ற கிரகங்களின் நிலையை கொண்டும் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். மேலும் உங்கள் ஜாதகத்தில் தசா பலன்கள் சிறப்பாக இருந்தால் நன்மை நடக்க வாய்ப்புண்டு. கேது சாதகமாக இருப்பதால் பொருளாதார வளம் சிறக்கும். அதே சமயம், வீண் செலவைத் தவிர்ப்பது அவசியம். முயற்சியில் தடை ஏற்படலாம். பேச்சில் நிதானத்தைக் கடைபிடிக்கவும். வீண்விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.குடும்பத் தேவை ஓரளவு பூர்த்தியாகும்.தம்பதியிடையே கருத்து வேறுபாடு உருவாகலாம். விட்டுக் கொடுத்து போகவும். உறவினர் வகையிலும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு விலகும். புதிய சொத்து வாங்கும் யோகம் வந்தாலும், அதற்காக கடன் வாங்குவதை தவிர்க்க முடியாது. திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் தாமதம் ஏற்பட்டாலும் நன்மையாகவே முடியும். 2014 நவம்பர் மாதத்தில் வீடு மனை வாங்க யோகம் தானாகவே கூடி வரும். சுக்கிரன் மூலம் பெண்களால் நற்சுகம் கிடைக்கும். அவர்களால் பொன், பொருள் சேரவும் வாய்ப்புண்டு. விருந்து விழா என அடிக்கடி சென்று மகிழ்வீர்கள். 2015 மார்ச்,ஏப்ரல் மாதங்களில் எடுத்த புதுமுயற்சி வெற்றி பெறும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். குரு பத்தாமிடத்தில் சாதகமற்று இருந்தாலும், அவருடைய 5,7,9ம் பார்வைகள் முறையே 2,4,6 ஆகிய ராசிகளில் பதிகிறது. இதன் மூலம் அவ்வப்போது நன்மையைப் பெற்று மகிழ்வீர்கள். இதனால், குடும்ப வாழ்வில் சிரமம் குறுக்கிட்டாலும், அதற்கான தீர்வும் உடனடியாக கிடைக்கும். தாயின் உடல்நலம் சிறப்பாக இருக்கும். அவரின் அன்பும், ஆசியும் தக்க சமயத்தில் கிடைக்கும். பகைவர் ஸ்தானமான ஆறாமிடத்தில் குருவின் 9ம் பார்வை விழுவதால், எதிரிகள் வியக்கும் விதத்தில் செயல்படுவீர்கள்.

தொழில், வியாபாரம்: தொழில், வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். தொழிலில் புதிய முயற்சியை இப்போதைக்கு தொடங்குவது நல்லதல்ல. இருப்பதை சரிவர நடத்தினால் போதும். யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். அரசாங்க வகையில் எந்த நன்மையும் எதிர்பார்க்க முடியாது. எது எப்படியானாலும் குருவின் பார்வை பலத்தால் பிரச்னை நீங்கும். 2014 நவம்பர் மாதத்தில் அரசு வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள்.

பணியாளர்கள்:  பணியாளர்கள் சீரான பலனை எதிர்பார்க்கலாம். கடந்த காலம் போல நற்பலனை தற்போது எதிர்பார்க்க முடியாது. வேலையில் பளு அதிகரித்தாலும் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். வழக்கமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை. அதிகாரிகளின் குறிப்பு அறிந்து நடப்பது நல்லது. சிலர் மன சஞ்சலத்தால் வேலையில் ஆர்வமில்லாமல் இருக்க நேரிடும். 2015 மார்ச், ஏப்ரல் மாதத்தில் பணியில் பணிஉயர்வு, விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். போலீஸ்,ராணுவம் போன்ற பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் பணியில் மேன்மை அடைவர்.

பெண்கள்: பெண்கள் பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமிதம் கொள்வர். கணவரின் பேச்சுக்கு மதிப்பளிப்பது நன்மை தரும். உறவினர்களிடமும் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வீட்டுச்செலவுக்குத் தேவையான பணம் சீராக கிடைக்கும்.

கலைஞர்கள்:  சற்று முயற்சி எடுத்தால் மட்டுமே புதிய ஒப்பந்தம் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த புகழ், பாராட்டுகள் கிடைக்காமல் போகலாம்.

அரசியல்வாதிகள்: அரசியல்வாதிகள், பொது நல சேவகர்கள் பிரதிபலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியதிருக்கும்.2014 நவம்பர் மாதத்தில் எதிர்பார்ப்பு நிறைவேறும். மதிப்பு, மரியாதை கூடும். அரசிடம் இருந்து விருது, பட்டம் போன்றவை கிடைக்கும்.

மாணவர்கள்:  கடின முயற்சி எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் ஓரளவு கிடைக்கும். ஆசிரியர் வழிகாட்டுதலை ஏற்று நடப்பது நன்மை தரும்.

விவசாயிகள்:  முன்னேற்றம் வாழ்வில் காணலாம். அதிக செலவு பிடிக்கும் பயிர் வகைகளைத் தவிர்ப்பது நல்லது. 2014 செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதத்தில் நிலக்கடலை மற்றும் கிழங்கு பயிர்கள் நல்ல மகசூலைத் தரும். இந்தக் காலக்
கட்டத்தில் புதிய நிலம் வாங்கவும் வாய்ப்புண்டு. வழக்கு விவகாரத்தில் சாதகமான சூழ்நிலை இருக்காது.

உடல்நலம்: ஆரோக்கியம் மேம்படும். உடல் நலன் குறித்த விஷயங்களில் அக்கறை உண்டாகும். 

குரு அதிசாரப் பலன்!

குருபகவான் டிசம்பர் 3-ந் தேதி அதிசாரம் பெற்று சிம்ம ராசிக்கு மாறுகிறார். 22-ந் தேதி வரைஅதில் இருப்பார். இந்த அதிசாரம் காலத்தில் குருவால் பொருளாதார வளம் மேம்படும். உத்தியோகம் சிறப்படையும். புதிய பதவி கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். முயற்சியில் வெற்றி உண்டாகும்.

பரிகாரம்!

சனியன்று சனி பகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தி வணங்கி வாருங்கள். சந்தர்ப்பம் கிடைக்கும் போது ராகுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். விநாயகரையும். ஆஞ்சநேயரையும் வழிபட்டு  வாருங்கள். வியாழக்கிழமை சிவன் கோவிலுக்கும் சென்று வாருங்கள். தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை படைத்து வணங்குங்கள். ஏழை சிறுவர்களுக்கு படிக்கவும் உதவி செய்யுங்கள்.

பரிகாரப்பாடல்!

புத்தியும் பலமும் தூயபுகழோடு துணிவும் நெஞ்சில்பத்தியும் அச்சமிலாப் பணிவும் நோயில்லா வாழ்வும்உத்தம ஞானச் சொல்லின் ஆற்றலும் இம்மை வாழ்வில்அத்தனை பொருளும் சேரும் அனுமனை நினைப்பவர்க்கே.


No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer